பங்குனி அமாவாசையில் பார்லிமென்ட் போன முதல்வர் ஸ்டாலின்... உற்சாக வரவேற்பு அளித்த எம்.பிக்கள்
டெல்லியில் நாடாளுமன்றத்திற்கு சென்ற முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு எம்.பிக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
டெல்லி: பங்குனி அமாவாசை தினமான இன்று நாடாளுமன்ற வளாகத்திற்குள் அடிஎடுத்து வைத்துள்ளார் தமிழக முதல்வர் முதல்வர் மு.க ஸ்டாலின் அங்கு அவருக்கு திமுக எம்பிக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முதல்வர் ஸ்டாலின் நான்கு நாள் பயணமாக டெல்லிக்கு சென்றுள்ளார். டெல்லியில் திமுக அலுவலகமான அறிவாலயம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா ஏப்ரல் 2ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்த திமுக திட்டமிட்டுள்ளது. அனைத்து கட்சித்தலைவர்களையும் அழைக்க திட்டமிட்டுள்ளார் முதல்வர் மு.க ஸ்டாலின்.

இன்றைய தினம் பிற்பகலுக்கு மேல் அமாவாசை தொடங்கியுள்ளது. காலையில் இருந்தே பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றாலும் பிற்பகலில் அமாவாசை திதி தொடங்கிய பின்னரே நாடாளுமன்றத்திற்கு வந்தார் மு.க ஸ்டாலின்.
பிரதமரை சந்திக்கும் முன்பாக நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை சந்தித்து பேசினார்.
ஏப்ரல் 2ஆம் தேதி டெல்லியில் அறிவாலயத்தை முதல்வர் ஸ்டாலின் திறக்கவுள்ளார். அவ்வளாகத்தில் அண்ணா, கலைஞர் கருணாநிதி சிலைகளையும் ஸ்டாலின் திறக்கவுள்ளார்.
இந்த நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து அறிவாலயத் திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார் முதல்வர் மு.க ஸ்டாலின். அப்போது தமிழக அரசின் பல்வேறு கோரிக்கைகளை அடங்கிய மனுவையும் பிரதமரிடம் அளித்துள்ளார்.
நீட் தேர்வு விலக்கு மசோதா, மீனவர்கள் பிரச்சினை, மேகேதாட்டு விவகாரம், முல்லைப் பெரியாறு பிரச்சினை உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து பிரமதர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்வார் என்றும், மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என முதல்வர் பிரதமரிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்திற்கு வந்த முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு திமுக எம்.பிக்கள் அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழக எம்.பிக்கள் மட்டுமல்லாது பிற மாநில எம்பிக்களும் ஆர்வத்துடன் வந்து அவருடன் பேசியதோடு புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர்.












Click it and Unblock the Notifications