"ரொம்பவே தப்பு.. நாட்டிற்கே ஆபத்து!" இணையத்தில் வெளியான உளவு துறை ரிப்போர்ட் ! டென்ஷனான கிரண் ரிஜிஜு
டெல்லி: நீதிபதிகள் நியமனம் தொடர்பாக மத்திய அரசுக்கும் நீதிபதிகளுக்கும் இடையே கருத்து மோதல் தொடரும் நிலையில், இது தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இது நாட்டிற்கே ஆபத்தைத் தரலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
நமது நாட்டில் இப்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட கொலீஜியம் என்ற அமைப்பே நீதிபதிகளைப் பரிந்துரைக்கிறார்கள்.. அவர்கள் அளிக்கும் பரிந்துரை அடிப்படையிலேயே மத்திய அரசு நீதிபதிகளை நியமிக்கிறது.
இந்த கொலீஜியம் குழு என்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட 5 நீதிபதிகள் இருப்பார்கள். இருப்பினும், நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசுக்கு அதிக பங்கு தேவை என்று மத்திய அமைச்சர்கள் கூறி வருகின்றனர். இதற்கு நீதிபதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
‛‛கோமியம்’’ தீராத நோய்களுக்கு தீர்வு தரும்.. பசுவதை வழக்கில் குஜராத் நீதிபதி கருத்து.. முழுவிபரம்
அமைச்சர் கிரண் ரிஜிஜு
இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கும் நீதிபதிகளுக்கும் இடையே கருத்து மோதல் தொடர்ந்து வருகிறது. இதனிடையே கொலீஜியம் பரிந்துரைத்த சில நபர்களை நீதிபதியாக நியமிக்க மத்திய அரசு ஆட்சேபம் தெரிவித்திருந்தது. மத்திய அரசின் ஆட்சேபனைகளை உச்ச நீதிமன்றம் பகிரங்கப்படுத்தியதற்கு மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கடந்த வாரம் மத்திய அரசின் ஆட்சேபனைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் உச்ச நீதிமன்றம் தனது இணையதளத்தில் வெளியிட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கவலைக்குரிய விஷயம்
ஏனென்றால், உளவுத்துறை நிறுவனங்களான ரா, ஐபி ஆகியவை கொடுத்த தகவல்கள் அரசின் ஆட்சேபனைகளில் இருந்த நிலையில், அவை அனைத்தும் பொதுவெளியில் பகிரப்பட்டதே சர்ச்சைக்குக் காரணமாக இருந்தது. இது குறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுகையில், "ரா மற்றும் ஐபி அமைப்புகளின் ரகசிய மற்றும் முக்கியமான அறிக்கைகளைப் பொதுவெளியில் வெளியிடுவது மிகவும் கவலைக்குரிய விஷயம்.. அதற்கு நான் சரியான நேரத்தில் பதிலளிப்பேன். இது குறித்துப் பேச இன்று பொருத்தமான நாள் இல்லை.
ஆபத்தில் முடியும்
நமது நாட்டிற்காக ஏதோ ஒரு பகுதியில் இருந்து ரகசியமாக உழைக்கும் அதிகாரி, நாளை தனது அறிக்கை பொதுவெளியில் வெளியிடப்படலாம் என்று நினைக்கத் தொடங்கினால், அது நமது ஆபத்தில் முடியும். இந்த விவகாரத்தில் நான் இப்போது கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.. ஆனால், நிச்சயம் இது குறித்து விரைவில் பேசுவேன் நானும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் அடிக்கடி சந்திக்கிறோம்.. நாங்கள் எப்போதும் தொடர்பில் தான் இருந்து வருகிறோம்.
நடந்தது என்ன
அவர் நீதித்துறையின் தலைவர், நான் அரசுக்கும் நீதித்துறைக்கும் பாலமாக இருக்கிறேன். நாம் ஒன்றாக வேலை செய்ய வேண்டும்.. தனியாக வேலை செய்வது பலன் தராது.. இது ஒரு சர்ச்சைக்குரிய பிரச்சினை. அதை விரிவாக இன்னொரு நாள் விளக்குகிறேன்" என்றார். தன்பால் ஈர்ப்பாராக இருக்கும் ஒருவர் உட்பட மூன்று பேரை நீதிபதிகளாக நியமிக்க அரசு தெரிவித்த ஆட்சேபனைகளைக் கடந்த ஜனவரி 19ஆம் தேதி உச்ச நீதிமன்றம் பகிரங்கமாக வெளியிட்டது.
முதல்முறை
கொலீஜியம் பரிந்துரைக்கும் நபர்கள் குறித்து உளவு அமைப்புகள் ரிப்போர்ட் அனுப்புவது வழக்கமான நடைமுறை தான். இருப்பினும், மத்திய அரசின் கருத்துகள் இதுவரை பொதுவெளியில் வெளியிடப்பட்டது இல்லை. நீதிபதிகள் நியமனம் தொடர்பாக நீதித்துறைக்கும் மத்திய அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், முதல்முறையாக இந்த கருத்துகள் பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளது.
நீதிபதிகள் நியமனம்
இது தொடர்பாக சுமார் 4 நாட்கள் விவாதித்த பின்னரே மத்திய அரசின் கருத்துகளைப் பொதுவெளியில் வெளியிட நீதிமன்றம் முடிவு செய்ததாகத் தெரிகிறது. நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படத்தன்மை இல்லை என்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பான அரசுக்கு இதில் அதிக பங்கு தேவை என்றும் இந்த விவகாரத்தில் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். இருப்பினும், நீதிபதிகள் நியமனத்தில் தற்போதுள்ள கொலீஜியம் முறையே பின்பற்ற வேண்டும் என்பது நீதித்துறையினரின் கருத்தாக உள்ளது.