பெரிய, பெரிய கட்டம் போட்ட லுங்கி.. தும்பை பூ கலர் சட்டை.. அட, இது தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின்!
டெல்லி: பெரிய, பெரிய, கட்டம் போட்ட லுங்கி, பனியன் வெளியே தெரியும் அளவுக்கு தும்பைப் பூ போல ஒரு வெள்ளை சட்டை, நெஞ்சம் நிமிர்த்தியபடி டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் ஸ்டாலின் நிற்கும் படம்தான் இப்போது சமூக வலைத்தளங்கள் முழுக்க வைரலாக சுற்றி வருகிறது.
Recommended Video
பிரதமர் மோடியை சந்தித்து தமிழக வளர்ச்சி திட்டங்கள் குறித்த கோரிக்கை மனுக்களை வழங்க டெல்லி சென்றுள்ளார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்.
வருகிறது கொரோனா 3ம் அலை.. இன்னும் 2-4 வாரங்களில் மகாராஷ்டிராவில் தொடங்கும்.. டாஸ்க் போர்ஸ் வார்னிங்!
இன்று அவர் காங்கிரஸ் சீனியர் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோரைச் சந்தித்து பேச உள்ளார்.
லுங்கி, சட்டை
இதையடுத்து நேற்று இரவு ஸ்டாலின் தமிழ்நாடு இல்லத்தில் தங்கினார். தமிழ்நாடு இல்லத்தில், அவர் இரவு தூங்கும்முன்பாக லுங்கி கட்டிக் கொண்டு பேசிக் கொண்டிருந்தார். அந்த படம்தான் எப்படியோ லீக்காகி இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக சுற்றி வருகிறது. பெரிய கட்டம் போட்ட அந்த லுங்கி தமிழகத்தில் வெகு ஜனங்களால் பயன்படுத்தப்படும் ஒரு மாடல். மேலே பனியன் தெரியும் அளவுக்கு தும்பை்ப பூ நிறத்தில் வெள்ளை சட்டை அணிந்துள்ளார் ஸ்டாலின். நெஞ்சம் நிமிர்த்தியபடி ஸ்டாலின் நிற்கும் இந்த படத்தை பார்த்தும் நெட்டிசன்கள், குறிப்பாக, திமுகவினர் ஆரவாரம் செய்வதை பார்க்க முடிந்தது.
லுங்கி பூர்வீகம் எது
தமிழர்களின் உடை பழக்கமாக மாறிப்போய் விட்டது லுங்கி. ஆனால் இதை தமிழர்கள் கண்டுபிடிக்கவில்லை. 6வது முதல் 10வது நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் சோழர்கள் ஆட்சியின்போது, தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து வந்த வணிகர்கள் மூலமாக இந்த உடை தமிழகத்திற்குள் காலடி எடுத்து வைத்தது. அன்று முதல் இன்றுவரை தமிழர்கள் வாழ்க்கை முறையில் லுங்கி ஒரு அங்கமாகிவிட்டது. இதுதான் லுங்கி தமிழ்நாட்டிற்குள் வந்த பூர்வீகம்.
தென் தமிழக ஆடை
நெல்லை, தூத்துக்குடி போன்ற தென் மாவட்டங்களில், இதை சாரம் என்று அழைப்பார்கள். அங்கு லுங்கி கட்டிக் கொள்வது சாதாரண விஷயம். பர்முடாக்கள் புகழ் பெறும் முன்பாக, 13 வயதுக்கு மேற்பட்ட இளம் பருவம் தொட்டு 100 வயது முதியவர் வரை லுங்கிதான் தென் தமிழகத்தின் தினசரி ஆடை. லுங்கி டான்ஸ் என்ற பெயரில் சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் ஷாருக்கான் போட்ட ஆட்டம் இந்தியா முழுக்க தமிழகம் மற்றும் லுங்கியின் பிணைப்பை கொண்டு சென்று சேர்த்துவிட்டது.
இரு தலைவர்கள்
தமிழக அரசியல்வாதிகளில் இதுவரை லுங்கி என்றாலே 2 பேர் நியாபகம் வருவார்கள். ஒருவர், பெரியார். இன்னொருவர் கருணாநிதி. அதிலும் பெரியார் ஒரு மைக் முன்பாக லுங்கி கட்டியபடி அமர்ந்திருக்கும் படமும், நாளிதழ்வாசித்தபடி கருணாநிதி அமர்ந்திருந்த படங்களும் வெகு பேமஸ். ஜெயலலிதா ஆட்சி காலத்தில் நள்ளிரவில் கருணாநிதி கைது செய்யப்பட்டு அழைத்துச் சென்றபோதுகூட அவர் லுங்கியில்தான் இருந்தார்.
சாமானியர்களுடன் பிணைப்பு
சாமானியர்களின் ஆடை என்பதால், அதை ஒரு பிரபல அரசியல் பிரமுகர் உடுத்தும்போது இயல்பாகவே ஒரு பிணைப்பு ஏற்பட்டு விடுகிறது. இப்போது ஸ்டாலின் லுங்கியோடு நிற்கும் புகைப்படமும், பெரியார், கருணாநிதி வழி வந்தது என சொல்கிறார்கள் நெட்டிசன்கள்.