பைலட் vs கெலாட்.. கொழுந்துவிட்டு எரியும் ராஜஸ்தான் அரசியல்.. காங்கிரஸ் செய்த 3 தவறுகள் என்னென்ன?
டெல்லி: ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், சச்சின் பைலட்டுக்கும் இடையேயான பிரச்சினை காங்கிரஸ் தலைமையின் கைமீறி சென்று கொண்டிருக்கிறது.
காங்கிரஸ் தலைமை சிறிது அசந்தாலும் கூட, ராஜஸ்தானின் ஆட்சிக் கட்டில் கைமாறிவிடும் என்ற சூழலே தற்போது நிலவி வருகிறது.
ஏற்கனவே ஆட்சியை பிடிக்க எத்தனித்து வரும் பிரதான எதிர்க்கட்சியான பாஜக, காங்கிரஸில் நிலவி வரும் இந்த பிரச்சினையை தனக்கு சாதமாக்கிக் கொள்ளும் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
தவறுதான்.. நடந்திருக்க கூடாது.. மன்னிப்பு கேட்டார் அசோக் கெலாட்.. சீற்றம் தணியாத ராகுல், சோனியா!
என்ன பிரச்சினை?
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் போட்டியிடுவதால், அவரது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்ற பேச்சு எழுந்தது. அப்படி அவர் ராஜினாமா செய்தால், மாநில முதல்வராக சச்சின் பைலட்டை நியமிக்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் அசோக் கெலாட்டின் ஆதரவு எம்எல்ஏக்கள் 80-க்கும் மேற்பட்டோர் போர்கொடி தூக்கியுள்ளனர். அசோக் கெலாட்டின் ஆதரவு எம்எல்ஏக்கள் ஒருவர்தான் முதல்வர் பதவியில் அமர வேண்டும் என்றும், ஆட்சியை கவிழ்க்க முயற்சித்த சச்சின் பைலட் ஒருபோதும் முதல்வராகக் கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ராஜஸ்தானில் அரசியலில் இந்த பூகம்பம் வெடிக்க காங்கிரஸ் தலைமைதான் காரணமோ என எண்ணத் தோன்றுகிறது. ராஜஸ்தான் விவகாரத்தில் காங்கிரஸ் தலைமை செய்த மூன்று முக்கிய தவறுகள் தவிர்க்கப்பட்டிருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது என அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
முதல் தவறு
ராஜஸ்தானில் 2018-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைவதற்காகன வாய்ப்புகளே அதிகம் இருந்தன. ஆனால் சச்சின் பைலட்டின் அரசியல் வியூகமும், அவரது பிரச்சார யுத்திகளுமே அந்த தேர்தலில் காங்கிரஸை வெற்றி பெறச் செய்தது. இது அனைவருக்கும் வெளிப்படையாக தெரிந்த ஒன்றுதான். காங்கிரஸ் தலைமை நியாயமாக நடந்திருக்குமேயானால், ராஜஸ்தான் முதல்வர் பதவியை சச்சின் பைலட்டுக்கு தான் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அரசியலில் தீவிரமாக இயங்குவதை நிறுத்தியிருந்த அசோக் கெலாட்டுக்கு முதல்வர் பதவியை கொடுத்தது காங்கிரஸ். இதுதான் காங்கிரஸ் தலைமை செய்த முதல் தவறு.
இரண்டாவது தவறு
2020-ம் ஆண்டு சச்சின் பைலட் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் சேர்ந்து அசோக் கெலாட்டு எதிராக திடீர் போர்க்கொடி தூக்கினார். அப்போது ராகுல் காந்தி அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி, அசோக் கெலாட்டுக்கு துணை முதல்வர் பதவியை வழங்கினார். இதுதான் காங்கிரஸ் செய்த இரண்டாவது தவறு என்கின்றனர் அரசியல் நிபுணர்கள். ஒருவரையொருவர் எதிர்க்கும் இரண்டு தலைவர்களை ஒரே இடத்தில் அதிகாரம் கொடுத்து அமர வைத்தால், அவர்களுக்குள் மீண்டும் அதிகாரப் போட்டி ஏற்படவே செய்யும். ஒரே உறையில் இரண்டு கத்திகள் இருக்கக் கூடாது என்பது கூடவா காங்கிரஸ் தலைமைக்கு தெரியாது. அந்த சமயத்தை பயன்படுத்தி, சச்சின் பைலட்டை டெல்லிக்கு அழைத்து தேசிய அளவில் ஏதேனும் பதவியை கொடுத்து அவரை சமாதானப்படுத்தி இருக்க வேண்டும். இதுதான் அரசியல் அனுபவம் மிக்க ஒரு தலைமை செய்யும் செயல் ஆகும்.
மூன்றாவது தவறு.
மூன்றாவது தவறு, காங்கிரஸ் தலைமை தேர்தலுக்கு போட்டியிட அசோக் கெலாட்டை தேர்வு செய்தது என்கின்றனர் அரசியல் நிபுணர்கள். நேரு குடும்பத்தினர் போட்டியிடுவதில்லை என்று முடிவெடுக்கப்பட்ட பின்னர், இந்த வாய்ப்பை பயன்படுத்தி காங்கிரஸ் தலைமைப் பதவி தேர்தலில் சச்சின் பைலட்டை போட்டியிடுமாறு சோனியா காந்தியோ, ராகுல் காந்தியோ அழைத்திருக்க வேண்டும். இது நடந்திருந்தால், சச்சின் பைலட்டும் சமாதானமாகி இருப்பார்; ராஜஸ்தான் அரசியலிலும் இந்தப் பிரச்சினை ஏற்பட்டிருக்காது. மேலும், சச்சின் பைலட்டை போன்ற இளம் தலைவர்கள் தான், காங்கிரஸுக்கு இப்போதைய தேவை. 2024 மக்களவைத் தேர்தலுக்கும் இது சரியான யுத்தியாக இருந்திருக்கும். இதையும் செய்ய காங்கிரஸ் தலைமை தவறிவிட்டது.
இவ்வாறு காங்கிரஸ் தலைமை செய்த அடுக்கடுக்கான தவறுகளே ராஜஸ்தான் அரசியலில் தற்போது புயல் வீச காரணமாக இருக்கிறது.
மத்திய பிரதேசம் (கமல்நாத் vs ஜோதிராதித்ய சிந்தியா), பஞ்சாபிலும் (அமரீந்தர் சிங் vs நவ்ஜோத் சிங் சித்து) இதுபோன்ற தவறுகளை செய்ததால் தான் காங்கிரஸ் ஆட்சி கவிழந்தது. தற்போது அதே தவறை ராஜஸ்தானிலும் காங்கிரஸ் செய்கிறது. இதற்கு அக்கட்சி என்ன விலை கொடுக்க போகிறதோ.. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.