ஹிஜாப் வழக்கில் “பரபர”.. பாய்ண்டை பிடித்த நீதிபதிகள்! “திலகத்தை” விட ரெடி - மத்திய அரசு வழக்கறிஞர்
டெல்லி: ஹிஜாப் வழக்கில் சீருடை தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடுத்தடுத்து கேள்விகளை எழுப்பிய நிலையில், பார் கவுன்சில் தடை விதித்தால் திலகத்தை தவிர்க்க தயார் என்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்து செல்ல அரசு விதித்த தடைக்கு எதிராக உடுப்பி மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்து வந்த கர்நாடக உயர்நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் இறுதித் தீர்ப்பை வழங்கியது.
அதில் ஹிஜாப் இஸ்லாத்தில் அத்தியாவசியமானது இல்லை என்றும், பள்ளிகளில் சீருடையை பின்பற்ற வேண்டும் என்ற கர்நாடக அரசின் உத்தரவில் தவறு இல்லை எனவும் கூறி மாணவிகளின் வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

உச்சநீதிமன்றம்
கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து மாணவிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ஹேமந்த் குப்தா, சுதன்சு துலியா அமர்வு முன்பு கடந்த 5 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. கடந்த 8 நாட்கள் நடைபெற்ற விசாரணையில் பல்வேறு கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன.

நீதிபதி கேள்வி
இன்று நடைபெற்ற 8 வது நாள் வழக்கு விசாரணையில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா ஆஜராகி கர்நாடக அரசின் ஹிஜாப் தடைக்கு ஆதரவாக வாதாடினார். அப்போது நீதிபதி துலியா, "அவர்கள் அனைவரும் சீருடை அணிவோம் என்று சொல்கிறார்கள். முடியாது என்று சொல்லவே இல்லை. ஒருவேளை ஒரு குழந்தை பனி குல்லா அணிவதாக வைத்துக்கொள்வோம்." என்று கூறினார்.

சீருடை
இதற்கு பதிலளித்த துஷார் மேத்தா, "அது ஒரு மதத்தை பிரதிபலிப்பது அல்ல." என்று கூற நீதிபதி துலியா, "இது மிகவும் தெளிவற்றது." என்றார். உடனே மற்றொரு நீதிபதி குப்தா, "உங்கள் வாதம் சீருடை என்பது சீராக இருக்க வேண்டும். எதையும் மாற்றியோ சேர்த்தோ அணியக்கூடாது என்பது தான். லெதர் பெல்ட் அணிவது உங்கள் சீருடையாக இருக்கும்பட்சத்தில் சிலர் லெதர் அணி விரும்பமாட்டார்கள்." என்றார்.

திலகம் இட மாட்டேன்
அதற்கு வழக்கறிஞர் மேத்தா, "மதசார்பற்ற கல்வியில் ஆடை என்பது மத அடையாளத்தை வெளிப்படுத்தக் கூடாது. நாளை ஒருவேளை பார் கவுன்சில் திலகம் இடுவதற்கு தடை விதித்தால் நானும் அதை ஏற்றுக்கொள்வேன். அதுவரை நாம் நமது அத்தியாவசியமான மத நடைமுறைகளை பின்பற்றலாம்."என்றார்.












Click it and Unblock the Notifications