வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்.. கால அவகாசம் நீட்டிக்கப்படுமா?
டெல்லி : வருமான வரி கணக்கு தாக்கலுக்கான கெடு இன்றுடன் முடிவடைகிறது. மீண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் போதிலும், கால அவகாசம் நீட்டிக்க வாய்ப்பே இல்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஆண்டு வருவாய் 2.5 லட்சம் ரூபாயை தாண்டும் அனைவரும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். வரி ஆதாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு, உச்ச வரம்புக்கு கீழ் வந்தாலும், கட்டாயமாக கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். 2021-22ஆம் நிதியாண்டுக்கான தனி நபர் வருமான வரி கணக்கு தாக்கலுக்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. மீதமுள்ளவர்களும் இன்றைக்குள் வருமான வரிதாக்கல் செய்யுமாறு வருமான வரித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக தனது டுவிட்டர் தளத்தில், ஜூலை 29-ந்தேதி வரை 4.52 கோடி பேர் வருமான வரித்தாக்கல் செய்துள்ளனர். இதற்கான கடைசி நாள் இன்று என்பதால், தாக்கல் செய்யாதவர்கள் வருமான வரித்தாக்கலை செய்து முடிப்பீர்கள் என நம்புகிறோம் என வருமான வரி செலுத்துவோரை அறிவுறுத்தி இருந்தது. கடந்த 2020-21-ம் நிதியாண்டுக்கான வருமான வரித்தாக்கல் 5.89 கோடி அளவுக்கு நடந்து இருந்தது. எனவே இந்த ஆண்டும் அதிக எண்ணிக்கையில் வரித்தாக்கல் நடைபெறும் என வருமான வரித்துறை நம்பிக்கை தெரிவித்து உள்ளது.
டைம் நெருங்குகிறது.. வருமான வரி தாக்கலுக்கு ஜூலை 31 கடைசி நாள்.. மீறினால் ரூ.5,000 அபராதம்..!
முந்தைய நிதியாண்டு கணக்கு தாக்கலுக்கான கடைசி தேதிகள் நீட்டிக்கப்பட்டதை போல, இம்முறையும் அவகாசம் நீட்டிக்கப்படுமா என பெரிதும் எதிர்பார்க்கப் பட்டது. ஆனால், வருமான வரிகணக்கு தாக்கலுக்கான அவகாசம் நீட்டிக்கப்படாது என்றும், அபராதம் இன்றி தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்றும், மத்திய அரசு உறுதிபட அறிவித்துள்ளது
இன்றுடன் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய காலக்கெடு நிறைவடையும் நிலையில், வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய தாமதித்தால், ரூ.5 லட்சத்திற்கும் குறைவாக தாக்கல் செய்பவர்களுக்கு ரூ.1,000-மும், ரூ.5 லட்சத்திற்கும் அதிகமாக தாக்கல் செய்பவர்களுக்கு ரூ.5,000-மும் அபராதமாக விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவும், வரும் டிசம்பர் வரை மட்டுமே. அடுத்தாண்டு ஜனவரியிலிருந்து மார்ச் வரை கணக்கு தாக்கல் செய்யும்பட்சத்தில், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டி இருக்கும்.அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குப் பின், வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய முடியாது.