தமிழக ரயில்வே திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ரூ.6,362 கோடி நிதி: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
டெல்லி: தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் இந்த ஆண்டு 6,362 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2009 முதல் 2014 வரையிலான ஐந்தாண்டுகளில் ஒதுக்கப்பட்ட 879 கோடி ரூபாயைவிட 7 மடங்கு அதிகம் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை மறுத்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்தார்,.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: 2014 முதல் 2024 வரையிலான 10 ஆண்டுகளில் தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட தமிழ்நாட்டில், 1,302 கிமீ தொலைவுக்கு புதிய ரயில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டிருப்பதுடன் 2,152 கிமீ தொலைவுக்கான ரயில் வழித்தடம் மின்மயமாக்கப்பட்டுள்ளது.

687 ரயில்வே மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது ரூ.33,467 கோடி மதிப்பீட்டில் 2,587 கிமீ தொலைவுக்கு புதிய பாதை அமைப்பதற்கான 22 திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னை எழும்பூர், சென்னை கடற்கரை, எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல், சென்னை பூங்கா, அம்பத்தூர், ஆவடி, பெரம்பூர், மாம்பலம், கிண்டி, தாம்பரம், குரோம்பேட்டை, அரக்கோணம், அரியலூர், கோவை சந்திப்பு, கோயம்புத்தூர் வடக்கு, மதுரை, ஜோலார்பேட்டை, ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம், நாகர்கோவில், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்செந்தூர், திருப்பூர். திருவண்ணாமலை, வேலூர், சேலம் உள்ளிட்ட தமிழ்நாட்டில் உள்ள 77 ரயில் நிலையங்கள் அமிர்த ரயில் நிலையங்களாக மேம்படுத்தப்பட உள்ளன.

இதே போன்று தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட கேரள மாநில ரயில்வே திட்டங்களுக்கு இந்த ஆண்டு 3,011 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 13 கிமீ தொலைவுக்கு புதிய தண்டவாளங்கள் அமைக்கப்பட்டிருப்பதுடன் 49 கிமீ தொலைவுள்ள ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டதன் மூலம் கேரளாவில் உள்ள ரயில் பாதைகள் 100% மின்மயமாக்கப்பட்டுள்ளன. அம்மாநிலத்தில், 2014 முதல் 106 ரயில்வே மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டிருப்பதுடன், திருவனந்தபுரம், எர்ணாகுளம், கொல்லம், குருவாயூர், திருச்சூர், புனலூர், சாலக்குடி, கோழிக்கோடு, ஆலப்புழா உள்ளிட்ட 35 ரயில் நிலையங்கள் அமிர்த ரயில் நிலையங்களாக மேம்படுத்தப்படும். இவ்வாறு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications