"டாக்சி ஆம்புலன்ஸ்" சேவை.. அருமையான திட்டம்.. தமிழக அரசை பாராட்டிய மத்திய சுகாதாரத்துறை..!
டாக்சி ஆம்புலன்ஸ் சேவைக்கு மத்திய சுகாதாரத்துறை பாராட்டுக்களை தெரிவித்துள்ளது
டெல்லி: தமிழகத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் "டாக்சி ஆம்புலன்ஸ்" சேவைக்கு மத்திய சுகாதாரத்துறை தன்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.
இந்தியாவையே கலங்க வைத்து வரும் கொரோனா தாக்கம், தமிழகத்தையும் ஆட்டி படைத்து வருகிறது.. இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில், தமிழகத்தில் முழு லாக்டவுன் போடப்பட்டுள்ளது.. எனினும் தொற்றை கட்டுப்படுத்த முடியவில்லை.. ஆஸ்பத்திரிகள் நிறைந்து வழிகின்றன..
எண்ணிக்கை
தினம்தோறும் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாவதால், இவர்கள் உரிய நேரத்தில் ஆஸ்பத்திரிகளுக்கு செல்ல ஆம்புலன்ஸ்களும் கிடைப்பதில்லை. ஆம்புலன்ஸ் சேவைகள் மருத்துவ வசதிகளில் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்த சிக்கலை போக்குவதற்காக தமிழக அரசு பல்வேறு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஆம்புலன்ஸ்
அதில் ஒன்றாக ஆம்புலன்ஸ்க்கு மாற்றாக டாக்சிகளை ஆம்புலன்ஸ் ஆக மாற்றி, தற்பொழுது "டாக்ஸி ஆம்புலன்ஸ்" கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், எளிதான முறையில், ஆஸ்பத்திரிக்கு உரிய நேரத்தில் நோயாளிகளால் சென்றடைய முடிகிறது.. இப்படி ஒரு முயற்சிக்குதான் மத்திய சுகாதாரத்துறை, தமிழக அரசை பாராட்டி உள்ளது..
பாராட்டு
கொரோனா தொற்று குறித்து ஆட்சியர்களுடன் பிரதமர் மோடி அவர்கள் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தியிருந்தார்.. அப்போது தமிழகத்தின் பிரதிநிதிகள் டாக்ஸி ஆம்புலன்ஸ் குறித்தும் தமிழகத்தில் அவை பயன்படுத்துவது குறித்தும் எடுத்துரைத்துள்ளனர்... இந்த டாக்ஸி ஆம்புலன்ஸ் குறித்து பட்டியலிட்டுள்ள சுகாதாரத்துறை, தமிழகத்தில் பயன்படுத்தப்பட்டு வரக்கூடிய டாக்சி ஆம்புலன்ஸ் சேவைக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.
ரேபரேலி
இதுபோலவே உத்தரபிரதேசத்தையும் பாராட்டி உள்ளது.. அதற்கு காரணம், ரேபரேலியில், வீடு வீடாக சென்று கொரோனா டெஸ்ட் செய்து வந்ததால், இப்போது அங்கே தொற்று பரவல் கடுமையாக சரிந்துள்ளதாம்.. அதேபோல, பீகாரில் ஹிட் கோவிட் என்ற ஒரு ஸ்பெஷல் "ஆப்" மூலம் வீட்டு தனிமையில் இருப்பவர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள்..
சுகாதாரத்துறை
இப்படி ஒரு மாநில அரசும் ஒவ்வொரு சிறப்பு நடவடிக்கைளை முன்னெடுத்து வருவதை முத்திய அரசு பாராட்டி உள்ளது.. அத்துடன், இதுபோன்ற சிறப்பான நடவடிக்கைகளை மாநில அரசுகள் ஒன்றுக்கொன்று பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.