நாடாளுமன்ற குழு கூட்டத்தில் வாக்குவாதம்.. கண்ணாடி கிளாசை உடைத்த திரிணாமுல் எம்பி! என்ன நடந்தது?
டெல்லி: வக்பு மசோதா தொடர்பாக இன்று நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டுக் குழு கூட்டத்தின் போது குழு தலைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திரிணமூல் காங்கிரஸ் எம்.பி கல்யாண் பானர்ஜி, கோபத்தில் கன்ணாடி பாட்டிலை உடைத்ததாக தகவல் வெளியானது. இதில் அவருக்கு விரலில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது லோக்சபாவில் வக்பு வாரிய திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு இந்த மசோதா அனுப்பப்பட்டது. பாஜக எம்பி, ஜெகதாம்பிகா பால் தலைமையில் 31 பேர் அடங்கிய இந்த கூட்டுக்குழுவில் காங்கிரஸ் திமுக, திரிணாமுல் காங்கிரஸ், உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் எம்பிக்கள் இடம்பெற்றுள்ளனர்.

வக்பு வாரிய மசோதாவில் திருத்தம் செய்வது தொடர்பாக ஆலோசிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. பாஜக எம்பி ஜெகதாம்பிகா பால் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி, ஹைதாரபாத் எம்பி ஓவைசி, ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங், பாஜக எம்பியும் கொல்கத்தா உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியுமான அப்ஜித் கங்கோபத்யாய் உள்ளிட்ட குழுவில் இடம் பெற்று இருந்த எம்பிக்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டம் நடைபெற்று கொண்டிருந்த போது, பாஜக எம்பி அப்ஜித் கங்கோபத்யாயுடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி, மேஜையில் இருந்த கிளாஸ் தண்ணீர் பாட்டிலை கையில் தள்ளிவிட்டுள்ளார். மேலும், பாஜக எம்பி ஜெகதாம்பிகா பாலை நோக்கி பாட்டிலின் சிறுதுண்டை வீசியதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கு பாஜக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
திரிணாமுல் காங்கிரஸ் எம்பியின் செயல் உரிமை மீறல் என்று சாடிய ஜெகதாம்பிகா பால், நாளை யாராவது ரிவால்வருடன் வருவார்களா? என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். தண்னீர் பாட்டிலை எடுத்து மேஜையில் அடித்ததில், கல்யாண் பானர்ஜியின் கை விரலில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு சென்ற கல்யான் பானர்ஜி முதலுதவி சிகிச்சை எடுத்துக்கொண்டார்.
ஒவைசி உள்ளிட்டோருடன் மருத்துவரை பார்த்துவிட்டு கல்யாண் பானார்ஜி வெளியே வரும் காட்சிகள் வெளியாகியுள்ளன. கல்யாண் பானர்ஜியிடம் செய்தியாளர்கள் இந்த விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பினர். ஆனால், அவர் பதிலளிக்க மறுத்துவிட்டு சென்று விட்டார். இதற்கிடையே, கல்யாண் பானர்ஜி தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
ஜெகதாம்பிகா பாலை நோக்கி தனிப்பட்ட முறையில் தண்ணீர் பாட்டிலை வீசவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இதற்கிடையே, நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் அடுத்த கூட்டத்தில் இருந்து கல்யாண் பானர்ஜி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் நடைபெற்ற விவகாரம் குறித்து ஜெகதாம்பிகா பால் கூறியதாவது:-
எனது 40 ஆண்டு கால நாடாளுமன்ற அனுபவத்தில் பல குழுக்களின் தலைவராக இருந்துள்ளேன். பல முறை கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. ஆனால், இது போன்ற சம்பவத்தை என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. கூட்டுக்குழுவில் நடந்தவை குறித்து சபாநாயகர் ஒம் பிர்லாவிடம் கூறியுள்ளேன்" என்றார்.












Click it and Unblock the Notifications