வீரமரணமடைந்த ராணுவ வீரர்களின் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்கிறார் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக்
டெல்லி: புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களின் படிப்பு செலவை நானே ஏற்கிறேன் என கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் தற்கொலை படை தாக்குதலின் போது 40 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அவர்கள் ஆந்திரம், கர்நாடகம், கேரளம், தமிழகம், பஞ்சாப், பீகார் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்களாவர்.
இந்த தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் நிதியுதவியையும் அரசு வேலையையும் அறிவித்துள்ளன. இந்த நிலையில் காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுடைய குழந்தைகளின் கல்வி செலவு முழுவதையும் ஏற்றுக்கொள்வதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேவாக் தெரிவித்துள்ளார்.
Nothing we can do will be enough, but the least I can do is offer to take complete care of the education of the children of our brave CRPF jawans martyred in #Pulwama in my Sehwag International School @SehwagSchool , Jhajjar. Saubhagya hoga 🙏 pic.twitter.com/lpRcJSmwUh
— Virender Sehwag (@virendersehwag) February 16, 2019
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் 'உயிர்தியாகம் செய்த இந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு நாம் எது செய்தாலும் போதுமானதாக இருக்காது. ஆனால் குறைந்தது என்னால் முடிந்த உதவியாக வீரமரணம் அடைந்த வீரர்களுடைய குழந்தைகளின் கல்வி செலவு முழுவதையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். அவர்களை எனது பெயரில் உள்ள ஷேவாக் சர்வதேச பள்ளியில் படிக்க வைக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இரானி கோப்பையை வென்றதன் மூலம் கிடைத்த பரிசுத்தொகையை, தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்குவதாக விதர்பா அணியின் கேப்டன் பைஸ் பாசல் அறிவித்து இருக்கிறார்.
இதே போல் அரியானா காவல்துறையில் பணியாற்றும் இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்தர்சிங் தனது ஒரு மாத ஊதியத்தை வழங்குவதாகவும், இதே போல் ஒவ்வொருவரும் ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு உதவ முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.