இரட்டை இலை -அதிமுகவின் எந்த கோஷ்டிக்காவது கிடைக்குமா?முடங்குமா? உச்சநீதிமன்றத்தில் நாளை க்ளைமாக்ஸ்!
அதிமுகவின் இரட்டை இலை சின்னம், இபிஎஸ் இடைக்கால பொதுச்செயலாளர் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை நடைபெறும்.
டெல்லி: அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும்? என்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் நாளை முக்கிய உத்தரவை பிறப்பிக்க உள்ளது. ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக மூத்த காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். திமுக கூட்டணி கட்சிகள் ஒட்டுமொத்தமாக தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.
அதிமுகவைப் பொறுத்தவரையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி தேர்தலில் போட்டியிடுவது என்பதில் உறுதியாக உள்ளது. அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணி, பாஜக போட்டியிட்டால் ஆதரவு தருவது அல்லது வேட்பாளரை அறிவிப்பது என்கிற நிலைப்பாட்டை எடுத்துள்ளது. பாஜகவோ, தனித்துப் போட்டியா? இல்லை அதிமுகவின் அணிகளில் ஒன்றுக்கு ஆதரவா? என்கிற முடிவை அறிவிக்காமல் இருக்கிறது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பல கட்சிகள், பாஜக போட்டியிட்டால்தான் ஆதரவு என்கின்றன. மேலும் டிடிவி தினகரனின் அமமுக, சீமானின் நாம் தமிழர் கட்சி, விஜயகாந்தின் தேமுதிக ஆகியவையும் வேட்பாளர்களை களத்தில் நிறுத்தி உள்ளன.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் அதிமுக எடப்பாடி பழனிசாமி தரப்பு ஒரு முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. அதில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திடுவதை தேர்தல் ஆணையம் ஏற்க மறுக்கிறது. அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி; ஆகையால் அவரை அங்கீகரித்தும் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியும் உத்தரவிட வேண்டும் என்று இந்த முறையீட்டு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே உண்மையான அதிமுக யார்? என்பது தொடர்பான அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை முடிவடைந்து உச்சநீதிமன்றத்தில் தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு பிப்ரவரி 7-ந் தேதிக்குள் வெளியாகும் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்வைத்து எடப்பாடி பழனிசாமி தரப்பு முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. இதனை ஏற்ற உச்சநீதிமன்றம், நாளை இம்மனு மீது விசாரணை நடத்த பட்டியலில் இணைத்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் நாளை நடைபெறும் வாதங்களும் பிறப்பிக்கப்படும் உத்தரவும் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தரப்பானது எப்படியாவது இரட்டை இலை சின்னத்தையும் இடைக்கால பொதுச்செயலாளர் பதவிக்கான அங்கீகாரத்தையும் பெறுவதற்கான வாதங்களை முன்வைக்கும். அதேநேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பானது, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகவில்லை; ஆகையால் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்று வாதிட உள்ளது. இந்த இருதரப்பு வாதங்களுக்கு பின் உச்சநீதிமன்றம் உத்தரவை பிறப்பிக்கும். அந்த உத்தரவு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
உச்சநீதிமன்றமானது ஓபிஎஸ் தரப்புக்கு சாதகமாக தீர்ப்பு கொடுத்தால் நடிகர் பாக்யராஜை இரட்டை இலை சின்னத்தில் நிறுத்தும்; இபிஎஸ் தரப்புக்கு சாதகமாக தீர்ப்பு கொடுத்தால் கேவி ராமலிங்கம் அல்லது தென்னரசு ஆகியோரில் ஒருவர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவர். இரட்டை இலை சின்னத்தை உச்சநீதிமன்றம் முடக்கினால் சுயேட்சை சின்னத்தில் இபிஎஸ் அணி போட்டியிடும். ஓபிஎஸ் அணி இறுதி நேரத்தில் முடிவை மாற்றிக் கொள்ளலாம். அதேபோல் பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் தங்களது முடிவை இறுதிப்படுத்தி அறிவிக்கும் என தெரிகிறது.