320 சீன செயலிகளுக்கு தடை போட்ட மத்திய அரசு.. டிக்டாக் முதல் ஷேர் இட் வரை.. இதுதான் உண்மையான காரணம்.!
டெல்லி : செல்போன் பயன்படுத்தும் நாட்டு மக்களுக்கு பாதுகாப்பான, நம்பகமான மற்றும் பொறுப்பான இணையத்தை உறுதி செய்வதற்காக தகவல் தொழில்நுட்ப (ஐடி) சட்டத்தின் விதியின் கீழ், மத்திய அரசு இதுவரை 320 மொபைல் ஆப்களை முடக்கியுள்ளது என்று நாடாளுமன்றத்தில் எழுத்துப் பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய நவீன யுகத்தில் செல்போன் இல்லாமல் மக்கள் வாழவே முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். காலை முதல் தூங்கும் வரை செல்போன் நம் உடலின் மற்றொரு அங்கம் போலவே ஆகிவிட்டது.
கால்குலேட்டர் தொடங்கி டிக்டாக் வரை ஆயிரக்கணக்கான அப்ளிகேஷன்கள் மொபைல் போன்களை ஆக்கிரமித்துள்ளன. அதே நேரத்தில் செல்போன் பயன்படுத்தும் மக்களின் அந்தரங்கங்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்கள், வங்கி தகவல்களை திருடும் பல்வேறு அப்ளிகேசன்களும் உலாவுகின்றன..

சீன செயலிகளுக்கு தடை
இந்நிலையில் இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டதாக கடந்த சில ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான மொபைல் அப்ளிகேஷன்களை மத்திய அரசு தடை செய்துள்ளது. அவை அனைத்துமே சீனாவைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் முதல் இடத்தில் இருப்பது டிக்டாக். கடந்த லாக்டவுனின் போது டிக்டாக் தடை செய்யப்பட்டதால் ஜிபி முத்து போன்ற "மகா கலைஞர்கள்" கடும் அதிர்ச்சிக்கு ஆளாகினர். பிரதமருக்கு தடையை விலக்க கோரிக்கை விடுத்தது முதல் தற்கொலை செய்வேன் என மிரட்டல் வரை பல்வேறு காமெடிகளும் அரங்கேறியது.

பாதுகாப்பான இணைய சேவை
இந்நிலையில், செல்போன் பயன்படுத்தும் நாட்டு மக்களுக்கு பாதுகாப்பான, நம்பகமான மற்றும் பொறுப்பான இணையத்தை உறுதி செய்வதற்காக தகவல் தொழில்நுட்ப (ஐடி) சட்டத்தின் விதியின் கீழ், மத்திய அரசு இதுவரை 320 மொபைல் ஆப்களை முடக்கியுள்ளது என்று நாடாளுமன்றத்தில் எழுத்துப் பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு நலன் கருதி இந்த மொபைல் அப்ளிகேஷன்கள் முடக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் சோம் பிரகாஷ் தெரிவித்தார்.

320 ஆப்கள் முடக்கம்
"அனைத்து பயனர்களுக்கும் பாதுகாப்பான, நம்பகமான மற்றும் பொறுப்பான இணையத்தை உறுதி செய்யும் நோக்கத்துடன், 2000 ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப (ஐடி) சட்டம் பிரிவு 69A இன் கீழ், அரசாங்கம் இதுவரை 320 மொபைல் பயன்பாடுகளை முடக்கியுள்ளது" என்று பிரகாஷ் கூறினார். மற்றொரு எழுத்துப்பூர்வ பதிலில், ஏப்ரல் 2000 முதல் டிசம்பர் 2021 வரை சீனாவிலிருந்து இந்தியா, 2.45 பில்லியன் டாலர் (தோராயமாக ரூ. 18,701 கோடி) அன்னிய நேரடி முதலீட்டை (FDI) பெற்றுள்ளது. இது மொத்த FDI ஈக்விட்டி வரவில் சீனா 0.43 சதவிகிதப் பங்குடன் ($2.45 பில்லியன்) 20வது இடத்தில் உள்ளது என்றும் அவர் கூறினார்.

பொருளாதார பாதிப்பில்லை
இந்தியாவிற்கு கிடைத்துள்ள அந்நிய முதலீட்டில் வெறும் 0.43 சதவீதம் மட்டுமே சீனாவுடையது. இதனால் இந்திய பொருளாதாரத்திற்கு எதுவும் பாதிப்பு இல்லை. கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல்முறையாக டிக்டாக், ஷேர் இட், யூ.சி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்தது. அதன்பின் பப்ஜி உள்ளிட்ட செயலிகள் தடை செய்யப்பட்டன. சமீபத்தில் இந்தியா 49 சீன செயலிகளை தடை செய்தது. இந்த செயலிகள் ஏற்கனவே தடைசெய்யப்பட்ட செயலிகளின் போலி வடிவங்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications