மழையில் பிரேக் பிடித்தாலும் வழுக்க கூடாது.. டயர் தயாரிப்பதற்கு புதிய ரூல்ஸ்.. மத்திய அரசு அதிரடி!
டெல்லி: வரும் அக்டோபர் மாதம் முதல் புதிய விதிமுறைகளின்படி தான் வாகனங்களின் டயர்களை தயாரிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் வாகனங்களுக்கான புதிய டயர்களை தயாரிப்பதற்கான விதிமுறைகளையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. வரும் அக்டோபர் மாதம் முதல் புதிய விதிமுறைகளின்படி மட்டுமே வாகனங்களின் டயர்களை தயாரிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு அறிக்கை
இது குறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கனரக வாகன டயர்களை புதிய விதிமுறைகளின்படி தயாரிக்க வேண்டும். இந்தியாவில் விற்கப்படும் டயர்களின் உருளும்விதம், வாகனங்களின் எரிபொருள் திறன், ஈரமான தரையில் நிற்கும்விதம், மழை காலத்தில் பிரேக் செயல்பாடு, டயர் தரையில் இருக்கும்போது ஏற்படும் சத்தம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

விதிமுறைகள்
இதே போன்ற விதிமுறைகள் கடந்த 2016ம் ஆண்டு முதல் ஐரோப்பிய நாடுகளின் சந்தைகளில் உள்ளன. இவை, டயரின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளன. டயர் உற்பத்தியாளர்கள், கார்கள், பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்களுக்கான டயர்களை இறக்குமதி செய்பவர்கள் என அனைவரும் இந்த விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். டயர்கள் உருளும்விதம், எரிபொருள் திறனையும், ஈரமான தரையில் நிற்கும்விதம், மழை காலத்தில் பிரேக் செயல்பாடு, டயர் தரையில் இருக்கும்போது ஏற்படும் சத்தம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

மழைக் கால எச்சரிக்கை
அதேபோல் இந்திய சாலைகளை மனதில் வைத்து, மழைக் காலத்திலும் கிரிப்புடன் வழுக்காமல் இருக்கும் வகையில் டயர்கள் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் ஒவ்வொரு பருவ காலத்துக்கும் வெவ்வேறு டயர்கள் பயன்படுத்தும் சூழல் இருக்கும் நிலையில், இந்தியாவில் அனைத்து பருவங்களுக்கும் ஒரே டயரை பயன்படுத்தும் நிலை உள்ளது. இதனை மனதில் வைத்து புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

எப்போது முதல் அமல்?
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் இந்த புதிய விதிமுறைகள் அனைத்தும் இந்தாண்டு அக்டோபர் முதல் தயாரிக்கப்படும் புதிய டயர்களுக்கு பொருந்தும் என்று கூறியுள்ளது. பல உள்நாட்டு டயர் உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்புகளை உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்கின்றனர். எனவே, பாதுகாப்பு விதிமுறைகளை பூர்த்தி செய்வது ஒரு பிரச்னையாக இருக்கக் கூடாது என்று ஒன்றிய அரசு கருதுகிறது.
இந்த புதிய விதிமுறைகள் இந்தியாவில் பாதுகாப்பான டயர்கள் மட்டுமே விற்கப்படுவதை உறுதி செய்யும் என்றும், மலிவான விலையில் இறக்குமதி செய்யப்படும் டயர்கள் சந்தையில் இருந்து வெளியேற்றப்படும் என்று கூறப்படுகிறது. அதேபோல் விபத்துகளை குறைக்கவும் இந்த விதிமுறைகள் பயனளிக்கும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications