நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: தமிழக தேர்தல் ஆணையத்துக்கு 4 மாதம் அவகாசம் வழங்கியது உச்சநீதிமன்றம்!
டெல்லி: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களை நடத்துவதற்கு தமிழக தேர்தல் ஆணையத்துக்கு 4 மாதங்கள் கால அவகாசம் வழங்கி உள்ளது உச்சநீதிமன்றம்.
தமிழகத்தில் 9 மாவட்டங்களைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6,9 தேதிகளில் நடைபெற உள்ளன.
இதற்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்து இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் பிற மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல்களும் அக்டோபர் 6,9 தேதிகளில் நடைபெற உள்ளன.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தக் கோரும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களை செப்டம்பர் 15-ந் தேதிக்குள் நடத்த கடந்த ஜூன் மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்துவதற்கு தமிழக தேர்தல் ஆணையம் கால அவகாசம் கேட்டது.

உச்சநீதிமன்றம் கண்டனம்
உச்சநீதிமன்றம் ஏற்கனவே கால அவகாசம் வழங்கியது. இவ்வழக்கில் மீண்டும் மீண்டும் தமிழக தேர்தல் ஆணையம் கால அவகாசம் கேட்டதால் உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் விரிவான அறிக்கையையும் தாக்கல் செய்தது. அதில், தமிழகத்தில் புதியதாக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றங்கள் செய்யப்பட்டன. தமிழகத்தைப் பொறுத்தவரையில் 528 பஞ்சாயத்துகள் இருந்தன. இது தற்போது குறைக்கப்பட்டுள்ளன. இதுவரை 664 டவுன் பஞ்சாயத்துகள்- பேரூராட்சிகள் இருந்தன. தற்போது பேரூராட்சிகள் எண்ணிக்கை கூடுதலாக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல் கூடுதலாக 6 மாநகராட்சிகளும் 28 நகராட்சிகளும் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன. திருச்சி, நாகர்கோவில், ஓசூர், தஞ்சாவூர் மாநகராட்சி எல்லைகளும் விரிவுபடுத்தப்பட்டிருக்கின்றன. ஆகையால்தான் கால அவகாசம் கேட்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

வழக்கில் திடீர் திருப்பம்
இதனிடையே இந்த வழக்கில் சில நாட்களுக்கு முன்னர் புதிய திருப்பம் ஏற்பட்டது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சங்கர் தரப்பு ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. அதில், தமிழக தேர்தல் ஆணையத்துக்கு கூடுதல் அவகாசம் வழங்க தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அவகாசம் வழங்கிய சுப்ரீம் கோர்ட்
இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் இன்று இவ்வழக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான பெஞ்ச் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக தேர்தல் ஆணையம் காரணங்கள் மிக மோசமானதாக் இருக்கிறது. இருந்தபோதும் அடுத்த 4 மாதங்களுக்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களை தேர்தல் ஆணையம் நடத்தி முடிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications