கொதிப்பை ஏற்படுத்திய ‘தமிழ் நாயுடு’.. ஓயாத ‘தமிழ்நாடு’ சர்ச்சை! ஸ்பெல்லிங்கை திருத்திய மத்திய அரசு
மத்திய அரசு இணையதளத்தில் பிழையாக இடம்பெற்ற ‘தமிழ் நாயுடு’ என்ற பெயர் ‘தமிழ்நாடு’ என்று திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.
டெல்லி: தலைநகர் டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் நடைபெற்ற மாநிலங்களின் அலங்கார ஊர்தி அணிவகுப்பில் பங்கேற்ற ஊர்திகளில் சிறந்ததை தேர்வு செய்ய மத்திய அரசின் இணையதளத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும் நிலையில் அதில் பிழையாக குறிப்பிடப்பட்டு இருந்த தமிழ் நாயுடு என்ற பெயர் திருத்தப்பட்டு உள்ளது.
கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த முறை குடியரசு தினத்தில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி தேர்வாகாத நிலையில் இம்முறை தேர்வாகி இருந்தது.
அந்த வகையில் தமிழ்நாட்டில் கல்வி, கலை, போர் போன்ற பல துறைகளில் பெண்களின் பங்களிப்பை போற்றும் வகையில் அவர்களின் சிலைகளை கொண்ட அலங்கார ஊர்தி வடிவமைக்கப்பட்டது. அதன் பின்புறம் தந்தை பெரிய கோயில் வடிவமைப்பும் இடம்பெற்றது.

தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி
ஔவையார், வேலு நாச்சியார், பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், டாக்டர் முத்துலட்சுமி, பரதநாட்டியக் கலைஞர் பால சரஸ்வதி, 107 வயது விவசாயியான மூதாட்டி பாப்பம்மாள் ஆகியோரின் உருவங்கள் அதில் வைக்கப்பட்டு இருந்தன. அந்த ஊர்தியிலும் அதன் அருகாமையில் தமிழ்நாட்டின் பாரம்பரிய இசைக்கு பெண் கலைஞர்கள் நடனமாடினர்.

தமிழ் நாயுடு
பெண்களை மையப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் இந்த அலங்கார ஊர்திக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் மத்திய அரசின் www.mygov.in என்ற இணையதளத்தில் சிறந்த அலங்கார ஊர்திக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதில் தமிழ்நாடு என்று குறிப்பிடுவதற்கு பதிலாக தமிழ் நாயுடு என்று குறிப்பிடப்பட்டு இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

திமுக கண்டனம்
இதுகுறித்து திமுக ஐடி விங் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "தமிழ்நாடுன்னு கூட எழுதத் தெரியாத தற்குறிகளிடம் மாட்டிக் கொண்டு தவிக்கிறது Tamilnadu. தமிழ்நாடு அரசின் 'குடியரசு தின அலங்கார ஊர்தி'க்கு வாக்களிக்கவும்" என்று குறிப்பிட்டு ( https://www.mygov.in/group-poll/vote-your-favorite-tableau-republic-day-2023/ ) என்ற லிங்கில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டு உள்ளது.

ராமதாஸ் கண்டனம்
இதேபோல் பாமக நிறுவனர் ராமதாஸும் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்து இருந்தார். அதில், "தில்லி குடியரசு நாள் விழா அணிவகுப்பில் பங்கேற்ற அலங்கார ஊர்திகளில் சிறந்த ஊர்தியை இணையவழி வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுப்பதற்கான மத்திய அரசின் இணையதளத்தில் (www.mygov.in) தமிழ்நாட்டின் பெயர் Tamil Naidu என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது!

நாட்டுக்கே அவப்பெயர்
தமிழ்நாட்டின் பெயர் பிழையாக குறிப்பிடப்பட்டிருப்பது எழுத்துப்பிழை என்று மட்டும் கருதி கடந்து செல்ல முடியாது. அரசின் இணையதளங்கள் அரசிதழுக்கு இணையானவை. அவற்றில் சிறிய பிழை கூட நிகழ அனுமதிக்கக்கூடாது. இது உலக அரங்கில் நாட்டிற்கு அவப்பெயரைத் தேடித் தரும்.

தமிழ்நாடு பெயர் சர்ச்சை
தமிழ்நாடு பெயர் அண்மைக் காலமாக தேவையின்றி சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டு வரும் சூழலில், மத்திய அரசு இணையதளத்தில் தமிழ்நாட்டின் பெயர் தவறாக குறிப்பிடப்பட்டிருப்பது பல்வேறு வகையான ஐயங்களை ஏற்படுத்துகிறது. இந்த பிழை உடனடியாக சரி செய்யப்பட வேண்டும்.

திருத்தப்பட்ட பிழை
www.mygov.in இணையதளத்தில் நடந்த இந்த பிழைக்கு அதை நிர்வகிக்கும் தேசிய தகவலியல் மையம் வருத்தம் தெரிவிக்க வேண்டும். தமிழ்நாட்டின் பெயர் பிழையாக பதிவு செய்யப்பட்டதற்கு காரணமானவர்கள் யார்? என்பது அடையாளம் காணப்பட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்." என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் தற்போது தமிழ்நாடு என்று பெயர் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications