'டீ மாஸ்டர் டூ காவலாளி' மோடி சார்...ஸாரி சௌகிதார் மோடி சார், பிரமாதம்...
டெல்லி: 2014ம் ஆண்டு தேர்தலின் போது எளிய மக்களை கவரும் வகையில் டீ மாஸ்டராக அடையாளப்படுத்திய மோடி, தற்போது 2019ம் ஆண்டு தேர்தலில் காவலாளியாக அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார்.
நாம் என்ன செய்தாலும் நம்மை பற்றி மக்கள் எப்போதும் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதில் அரசியல் தலைவர்கள் அதிகம் ஆர்வம் கொண்டவர்கள். அதிலும் பிரதமர் நரேந்திர மோடி, மக்களை தனது செயல்களால் அதிகம் ஈர்க்கக்கூடியவர், அந்த வகையில் தன்னை பற்றியே எப்போதும் மோடி பேச வைப்பார்.
அந்த வகையில் தனது பெயருக்கு முன்பு டுவிட்டரில் காவலாளி, அதாங்க, சௌகிதார் என மாற்றிக்கொண்டுள்ளார்.

டீ விற்பளையாளர்
பிரதமர் நரேந்திர மோடி சிறுவயதில் தன் தந்தையின் டீக்கடையில் பணியாற்றிய போது குஜராத் மாநிலம் வத்நகர் ரயில் நிலையத்தில் தான் டீ விற்றதாக 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் கூறினார். இதனை கேட்ட மக்கள் பிரதமர் மோடி டீ விற்று பிரதமர் ஆனவரா என உள்ளம் நெகிழ்ந்து போனார்கள்.

மோடி டீக்கடை
பிரதமர் மோடி டீக்கடை வைத்து பெரிய தலைவராக உயர்ந்தவர் என்பதை விளம்பரப்படுத்தும் வகையில் அப்போது நமோ டீக்கடைகள் நாடு முழுவதும் பாஜகவினரால் திறக்கப்பட்டது. பல டீக்கடைகளுக்கு நமோ டீக்கடை என பெயர் மாற்றப்பட்டது. டீக்கடைக்கார்கள் பலரும் பாரப்பா நம்மள மாதிரி ஒருத்தர்தான் பிரதமர் ஆயிருக்காரு என உள்ளம் மகிழ்ந்தார்கள். இதனால் பிரதமர் மோடி கடந்த மக்களவை தேர்தலில் அமோக வெற்றி பெற்ற மோடி அறுதி பெரும்பான்மையுடன் பிரதமராக பொறுப்பேற்றார்.

ஏழை மகன் மோடி
பிரதமர் நரேந்திர மோடி எப்போதெல்லாம் எதிர்க்கட்சிகள் ஏகவசனத்தில் திட்டி தன்னை காயப்படுத்தினாலும் தன்னை ஏழைத்தாயின் மகன் என்று உருகினார். ஏழைத்தாயின் மகன் பிரதமர் ஆனதை சிலரால் ஏற்க முடியவில்லை என்று மோடி கூறிருந்ததை நாம் பார்த்திருப்போம்.

காவலாளி மோடி
இப்போது மக்களவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, திடீரென தனது பெயருக்கு முன்னால் சௌகிதார் மோடி என சேர்த்துக்கொண்டார். அதாவது இன்று முதல் நான் மக்களின் பாதுகாவலன் அதாவது காவல்காரன் என கூறிக்கொண்டார். இதனை பார்த்து பாஜகவினர் மோடியைப் போல் சௌகிதார் என்ற பெயரை டுவிட்டரில் சேர்த்துக்கொண்டுள்ளனர்.

பலே மோடி
இதன் தொடர்ச்சியாக இன்றைக்கு மோடி பல ஆயிரம் காவலாளிகளுடன் பேசி, அவர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார்.. மக்களுக்காக என்ன சாதனைகள் செய்தோம் என்பதை தாண்டி, நாம் மக்களை கவர என்ன செய்தோம் என்பதை வெளிகாட்டுவதில் தான் மோடியின் வெற்றி அடங்கி இருக்கிறது. பிரதமர் மோடி எப்போதும் சும்மா இருந்து இல்லை. வெளிநாட்டு பயணங்களோ, உள்நாட்டு பயணங்களோ இல்லாமல் போனால் யாரோ ஒரு ஏழைத்தாயின் மகன் தனக்கு அனுப்பிய கடிதத்தை ரேடியோவில் வாசிப்பார் . இதன் மூலம் அப்பகுதி மக்களிடம் தன்னை பற்றி கொண்டு சேர்ப்பார். இதேபோல் ஏழைகளுக்கு கேஸ் சிலிண்டர் வழங்கிய மோடி, அவர்களுடன் ஒவ்வொரு முறையும்
கலந்துரையாடுவார். இதேபோல் கிடைக்கும் வாய்ப்பில் இல்லாமல் ஏழைகளை தேடி சென்று பேசுவார். ஒட்டுமொத்ததில் பிரதமர் மோடி ஏழை மக்களை கவருவதற்காக எதையாவது செய்து கொண்டுதான் இருப்பார். இதுதான் மோடியின் சாமர்த்தியம்.












Click it and Unblock the Notifications