காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடகாவுக்கு அனுமதி தரவில்லை- மத்திய அரசு விளக்கம்!
டெல்லி: காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகா அரசானது மேகதாது (மேக்கேதாட்டு) அணை கட்டுவதற்கு ஒப்புதலோ, அனுமதியோ எதுவுமே தரப்படவில்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேகதாது அணை கட்டுவதில் கர்நாடகாவில் முந்தைய பாஜக அரசும் தற்போதைய காங்கிரஸ் அரசும் உறுதியாக உள்ளன. இதற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில், மேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்கு எந்த அனுமதியையும் மத்திய அரசு தரவில்லை என தெரியவந்துள்ளது.
காவிரி ஆற்றின் குறுக்கே கிருஷ்ணராஜ சாகரில் கர்நாடகா அணை கட்டியதால் 100 ஆண்டுகளுக்கும் மேலாக காவிரி நீர் பிரச்சனை தொடருகிறது. காவிரி நதியில் தமிழ்நாட்டுக்கு உரிய பங்கினை கர்நாடகா இப்போதும் திறந்துவிட மறுக்கிறது. கர்நாடகா அணைகள் நிரம்பிவிட்டால் உபரி நீரை காவிரியில் தமிழ்நாட்டுக்கு திறந்துவிடக் கூடிய வடிகால் நிலமாகவே கர்நாடகா இன்னமும் கருதுகிறது.

தற்போது காவிரியில் வெள்ளம் கரைபுரண்டோடும் நிலையில் சுமார் 80,000 கன அடி நீரை கர்நாடகா திறந்துவிட்டது. இதற்கு காரணம் கர்நாடகா அணைகள் நிரம்பிவிட்டதால் இனி நீரைத் தேக்க முடியாது என்பதால்தான். இந்த நிலையில் மேகதாது (மேக்கேதாட்டு) என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே 67 டிஎம்சி கொள்ளளவு கொண்ட புதிய அணை கட்டுவதில் கர்நாடகா தீவிரமாக உள்ளது.
அதாவது காவிரியில் திறந்துவிடப்படக் கூடிய உபரிநீரையும் அபகரித்துக் கொள்ளும் நோக்கத்துடன் மேகதாது அணையை கட்டுவதற்கு கர்நாடகா முயற்சிக்கிறது. இதற்கு தமிழ்நாடு கடும் எதிர்ப்புத் தெரிவித்துக் கொண்டிருக்கிறது. காவிரி பயன்பாட்டு மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் மேகதாது அணை கட்ட முடியாது. ஆனாலும் மத்திய அரசின் அனுமதியைப் பெற்று எப்படியாவது மேகதாதுவில் அணையை கட்ட துடிக்கிறது கர்நாடகா.
இதனிடையே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளதா? என்பது குறித்து கேட்கப்பட்டது. இதற்கு மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவுக்கு ஒப்புதல் தரப்படவில்லை என தெளிவாக விளக்கம் தரப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications