முற்றியது மோதல்.. ட்விட்டருக்கு வழங்கிய சட்ட பாதுகாப்பை விலக்கிய மத்திய அரசு.. சிக்கல்
டெல்லி: ட்விட்டர் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட சட்ட பாதுகாப்பை மத்திய அரசு விலக்கிக் கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் ட்விட்டரில் தனிநபர் பதிவிடும் கருத்துக்களும் அந்த நிறுவனத்தின் கருத்தாக கருதப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்தியாவில் மே 25ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைக்கு வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் ஆகியவை சம்மதம் தெரிவித்துள்ளன. ஆனால் இந்த விதிமுறையை ட்விட்டர் நிறுவனம் ஏற்கவில்லை.

இந்த நிலையில்தான் ட்விட்டர் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட சட்டப்பாதுகாப்பு நீக்கப்படுவதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்ச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜூன் 5ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில், முஸ்லிம் நபர் ஒருவரின் தாடி அகற்றப்பட்டு வந்தேமாதரம் மற்றும் ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்லச் சொல்லி அவரை ஒரு கும்பல் தாக்கிய வீடியோ டுவிட்டரில் வெளியாகி இருந்தது. இது தவறான தகவல் என்று கூறி மத்திய அரசு அந்த வீடியோவை நீக்குவதற்கு ட்விட்டர் நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்தது. ஆனால் அதை டுவிட்டர் நிர்வாகம் ஏற்கவில்லை.
இந்த நிலைதான் உத்தரப்பிரதேச மாநில காவல்துறையினர் இந்த சம்பவம் பற்றி விளக்கம் அளித்தனர். அதில், இதற்கு மத பின்னணி கிடையாது. வர்த்தகம் சம்பந்தப்பட்ட பிரச்சினை காரணமாக இருதரப்பும் மோதிக் கொண்டது. அந்த முஸ்லிம் நபரை 6 பேர் கொண்ட கும்பல் தாக்கியது. ஆனால் இதை மத பிரச்சினையாக ட்விட்டர் மாற்றுகிறது என கூறியிருந்தது.
இதையடுத்து, ட்விட்டர் மீதும் சில பத்திரிக்கையாளர்கள் மீது மத வன்முறையை தூண்டுவதாக உத்தரப்பிரதேச மாநில காவல்துறை முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது. இருப்பினும் இந்த வீடியோவை வெளியிட்ட ட்விட்டர் பயனர்கள் அதை நீக்கவில்லை. இந்த வீடியோவை நீக்குவதற்கு ட்விட்டர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று உத்தரபிரதேச மாநில காவல்துறை குற்றஞ்சாட்டியது.
இந்த நிலையில்தான் சட்ட பாதுகாப்பை விலக்கிக் கொள்வதாக மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்ற போதிலும் பல முன்னணி ஆங்கில ஊடகங்களில் தகவல் தொழில்நுட்பத் துறை வட்டாரங்கள் இந்த தகவலை தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.
இதேபோன்ற மோதல் போக்கு நீடித்தால் விரைவில் இந்தியாவில் ட்விட்டர் இணையதளம் முடங்கி போவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்கிறார்கள் இந்த துறை சார்ந்த வல்லுநர்கள்.












Click it and Unblock the Notifications