வெளிநாடுகளிலிருந்து வேக்சின் வாங்க முடிவு.. சோதனை நிலையில் மேலும் 3 தடுப்பூசிகள்.. பிரதமர் பேச்சு!
டெல்லி: தடுப்பூசி சப்ளையை அதிகரிக்க, வெளிநாட்டிலிருந்து தடுப்பூசிகளை வாங்க உள்ளோம், வெளிநாட்டிலிருந்து தடுப்பூசி வாங்குவதற்கான செயல்முறை துரிதப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் 3 தடுப்பூசிகள் தற்போது சோதனை கட்டத்தில் உள்ளன, என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவலை மத்திய அரசு எதிர்கொண்ட விதம் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்தது. முக்கியமாக வேக்சின் ஆர்டர் செய்வதிலும், அதை மாநில அரசுகளுக்கு ஒதுக்குவதிலும் தோல்வி அடைந்துவிட்டதாக மத்திய அரசு மீது புகார் வைக்கப்பட்டு வருகின்றது. உச்ச நீதிமன்றமே மத்திய அரசின் வேக்சின் கொள்கையை கடுமையாக விமர்சனம் செய்தது.
இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று மக்கள் முன்னிலையில் கொரோனா பரவல் குறித்தும், வேக்சின் குறித்தும் பேசினார். மக்களுக்கு வேக்சின் போடுவதன் முக்கியத்துவத்தையும், இதற்காக மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் பேசினார்.
வேக்சின்
வேக்சின் குறித்து பிரதமர் மோடி தனது பேச்சில், இந்தியா கடந்த 100 வருடங்களில் கண்டறியாத பேரிடர் கொரோனா. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் மக்களின் உயிரை காப்பாற்றியுள்ளன. ஆரம்பத்தில் தடுப்பூசி போடும் வேகம் குறைவாக இருந்தது தற்போது இந்த வேகம் அதிகரித்துள்ளது.
தடுப்பூசி
தடுப்பூசி மட்டும் தான் இந்த அபாயத்திலிருந்து மக்களை காப்பாற்றும். கொரோனாவை தடுக்க தடுப்பூசி மட்டுமே பேராயுதம். நவீன உலகம் கொரோனாவை போன்று ஒரு பெருந்தொற்றை கண்டதே இல்லை. இந்தியாவிலேயே இரண்டு வேக்சின் உருவாக்கப்பட்டு, அதன் மூலம் லட்சக்கணக்கான மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இந்தியா போராட்டம்
கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா முன்களத்தில் நின்று போராடி வருகிறது. கொரோனாவைத் தொடர்ந்து புதிய சுகாதார கட்டமைப்பை இந்தியா உருவாக்கியுள்ளது. மூக்கு வழியாக செலுத்தப்படும் வேக்சின் அனுமதிக்கப்பட்டால் நமது வேக்சின் போடும் வேகம் இன்னும் அதிகரிக்கும்.
சொட்டு மருந்து
மூக்கில் சொட்டு மருந்தாக செலுத்தும் வகையிலான தடுப்பூசி விரைவில் வரும். மேலும் 3 தடுப்பூசிகள் தற்போது சோதனை கட்டத்தில் உள்ளன. தடுப்பூசி பணிகளை துரிதப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டில் மொத்தம் 7 கம்பெனிகள் வேக்சின் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன. குழந்தைகளிடம் வேக்சின் சோதனை செய்வதும் தொடங்கி உள்ளது.
முடிவு
குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இரண்டு தடுப்பூசிகளின் டிரையல் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை விரைவில் முடிவிற்கு வரும். தடுப்பூசி சப்ளையை அதிகரிக்க, வெளிநாட்டிலிருந்து தடுப்பூசிகளை வாங்க உள்ளோம். வெளிநாட்டிலிருந்து தடுப்பூசி வாங்குவதற்கான செயல்முறை துரிதப்படுத்தப்பட்டுள்ளது, என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.