ஆளுநர் அரசுக்கு ஆலோசகர்தான்- ராஜ்பவனில் சட்டம் இயற்ற முடியாது- உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சுளீர்!
டெல்லி: மாநிலங்களின் ஆளுநர் என்பவர் மாநில அரசுக்கான ஆலோசகர் மட்டும்தான்; ஆளுநர் மாளிகைகளில் எந்த ஒரு சட்டமும் இயற்ற முடியாது; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபைகளில் மட்டுமே சட்டங்களை நிறைவேற்ற முடியும் என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் ஆணித்தரமாக வாதிடப்பட்டது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான ரிட் மனுக்களை உச்சநீதிமன்றம் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. கடந்த சில நாட்களுக்கு முந்தைய விசாரணையில், தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆளுநர் பிரச்சனைக்கு முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என அறிவுறுத்தி இருந்தது உச்சநீதிமன்றம்.

இந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதி பர்திவாலா பெஞ்ச் மீண்டும் இந்த வழக்கை விசாரித்தது. இன்றைய விசாரணையின் போது தமிழ்நாடு அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட சில வாதங்கள்:
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் சட்டசபையில்தான் சட்டங்கள் அனைத்தும் இயற்றப்படும். அதுதான் சாத்தியமானது. ஆளுநர் மாளிகையில் ஒருபோதும் சட்டங்கள் இயற்றவே முடியாது என்பதை நமது நாட்டின் நீதிமன்றங்கள் பல்வேறு தருணங்களில் சுட்டிக்காட்டி இருக்கின்றன. ஆளுநர் என்பவரின் அதிகாரம் குறித்த கேள்விகளை எழுப்பி அதனை சரி செய்தும் வைத்திருக்கின்றன நமது நீதிமன்றங்கள்.
ஒரு மாநில அரசானது மத்திய அரசின் பட்டியல் உள்ள துறை சார்ந்து ஒரு சட்டம் இயற்றுகிற போது அதனை நிறுத்தி வைக்க ஆளுநர் என்பவருக்கு அதிகாரம் உண்டு; அதனை நாம் மறுக்க முடியாது. அதே நேரத்தில் பொதுப்பட்டியல் அல்லது மாநில அரசின் பட்டியல் உள்ள துறை சார் ஒரு மசோதாவை மாநில சட்டசபை நிறைவேற்றினால் அதை ஆளுநரால் நிறுத்தி வைக்கவே முடியாது.
ஏனெனில் ஆளுநர் என்பவர் மாநில சட்டசபைகள் நிறைவேற்றும் மசோதாக்கள் மீது அறிவுரை அல்லது ஆலோசனை கூறுகிற ஒரு ஆலோசகர் அவ்வளவுதான். ஆளுநர் என்பவர் சட்டங்கள் மீது முடிவெடுக்கக் கூடிய அதிகாரம் கொண்டவர் அல்ல.
பொதுவாக மாநில சட்டசபைகள் நிறைவேற்றுகிற மசோதாக்கள் மீது ஆளுநர் முடிவெடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறது அரசியல் சாசனம் என்பது ஆளுநர் தரப்பு வாதம். அதேநேரத்தில் மாநில அரசின் மசோதாவை நிராகரிக்க, திருப்பி அனுப்ப காரணம் என்ன என்பதை தெரிவிக்கவும் சொல்கிறது அதே அரசியல் சாசனப் பிரிவின் மற்றொரு உட்பிரிவு. ஆனால் ஆளுநர் தரப்பு, மசோதாக்களை பொத்தாம் பொதுவாக கிடப்பில் போட்டுவிட்டு மவுனமாகிவிடுகிறது. அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவின் கீழ் முடிவெடுக்கும் போது ஆளுநர் தரப்பு மாறுபட்ட நிலைப்பாட்டை மேற்கொள்கிறது. ஆளுநர் என்பவர் அரசியல் சாசனம் மற்றும் மாநில அமைச்சரவையின் முடிவின் படியுமே செயல்பட முடியும். இவ்வாறு தமிழ்நாடு அரசு தரப்பில் வாதிடப்பட்டது.












Click it and Unblock the Notifications