நாட்டிலேயே அதிகம்.. தமிழ்நாட்டுக்கே பெருமை சேர்த்த சுகாதார ஊழியர்கள்.. மத்திய அரசின் லிஸ்ட் பாருங்க
டெல்லி: ஒதுக்கப்பட்ட தடுப்பூசி அளவைவிட அதிக அளவில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்திய மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. நாட்டிலேயே தமிழகத்தில் தான் , ஒதுக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 2வது மற்றும் 3வது இடங்களில் மேற்கு வங்கமும், குஜராத்தும் உள்ளன.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் இந்த மாத தொடக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசும் போது, தமிழகத்தில் ஜனவரி 16 முதல் தடுப்பூசி போடப்படுகிறது. திமுக ஆட்சிக்கு வரும் வரை 3.5-4 லட்சம் வரை தடுப்பூசிகள் வீணாகிவிட்டதாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அறியப்பட்டது. தமிழகத்தில் தடுப்பூசிகளை வீணடித்துவிட்டதாக அப்போது குற்றச்சாட்டு எழுந்தது.
அதன்பின் ஆட்சியமைத்த திமுக, வீணான 3.5 லட்சம் தடுப்பூசிகளையும் சேர்த்து, 1.75 லட்சம் தடுப்பூசிகள் கூடுதலாக இருக்கும் வகையில், நிர்வாகத் திறமையுடன் கூடுதலாகச் செலுத்தியிருக்கிறது. ஒரு 'வயலில்' (Vial) 10 பேருக்குத் தடுப்பூசி என்றால், மருந்தின் அளவைக் குறைத்துப் பலருக்கும் போடப்படுகிறதா என்று கேட்கலாம். மருந்தின் அளவில் குறைவேதும் இல்லை.

மா சுப்பிரமணியன்
மருந்தைக் குப்பியில் அடைக்கும்போது 16-24% கூடுதலாக மருந்தை அடைக்கிறார்கள். அந்த மருந்தை மிகச் சாமர்த்தியமாக, ஒரு வயலில் இருந்து 11 பேருக்கு சுகாதாரத்துறையினர் செலுத்தியிருக்கின்றனர். ஒரு தடுப்பூசியைப் பயன்படுத்தும் போது நிச்சயமாக 11 பேர் இருப்பதை உறுதி செய்துவிட்டு செலுத்துவதால் தடுப்பூசி வீணாவதில்லை.

சமார்த்தியம்
அதனால் வந்த தடுப்பூசிகளை விட மிக சாமர்த்தியமாக கூடுதலாகத் தடுப்பூசிகளைப் போட்டுள்ளோம் என்று விளக்கமும் கொடுத்தார். உண்மையில் பாராட்டுக்குறிய விஷயம் ஆகும். தமிழக சுகாதாரத்துறை ஊழியர்கள் சிறப்பாக செயல்பட்டதால் இன்று நாட்டிலேயே ஒதுக்கப்பட்டதை விட (அதாவது எதையும் வீணாக்காமல்) கூடுதலாக மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி உள்ளார்கள்.

வீணாக்கவே இல்லை
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மாநில வாரியாக தடுப்பூசிகளை வீணாக்காமல் அதிக அளவில் செலுத்திய மாநிலங்கள் பட்டியலை (ஜூலை 20 நிலவரப்படி) வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் தமிழகம் ஒரு டோஸ் தடுப்பூசி அளவை கூட, வீணக்காததுடன் இதுவரை ஒதுக்கப்பட்ட அளவை விட 5,88,243 டோஸ்களை கூடுதலாக செலுத்தி முதல் இடத்தில் உள்ளது.

மேற்கு வங்கம்
மேற்கு வங்க மாநிலம் 4,87,147 டோஸ்களை கூடுதலாக செலுத்தி 2வது இடத்தையும், குஜராத் 4,62,819 டோஸ்களுடன் 3 வது இடத்தையும் பிடித்துள்ளன. கேரளா 3,92,409 கூடுதல் டோஸ்கள் செலுத்தி 4வது இடத்தையும், 3,59,493 டோஸ்களுட ன் மகாராஷ்டிரா 5வது இடத்தையும் பிடித்துள்ளன.

அதிக டோஸ் வீண்
3,55,249 டோஸ்களுடன் மத்திய பிரதேசம் பட்டியலில் 6வது இடத்தையும், 3,10,528 டோஸ்களுடன் கர்நாடகா மாநிலம் 7வது இடத்தையும் பிடித்துள்ளன. ராஜஸ்தான், ஆந்திரா தலா 8வது, மற்றும் 9வது இடத்தை பிடித்துள்ளன. நாட்டிலேயே அதிக டோஸ் தடுப்பூசியை வீணாக்கிய மாநிலங்கள பட்டியலில் பீகார் 1,26,743 டோஸ்களுடன் முதலிடத்தில் உள்ளது. டெல்லி, ஜம்மு காஷ்மீர், மணிப்பூர், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களும் தடுப்பூசியை வீணாக்கி உள்ளன.












Click it and Unblock the Notifications