பிரிட்டன் பார்லியில் மோடியை வம்புக்கு இழுத்த பெண் எம்பி! சீண்டவேண்டாம் என்கிறார் சட்ட அமைச்சர்
டெல்லி: டெல்லியில் நடந்த ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்து இந்தியா வந்த போரிஸ் ஜான்சன் பிரதமர் நரேந்திர மோடியிடம் கேட்டாரா? எனக்கூறிய பிரிட்டன் பெண் எம்பி நாடியா விட்டோம் அந்நாட்டு பார்லிமெண்டில் கேள்வி எழுப்பினர். இதற்கு ‛எதார்த்தம் அறியாத பெண் எம்பி' என மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ பதிலடி கொடுத்துள்ளார்.
டெல்லி ஜஹாங்கிர்புரி பகுதியில் அனுமன் ஜெயந்தி ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தின்போது வன்முறை வெடித்தது. வாகனங்கள் சூறையாடப்பட்டன.
இதுதொடர்பாக டெல்லி போலீசார் தீவிர விசாரணை துவங்கினர். வன்முறைக்கு பிறகு அடுத்த சில நாட்களில் டெல்லி வடக்கு மாநகராட்சி சார்பில் ஜஹாங்கிர்புரி பகுதியில் ஆக்கரமிப்புகள் எனக்கூறி முஸ்லிம்களின் வீடுகள், கடைகள் இடிக்கப்பட்டன. உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து இந்த இடிப்பு நடவடிக்கை நிறுத்தப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
6 வருடங்களுக்கு பிறகு.. பிரதமர் தலைமையில் இன்று நடக்கிறது.. மாநில முதலமைச்சர்கள் மாநாடு.. டெல்லியில்
போரிஸ் ஜான்சன் வருகை
இதற்கு மறுநாள் ஏப்ரல் 21, 22 ஆகிய தேதிகளில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வந்தார். ஏப்ரல் 21ல் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மகாத்மா காந்தியின் ஆசிரமத்தை பார்வையிட்டார். மேலும் பல்வேறு தொழில் அதிபர்களுடன் கலந்துரையாடினார். அதன்பிறகு ஏப்ரல் 22ல் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது தொழில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. முன்னாதக ஏப்ரல் 21ல் போரிஸ் ஜான்சன் வதோதரா அருகே உள்ள தொழிற்சாலைக்கு சென்று புல்டோசர் வாகனத்தில் ஏறி உற்சாகமாக போஸ் கொடுத்தார்.
|
பிரிட்டன் பெண் எம்பி பேச்சு
இதனை பிரிட்டன் பெண் எம்பி நாடியா விட்டோம் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுபற்றி பிரிட்டனின் கிழக்கு நாட்டிங்ஹாம் பாராளுமன்ற தொகுதியின் இளம்வயது எம்பியான இவர் பார்லிமெண்டில் பேசினார். அப்போது அவர் ‛‛பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்திய சுற்றுப்பயணத்தின்போது ஜேசிபி தொழிற்சாலையில் சென்று பார்வையிட்டார். இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு முஸ்லிம்களை குறிவைத்து அவர்களின் வீடு, கடைகளை புல்டோசர் மூலம் இடித்ததற்கான மறுநாள் இது நடந்துள்ளது.
கேள்வி கேட்டாரா போரிஸ்?
பல இந்திய மாநிலங்களில் ஆட்சி செய்யும் அரசுகளும் இதேபோன்று இடிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இதுபற்றி பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பிரதமர் நரேந்திர மோடியிடம் கேள்வி எழுப்பினரா?. இல்லையென்றால் ஏன் இல்லை?. போரிஸ் ஜான்சனின் இந்திய பயணம் மோடியின் தீவிர வலதுசாரி அரசாங்கத்தின் நடவடிக்கைகளை சட்டப்பூர்வமாக்க உதவியது என்பதை ஏற்றுக்கொள்கிறாரா?'' என கேள்வி எழுப்பினார். இதுதொடர்பான வீடியோ தற்போது தீயாக பரவி வருகிறது.
மத்திய அமைச்சர் பதில்
இதற்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், ‛‛ எதார்த்தத்தை அறியாத மற்றும் இந்தியர்களை எதிர்மறையாக சித்தரிக்கும் இளம் பிரிட்டிஷ் எம்பியை நான் குறை கூறவில்லை. இந்தியா குறித்து துக்டே-துக்டே கும்பல் செய்யும் எதிர்மறையான பிரசாரங்களின் விளைவு தான் இது. இதன் ஒரே நோக்கம் என்பது நரேந்திர மோடியின் மிகப்பெரிய சாதனைகளை இழிவுப்படுத்துவதே ஆகும். இந்தியா எப்போதும் சட்டத்தின் ஆட்சியை நம்பும்'' என தெரிவித்துள்ளார்.