வெல்லப் போவது யார்? 5 மாநிலங்களின் தேர்தலுக்கு பிந்தைய எக்ஸிட் போல் முடிவுகள் இரவு 7 மணிக்கு ரிலீஸ்!
டெல்லி: தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்? யார் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது என்பது தொடர்பான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் (Exit Poll Results) இன்று இரவு 7 மணிக்கு வெளியிடப்பட உள்ளன.
சட்டசபை, லோக்சபா தேர்தல்களில் வாக்குப் பதிவு முடிவடைந்த உடன் அன்று இரவே தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாவது வழக்கம். தமிழகம், கேரளா, புதுவை மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் ஏப்ரல் 26-ந் தேதி வாக்குப் பதிவு நிறைவடைந்தது.
ஆனால் மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறும் நிலையில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கான தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது. மேற்கு வங்கத்தில் இறுதி கட்டமாக எஞ்சிய 38 தொகுதிகளுக்கு இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப் பதிவு நிறைவடைந்த சிறிது நேரத்தில் எக்ஸிட் போல் முடிவுகள் வெளியிடப்படும்.

மே.வங்க வாக்குப் பதிவு
மேற்கு வங்கத்தில் இதுவரையில் 7 கட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் விவரம்: முதல் கட்டம்- 79.79% ; 2-வது கட்டம் 80% ; 3-வது கட்டம் 77.68% ; 4வது கட்டம் 76.16% ; 5-வது கட்டம் 78.36%; 6வது கட்டம்- 79.11% ; 7வது கட்டம் 75.06%. அஸ்ஸாமில் மொத்தம் 82.39%; தமிழகத்தில் 71.59% ; புதுச்சேரியில் 81.66%; கேரளாவில் 73. 29% வாக்குகள் பதிவாகி இருந்தன. மேற்கு வங்கத்தில் 7 கட்டங்களிலும் சேர்த்து மொத்தம் 77.68% வாக்குகள் பதிவாகின.

திரிணாமுல்-பாஜக
மேற்கு வங்கம் தொடர்பான தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் பெரும்பாலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியை மீண்டும் தக்க வைக்கும் என்றே தெரிவித்திருக்கின்றன. இருந்தபோதும் பாரதிய ஜனதா கட்சி இந்த முறை திரிணாமுல் காங்கிரஸுக்கு நெருக்கடி தரும் வகையில் கடந்த தேர்தலை விட மிக மிக அதிகமான இடங்களைக் கைப்பற்றும் என்றும் அநத கருத்து கணிப்புகள் தெரிவித்திருந்தன.

அஸ்ஸாமில் அதிர்ச்சி வைத்தியம்?
அஸ்ஸாமில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை தக்க வைக்கும் என்பது பொதுவான தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு. ஆனால் பாஜகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் தரக் கூடிய வகையில் காங்கிரஸ் தலைமையிலான மெகா கூட்டணி வெல்லவும் சாத்தியங்கள் இருக்கின்றன என்பதையும் இந்த கருத்து கணிப்பு முடிவுகள் கோடிட்டு காட்டி இருந்தன.

தமிழகத்தில் திமுக ஆட்சி?
தமிழ்நாட்டில் திமுக கூட்டணியே பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றும் என்றே பெரும்பாலன கருத்து கணிப்புகள் தெரிவித்தன. அதிமுக -பாஜக கூட்டணிக்கு 50 முதல் 80 வரையிலான இடங்கள் கிடைக்கலாம் எனவும் தெரிவித்திருந்தன அக்கருத்து கணிப்புகள்.

கேரளாவில் மல்லுக்கட்டு
கேரளாவில் ஆளும் இடது முன்னணி ஆட்சியைத் தக்க வைக்கும் என்பது கருத்து கணிப்புகளின் முடிவாக இருந்தது. அதேநேரத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் ஆளும் இடதுமுன்னணிக்கும் இடையிலான வெற்றி பெறும் தொகுதிகளின் எண்ணிக்கை வித்தியாசம் மிக மிக குறைவாகவே இருக்கும் என்றும் அவை சுட்டிக்காட்டியுள்ளன.

புதுவை கண்ணாமூச்சி கேம்
புதுச்சேரியில் பாஜக-என்.ஆர். காங்கிரஸ்- அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்கின்றன கருத்து கணிப்புகள். களநிலவரங்களோ பாஜக ஆட்சி அமைக்க முயற்சித்தால் என்.ஆர். காங்கிரஸ், திமுகவுடன் கூட்டணி அமைக்க சாத்தியம் உண்டு எனவும் கூறப்படுகிறது. இப்படியான சூழ்நிலையில்தான் இன்று இரவு 7 மணிக்கு தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாக உள்ளன.












Click it and Unblock the Notifications