கட்சிய விட்டு நீக்கிட்டாங்க! பதவி இல்ல..உச்சநீதிமன்றத்தில் முறையிட்ட ஓபிஎஸ்! நீதிபதிகள் சொன்ன பதில்!
டெல்லி : அதிமுக பொதுக்குழுவுக்கு அனுமதி வழங்கிய உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடைக்கோரிய மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என ஓ.பி.எஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டதோடு, அதனை திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அடுத்த வாரம் விசாரணை நடைபெறும், உரிய தேதியை சொல்லமுடியாது என தலைமை நீதிபதி கூறியுள்ளார்.
கடந்த ஜூலை 11ஆம் தேதி சென்னை மாநகரத்தில் அதிமுகவின் இந்த ஆண்டுக்கான இரண்டாவது பொதுக்குழு கூட்டம் தலைமை நிலைய செயலாளராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. அதில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொதுக்குழு உறுப்பினர்களால் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதே பொதுக்குழுவில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாளர் பதவி வகித்து வந்த ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதோடு, அவரது ஆதரவாளர்களான வைத்தியலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டோரும் நீக்கப்பட்டனர்.

அதிமுக பொது குழு
முன்னதாக அதிமுக பொது குழு கூட்டத்தை அனுமதிக்க கூடாது என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த பொதுக்குழு கூட்டம் தொடங்குவதற்கு சில மணி துளிகளுக்கு முன்னதாக சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பினை வழங்கியது. அந்த தீர்ப்பில் கட்சியின் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்பது பெரும்பான்மை உறுப்பினர்களின் கோரிக்கை அந்த வகையில் பொதுக்குழு நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என ஜூன் 23ஆம் தேதியே கட்சி நிர்வாகிகள் அறிவித்துள்ளனர் அதன்படி கட்சி விதிகளுக்கு உட்பட்டு பொதுக்குழு கூட்டத்தை நடத்தலாம் என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

ஓபிஎஸ் பதவி நீக்கம்
இதையடுத்து பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில் பல்வேறு அதிரடி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இடைக்கால பொதுச் செயலாளர், ஓபிஎஸ் பதவி நீக்கம், துணைப் பொதுச் செயலாளர் பதவி உருவாக்கம், நான்கு மாதங்களில் பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதற்கு அடுத்த நாட்களில் இடைக்கால பொது செயலாளராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ் தரப்புக்கு எதிராக பல்வேறு அஸ்திரங்களை ஏவினார். ஆதரவாளர்கள் அடுத்தடுத்து நீக்கம், தனது தரவாளர்களுக்கு புதிய பதவி என அதிரடி காட்டினார் எடப்பாடி பழனிச்சாமி.

உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
இந்த நிலையில் தான் உயர் நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கடந்த 16ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஒருங்கிணைப்பாளர் கையொப்பம் இல்லாமலும் உரிய கால இடைவெளி இல்லாமலும் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் 15 நாட்கள் இடைவெளி உடன் அழைப்பு கடிதம் இல்லாமல் பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளது எனவும் எனவே சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து செய்ய வேண்டும் ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவை சட்டவிரோத பொது குழு என அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
Recommended Video

திங்கட்கிழமை விசாரணை
இந்நிலையில் ஓ.பி.எஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்ட மனுவை திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. அதில், ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது, கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளேன் எனவும்,அதிமுக தரப்பில் இருந்த ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். எனவே முக்கியத்துவம் வாய்ந்த இந்த பிரச்சனைகளை கருத்தில் கொண்டு வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் ஓ.பி.எஸ் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை கேட்ட தலைமை நீதிபதி, அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு அடுத்த வாரம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும், அதே நேரத்தில் உரிய தேதியை சொல்லமுடியாது தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications