இப்படித்தான் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கிறாங்க.. பிபிசி விவகாரம் குறித்து கிரண் ரிஜிஜூ விமர்சனம்
பிபிசி ஆவணப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ள நிலையில் நீதிமன்றத்தின் நேரம் வீணடிக்கப்படுவதாக கிரண் ரிஜிஜூ டிவிட் செய்துள்ளார்.
டெல்லி: குஜராத் கலவரம் தொடர்பான பிபிசி ஆவணப்படத்திற்கு மத்திய அரசு விதித்துள்ள தடையை எதிர்த்து தொடரப்பட்டுள்ள பொதுநல மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் நேரம் இப்படித்தான் வீணடிக்கப்படுவதாக மத்திய சட்ட அமைச்சர் தனது ட்விட் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2002-ம் ஆண்டில் குஜராத்தில் கலவரம் வெடித்தது. அப்போது அந்த மாநில முதல்வராக பிரதமர் நரேந்திர மோடி பதவி வகித்தார்.
இந்தக் கலவரம் தொடர்பாக பிபிசி கடந்த 17-ம் தேதி ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது. "India - The Modi Question" என்ற தலைப்பிலான அந்த ஆவணப்படத்தில் பிரதமர் மோடி குறித்து எதிர்மறையான கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மத்திய அரசு தடை
இங்கிலாந்து அரசு ஊடகமான பிபிசியின் இந்த ஆவணப்படத்தை யூடியூப், ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட மத்திய அரசு கடந்த 18-ம் தேதி தடை விதித்து உத்தரவிட்டது. இந்த ஆவணப்படம் குறித்து, கருத்து தெரிவித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் காலனியாதிக்க மனநிலை என்று சாடியிருந்தது. மத்திய அரசு தடை விதித்துள்ள போதிலும் நாட்டின் பல பகுதிகளில் எதிர்க்கட்சிகள் இந்த ஆவணப்படத்தை திரையிட்டு வருகின்றன.

உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனுக்கள்
டெல்லி, கேரளா, மேற்கு வங்கம், தெலுங்கானா என பல மாநிலங்களில் பாஜக ஆதரவு அமைப்புகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டது. இதற்கு போட்டியாக பாஜக ஆதரவாளர்கள், காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை ஒளிபரப்பினர். இத்தகைய பரபரப்புக்கு மத்தியில் பிபிசியின் ஆவணப்படத்திற்கு மத்திய அரசு விதித்த தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

6 ஆம் தேதி விசாரணை
வழக்கறிஞர் பி.எல் சர்மா மற்றும் சியூ சிங் ஆகியோர் ஆவணப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை அவசர வழக்காக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு முறையிட்டனர். இதையடுத்து, இந்த மனுக்களை பிப்ரவரி 6 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

இப்படித்தான் வீணடிக்கப்படுகிறது
பிபிசியின் ஆவணப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கை விசாரிக்க ஒப்புதல் தெரிவித்துள்ள நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, உச்ச நீதிமன்றத்தின் மதிப்பு மிக்க நேரத்தை வீணடிக்கும் செயல் என்று விமர்சித்து பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக கிரண் ரிஜிஜூ தனது ட்விட் பதிவில் கூறியிருப்பதாவது:- "ஆயிரக்கணக்கான எளிய குடிமக்கள் நீதிக்காக காத்துக் கொண்டு இருக்கும் நிலையில், உச்ச நீதிமன்றத்தின் மதிப்பு மிக்க நேரம் இப்படித்தான் வீணடிக்கப்படுகிறது" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications