கிராமங்களை நோக்கி பரவும் ஓமிக்ரான்..3ஆம் அலை என்ன செய்யும்? தடுப்பது எப்படி? டாப் ஆய்வாளர் விளக்கம்
டெல்லி: ஓமிக்ரான் அச்சம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் டாப் பயாலஜிஸ்ட்களில் ஒருவரான அனுராக் அகர்வால் கிராமப்புறங்களில் எப்போது வைரஸ் பாதிப்பு ஏற்படும் என்பது குறித்து சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார்,
ஓமிக்ரான் பரவலுக்குப் பின்னர், தற்போது இந்தியாவில் கொரோனா 3ஆம் அலை ஏற்பட்டுள்ளது என்றே சொல்லலாம். பல மாநிலங்களிலும் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
முதல் அலையை விட அதிக பாதிப்பு.. இந்த 6 மாநிலங்களில் நிலைமை மிக மோசம்.. மத்திய அரசு கவலை!
இதன் காரணமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களும் கூட இரவு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. வரும் ஓரிரு வாரங்கள் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை
அதேநேரம் ஓமிக்ரான் பாதிப்பானது மும்பை, டெல்லி, சென்னை போன்ற பெருநகரங்களில் ஏற்கனவே உச்சத்தைக் கடந்துவிட்டது. சென்னையைப் பொறுத்தவரை அதிகபட்சமாகக் கடந்த ஜன. 16ஆம் தேதி சென்னையில் 8987 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன் பின்னர் தலைநகர் சென்னையில் தொடர்ந்து ஒரு வாரமாகக் குறைந்தே வருகிறது. நேற்று சென்னையின் கொரோனா பாதிப்பு 6500க்கு கீழ் குறைந்துவிட்டது. அதேபோல 30% வரை சென்ற பாசிட்டிவ் விகிதமும் 25க்கு கீழ் குறைந்துவிட்டது.
3 மடங்கு அதிகம்
இருப்பினும், சென்னை தவிர நாட்டின் மற்ற மாவட்டங்களில் இப்போது தான் ஓமிக்ரான் அலை பரவ தொடங்கியுள்ளதால் ஒட்டுமொத்த கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்தே வருகிறது. இந்நிலையில், இது குறித்து நாட்டின் முக்கிய பயாலஜிஸ்ட்களில் ஒருவரான அனுராக் அகர்வால் கூறுகையில், "இந்தியாவில் குறைவாக கொரோனா கண்டறியப்படுகிறது. உண்மையான கொரோனா பாதிப்பு இதைவிடக் குறைந்தது மூன்று மடங்கு அதிகமாக இருக்கும்.
90 முதல் 95% வரை ஓமிக்ரான்
பெருநகரங்களில் கொரோனா 3ஆம் அலை உச்சத்தைக் கடந்துவிட்டாலும் கூட குழந்தைகளுக்கு இடையே ஏற்படும் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மல்டிசிஸ்டம் இன்ஃப்ளமேட்டரி சிண்ட்ரோம் இன்னும் முழுமையாகக் குறையவில்லை. டெல்லி உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் உறுதி செய்யப்படும் கொரோனா பாதிப்பில் 90 முதல் 95% வரை ஓமிக்ரான் பாதிப்பாகவே உள்ளது.
மாஸ்க் முக்கியம்
டெல்டா கொரோனாவை காட்டிலும் ஓமிக்ரான் லேசான பாதிப்பை ஏற்படுத்துகிறது. இருந்தாலும் கூட ஓமிக்ரான் கொரோனாவாலும் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. அதை நாம் மறுக்க முடியாது. சில ஐரோப்பிய நாடுகள் மாஸ்க் போடும் கட்டுப்பாடுகளை நீக்கவுள்ளதாக அறிவித்துள்ளன. அது ஆபத்தான போக்கு. நாம் இதில் ஜப்பானைப் பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும். மாஸ்க்கை எப்போதும் நாம் பயன்படுத்த வேண்டும். கட்டுப்பாடுகளைத் தளர்த்தப்பட்டாலும் கூட மாஸ்க் கண்டிப்பாகத் தொடர வேண்டும்.
கிராமப்புற இந்தியா
கிராமப்புற இந்தியாவில் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் ஓமிக்ரான் அலை ஏற்படும். இருப்பினும், வேக்சின் மற்றும் நோயில் இருந்து குணமடைந்தோருக்கு இருக்கும் நோய் எதிர்ப்புச் சக்தி காரணமாக நமது சுகாதார அமைப்பு எந்த விதத்திலும் பாதிக்கப்படாது. தேசிய அளவில், ஓமிக்ரான் அலை ஜனவரி இறுதி மற்றும் பிப்ரவரி தொடக்கத்தில் குறையும் என்று எதிர்பார்க்கலாம்.
பூஸ்டர் டோஸ்
நாம் பூஸ்டர் டோஸ் பணிகளுக்காக கோர்பெவாக்ஸ், கோவாவாக்ஸ் தடுப்பூசிகளைப் பயன்படுத்தலாம். அதே நேரம் டெல்டா கொரோனா எப்படி உருமாறிய டெல்டா பிளஸ் கொரோனா வைரசாக மாறியதோ, அதேபோல ஓமிக்ரான் உருமாறலாம். ஆனால், இதனால் ஏற்படும் அடுத்த அலை தீவிரமாக இருக்காது. அதேநேரம், இதைத் தாண்டி புதிய உருமாறிய கொரோனா உருவானால் அது என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என யாராலும் சொல்ல முடியாது" என்று அவர் எச்சரித்தார்,