பெகாசஸ்:அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் இருந்து அறிக்கையை பிடுங்கி கிழித்த திரிணாமுல் எம்பி சந்துனு சென்
டெல்லி: பெகாசஸ் ஒட்டு கேட்பு தொடர்பாக ராஜ்யசபாவில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்த அறிக்கையை பிடுங்கி கிழித்து காற்றில் பறக்கவிட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சந்துனு சென் நடவடிக்கையால் பரபரப்பு ஏற்பட்டது. திரிணாமுல் எம்.பி. சந்துனு சென் நடவடிக்கைக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மும்பையில் 4 நாட்கள் கனமழை.. 5ஆவது நாளாக இன்று வெளுத்து வாங்கும்.. ரெட் அலர்ட் வார்னிங்
இஸ்ரேலின் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் உலகம் முழுவதும் அதிபர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டன. இந்த விவகாரம் உலக நாடுகளை பெரும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
பிரான்ஸ் விசாரணை
பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் குறித்து பிரான்ஸ் அரசு விசாரணை நடத்தி வருகிறது. இந்தியாவிலும் மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், மாநில முதல்வர்கள், பத்திரிகையாளர்களின் செல்போன்கள் ஒட்டுகேட்கப்பட்டது அம்பலமானது.
நாடாளுமன்றத்தில் அமளி
பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் செல்போன் ஒட்டு கேட்கப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினரும் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
ராஜ்யசபாவில் அறிக்கை
இந்த நிலையில் இன்று ராஜ்யசபாவில் பெகாசஸ் விவகாரம் குறித்து மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிக்கை ஒன்றை வாசித்தார். அஸ்வினி வைஷ்ணவ் செல்போனும் பெகாசஸ் மூலம் ஒட்டு கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
அறிக்கையை பிடுங்கி கிழித்த எம்.பி
இதனால் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சந்துனு சென் எழுந்து சென்று அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கையில் இருந்த அறிக்கையை பிடுங்கினார். அத்துடன் அந்த அறிக்கையை கிழித்து எறிந்து காற்றிலும் பறக்கவிட்டார். இதனால் ராஜ்யசபாவில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அறிக்கையை சபையில் தாக்கல் செய்துவிட்டதாக அஸ்வினி வைஷ்ணவ் கூறினார். அப்போது சபையில் கடுமையாக முழக்கங்களை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எழுப்பினர்.
பாஜக கடும் கண்டனம்
இந்த அமளி தொடர்ந்ததால் சபை நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த பாஜக ராஜ்யசபா எம்.பி ஸ்வபன்தாஸ் குப்தா, மத்திய அமைச்சர் நீங்கள் கேட்டதற்கு விளக்க அறிக்கையை தாக்கல் செய்கிறார். அந்த அறிக்கை மீது கேள்விகள் எழுப்ப உங்களுக்கு உரிமை உண்டு. இது போன்ற அடாவடிகளை சபைக்குள் எப்படி அரங்கேற்றலாம்? நாடாளுமன்ற மரபுகளுக்கு இது எதிரானது என கண்டனம் தெரிவித்தார்.