"ரொம்ப ஏமாற்றம் தருகிறது.." இந்தியா மீது அமெரிக்கா திடீர் அதிருப்தி.. இது தான் காரணம்.. முழு பின்னணி
டெல்லி: உக்ரைன் போர் தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாடு குறித்து அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளன.
கடந்த பிப்.24ஆம் தேதி தொடங்கிய உக்ரைன் போர், 5ஆவது வாரமாக இப்போதும் தொடர்கிறது. உக்ரைன் நாட்டில் உள்ள முக்கிய நகரங்களைக் குறி வைத்து, ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்,
ரஷ்யா பல ஆண்டுகளாகவே இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாக இருந்து வருகிறது. இதன் காரணமாக இந்தப் போரில் நடுநிலையை எடுக்கப்போவதாக இந்தியா அறிவித்திருந்தது.

உக்ரைன் போர்
இருப்பினும், புதினின் இந்த போர் நடவடிக்கையால் உலக நாடுகள் கடும் கொந்தளிப்பில் உள்ளன. போர் தொடங்கியது முதலே ரஷ்யா மீது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை உலக நாடுகள் அறிவித்து வருகின்றன. அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா உள்ளிட்டவை மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளன. மேலும், சர்வதேச வங்கி பேமேன்ட் முறையான SWIFT முறையைப் பயன்படுத்தவும் பல ரஷ்ய வங்கிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளன.

இந்தியா
இது போன்ற கடுமையான பொருளாதாரத் தடைகளால் ரஷ்யாவின் பொருளாதாரம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நேரடியாக இந்திய ரூபாய்- ரஷ்யாவின் ரூபிள் நாணயத்தைப் பயன்படுத்தி வர்த்தகம் செய்யும் திட்டத்தை ரஷ்யா சமீபத்தில் முன்மொழிந்து இருந்தது. இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்ற போதிலும், ரஷ்யாவின் இந்த முன்மொழிவை இந்தியா தீவிரமாகப் பரிசீலனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இது தொடர்பாக ஆலோசிக்க ரஷ்யாவின் முக்கிய வங்கித் துறை அதிகாரிகள் அடுத்த வாரம் இந்தியா வரவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதிருப்தி
இந்தியாவின் இந்த நிலைப்பாட்டிற்கு அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளைக் குலைக்கும் வகையில் ரஷ்யாவின் இந்தத் திட்டத்தை இந்தியா பரிசீலிப்பதாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகள் விமர்சித்தன.இது குறித்து ஆஸ்திரேலியா வர்த்தக அமைச்சர் டான் டெஹான் கூறுகையில், "இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உலக நாடுகள் உருவாக்கிய விதிகள் வைத்திருக்க உலக ஜனநாயக நாடுகள் ஒன்றிணைந்து செயல்படுவது முக்கியம்" என்றார். உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு, உலக நாடுகளுக்குத் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என்பதையே இது காட்டுகிறது.

அமெரிக்கா
அதேபோல இது தொடர்பாக வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வர்த்தக செயலாளர் ஜினா ரைமண்டோ, "வரலாற்றில் சரியான இடத்தில் நிற்க வேண்டிய நேரம் இது. அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் உடனும், உக்ரைன் மக்களின் சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் இறையாண்மைக்காக நிற்கும் நேரம் இது. இத்தகைய காலகட்டத்தில் புதின் முன்னெடுத்துள்ள இந்த போருக்கு உதவும் நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது" என்றார். மேலும், இந்த விவாகரத்தில் இந்தியா எடுத்துள்ள நிலைப்பாடு ஆழ்ந்த ஏமாற்றம் அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கச்சா எண்ணெய்
சர்வதேச அளவில் ரஷ்யாவிடம் இருந்து அதிக ஆயுதங்களைக் கொள்முதல் செய்யும் நாடாக இந்தியா உள்ளது, மேலும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்து வரும் நிலையில், குறைந்த விலையில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் முயற்சியிலும் இந்தியா தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இது சர்வதேச நாடுகளின் பொருளாதாரத் தடை அறிவிப்புகளைக் குலைக்கும் என்பதே உலக நாடுகளின் அதிருப்தியாக உள்ளது.

போர்
உக்ரைன் நாட்டில் நடைபெற்று வரும் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்தையே இந்தியாவும் வலியுறுத்தி வருகிறது. இருப்பினும், ஐநா பாதுகாப்புச் சபையிலும் சரி, ஐநா பொதுச்சபையிலும் சரி ரஷ்யாவுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் வாக்களிக்க இந்தியா மறுத்துவிட்டது. அதேபோல உக்ரைன் போர் தொடர்பாகச் சமீபத்தில் துருக்கியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications