டெல்லி ஆட்சிக்கு ஆபத்து? சில ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.. எகிறும் டென்ஷன்!
டெல்லி: ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்க்க பாரதிய ஜனதா கட்சி பேரத்தில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு வந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலால் சில எம் எல் ஏக்களை தொடர்பு கொள்ள முடியாததால் டெல்லியில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக சிபிஐ பல இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது.
நாடு முழுவதும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக இந்த விவகாரம் பேசப்பட்டது.

எம். எல். ஏக்களுக்கு அழைப்பு
இது ஒருபுறம் இருக்க மற்றொரு பக்கம் ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்க்க பாரதிய ஜனதா, பேரத்தில் ஈடுபடுவதாகவும் மிரட்டுவதாகவும் ஆம் ஆத்மி குற்றம் சாட்டி வருகிறது. இந்த பரபரப்பான சூழலில், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, கெஜ்ரிவாலின் இல்லத்தில் இன்று காலை 11 மணியளவில் இந்தக் கூட்டம் நடைபெற இருந்தது.

சிறப்பு சட்டசபை கூட்டம்
இந்தக் கூட்டத்தில் தற்போதைய பரபரப்பான அரசியல் சூழல் மற்றும் சமீபத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆம் ஆத்மி கட்சியினருக்கு எதிரான நடத்திய சோதனைகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று கூறப்பட்டது. இதற்கிடையே, சிறப்பு சட்டசபை கூட்டத்திற்கும் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி கூட்டத்திற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன.

பெரும் பரபரப்பு
இதற்கிடையே இன்று காலை கூட்டம் நடைபெறும் நிலையில், சில எம்.எல்.ஏக்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று ஆம் ஆத்மி கட்சி வட்டார தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் டெல்லி அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திடீரென எம்.எல்.ஏக்களை தொடர்பு கொள்ள முடியாததால் இது பாஜனதாவின் செயலாக இருக்கும் என கூறப்படுகிறது.

53 எம்.எல்.ஏக்கள் பங்கேற்பு
இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் திட்டமிட்டபடி இன்று காலை 11 மணிக்கு இந்தக் கூட்டம் தொடங்கியது. எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் மொத்தம் உள்ள 62 எம்.எல்.ஏக்களில் 53 எம்.எல்.ஏக்கள் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிவு பெற்றதாக ஆம் ஆத்மி கட்சி வட்டார தகவல்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications