தலைமறைவு குற்றவாளி.. தீர்ப்பை ரத்து செய்யக் கோரிய விஜய் மல்லையாவின் மனு.. சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி!
டெல்லி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என 2017ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தொழிலதிபர் விஜய் மல்லையா அளித்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. நீதிமன்றத்தின் உத்தரவை மீறி தனது குழந்தைகளுக்கு 40 மில்லியன் டாலர்களை மாற்றியமைத்ததால் மல்லையா மீது அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்தியாவில் உள்ள பொதுதுறை வங்கிகளில் சுமார் ரூ.9 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் வாங்கிவிட்டு கட்டாமல் மோசடியில் ஈடுபட்டு லண்டனுக்கு தப்பி சென்றவர் தொழிலதிபர் விஜய் மல்லையா. இவர் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் பல்வேறு வழக்குகள் பதிவு செய்து அவரை நாடு கடத்த முயற்சி செய்து வருகிறார்கள். இங்கிலாந்தில் கைது செய்யப்பட்ட அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் அவர் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தை நாடி உள்ளார்.

இதற்கிடையே இங்கிலாந்தைச் சேர்ந்த டால்ஜியோ நிறுவனம் மூலம் தன்னுடைய மகன் சித்தார்த், மகள்கள் தனியா, லியானா ஆகியோருக்கு 40 மில்லியன் அமெரிக்க டாலர்களை மாற்றியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இது கர்நாடக உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மீறிய செயல் என்பதால் விஜய் மல்லையா மீது எஸ்.பி.ஐ. தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்பு உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கில் விஜய் மல்லையா குற்றவாளி என உறுதி செய்யப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து 2017ல் விஜய் மல்லையா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.. இந்த மனுவை நீதிபதிகள் யு.யு.லலித் மற்றும் அசோக் பூஷண் ஆகியோர் அமர்வு விசாரித்தது. அப்போது, விஜய் மல்லையா தாக்கல் செய்த மறு ஆய்வு மனு கடந்த 3 ஆண்டுகளாக ஏன் பட்டியலிடப்படவில்லை என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் இந்த வழக்கு தொடர்பான ஒரு ஆவணம் பதிவில் இல்லை என்று கூறிய நீதிபதிகள், வழக்கை தள்ளிவைத்தனர்.
Recommended Video
அதன்பிறகு மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த போது அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்திருந்தனர். இந்நிலையில் இன்று தீர்ப்பு அளித்த நீதிபதிகள், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 2017ம் ஆண்டு விஜய் மல்லையா தலைமறைவு குற்றவாளி என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு மீண்டும் உறுதி செய்துள்ளனர். அத்துடன் தொழிலதிபர் விஜய் மல்லையா, நீதிமன்றத்தின் உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்த மனுவையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர்..












Click it and Unblock the Notifications