காஷ்மீரில் ராணுவ வீரர்கள் தொடர் வீரமரணங்களுக்கு மத்திய அரசுதான் பொறுப்பு: ராகுல் காந்தி காட்டம்
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதல்களில் ராணுவ வீரர்கள் தொடர்ந்து வீரமரணம் அடைந்து வரும் நிகழ்வுகளுக்கு மத்தியில் ஆளும் பாஜக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். மத்திய பாஜக அரசின் தவறான கொள்கைகளால்தான் ஜம்மு காஷ்மீரில் நமது ராணுவ வீரர்கள் தொடர்ந்து வீர மரணம் அடைவதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பயங்கரவாதிகள் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல்களில் ராணுவ வீரர்களின் வீரமரண துயர சம்பவங்களும் நிகழ்கின்றன. ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் நேற்று இரவு நடந்த பயங்கரவாதிகளுடனான மோதலில் 4 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராணுவ வீரர்கள் வீரமரணத்துக்கு பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் அதிர்ச்சியும் ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்களின் வீரமரணங்கள் தொடருவது குறித்து லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக ராகுல் காந்தி தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான மோதலில் இன்று நாம் 4 ராணுவ வீரர்களை இழந்துள்ளோம். வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்தகைய சம்பவங்கள் பெரும் துயரைத் தருகின்றன. ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல்கள் நீடித்து வருவது என்பது அம்மாநிலத்தின் நிலைமை மோசமாக இருப்பதையே வெளிப்படுத்துகிறது. பாஜக அரசின் தவறான கொள்கைகளால்தான் நமது ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்து வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீர் ராணுவ வீரர்களின் வீரமரணங்களுக்கு மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்பதுதான் தேசப்பற்றுள்ள ஒவ்வொரு இந்தியரின் வேண்டுகோள். நமது ராணுவத்துக்கும் ராணுவ வீரர்களுக்கும் பேரிழப்பை ஏற்படுத்தக் கூடியவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். ஒட்டுமொத்த தேசமும் பயங்கரவாதத்துக்கு எதிராக ஒருங்கிணைந்து நிற்க வேண்டும். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications