கஷ்டம் தான்!! 'தொடர்ந்து உருமாறும் கொரோனா.. 3ஆம் அலையுடன் முடிந்து போகாது..' டாப் ஆய்வாளர் வார்னிங்
டெல்லி: கொரோனா வைரஸ் குறித்தும் அது வரும் காலத்தில் எப்படி இருக்கும் என்பது குறித்தும் இந்தியாவின் பிரபல வைராலஜிஸ்ட் டாக்டர் ககன்தீப் காங் விரிவான பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
நாட்டில் கடந்த சில நாட்களாகவே வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த 4 நாட்களில் மட்டும் வைரஸ் பாதிப்பு 2.5 மடங்கு அதிகரித்துள்ளது.
அதேபோல ஓமிக்ரான் கேஸ்களின் எண்ணிக்கையும் நேற்று டிச.31 1,270ஆக அதிகரித்துள்ளது. சராசரியாக 2 நாட்களுக்கு ஒரு முறை ஓமிக்ரான் கேஸ்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகி வருகிறது.
புத்தாண்டில் ரசிகர்களுக்கு புத்துணர்வு ஊட்டிய ஓவியா...அந்த நாட்களை நினைத்து ஏங்கும் ரசிகர்கள்
எச்சரிக்கை தேவை
கொரோனா வைரஸ் குறித்தும் அது வரும் காலத்தில் எப்படி இருக்கும் என்பது குறித்தும் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் இந்தியாவின் பிரபல வைராலஜிஸ்ட் டாக்டர் ககன்தீப் காங் விரிவான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர், "வரும் காலத்தில் அடுத்தடுத்து நாம் கொரோனா வைரசின் பல்வேறு அலைகளை எதிர்கொள்ள நேரிடும். இந்த வைரஸ் காற்றில் பரவும் திறனைக் கொண்டிருப்பதால் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த கொரோனா வைரசுடன் இணைந்து வாழ நாம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது மிகவும் தெளிவாக உள்ளது.
தயாராக உள்ளோம்
இந்த வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் வரும் காலங்களில் நாம் பல உருமாறிய கொரோனா வகைகளைப் பார்ப்போம் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட நாடு இப்போது சிறப்பான முறையில் தயாராக உள்ளது. கொரோனா பரிசோதனை, சிகிச்சை முறை, தடுப்பூசி குறித்துப் புரிந்து கொள்ள நம்மிடம் இப்போது ஏராளமான கருவிகள் உள்ளன.
வைரசுடன் வாழ வேண்டும்
அதேபோல மக்களும் கொரோனா வைரசுடன் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். நல்வாய்ப்பாக ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு தீவிரமானதாக இல்லை. குழந்தைகள் மத்தியில் கொரோனா பாதிப்பு குறைவாகவே உள்ளது. இதனால் நாம் குழந்தைகளைத் தைரியமாகப் பள்ளிக்கு அனுப்பலாம். இந்தியாவில் வரும் ஜனவரி. 10 முதல் பூஸ்டர் டோஸ் பணிகள் தொடங்கப்பட உள்ளது. நாட்டில் எந்த தடுப்பூசியை பூஸ்டர் டோஸாகப் பயன்படுத்த வேண்டும் என்ற முடிவு எடுக்க போதுமான தரவுகள் இல்லை. இது தொடர்பான தரவுகள் மிகவும் குறைவாகவே உள்ளது.
அடுத்தடுத்து அலைகள்
இந்த வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருக்கிறது. எனவே, மூன்றாவது அலை மட்டுமில்லை அடுத்து 4, 5, 6 என அடுத்தடுத்து அலைகள் நிச்சயம் ஏற்படும். இந்த வைரஸ் சுவாசப் பாதைகளில் பரவுகிறது. எனவே இந்த வைரஸ் நிச்சயம் மீண்டும் மீண்டும் வரத்தான் செய்யும்" என்று அவர் குறிப்பிட்டார். ஓமிக்ரான் பரவல் திடீரென அதிகரித்துள்ள நிலையில், டாக்டர் ககன்தீப் காங்கின் இந்த கருத்து முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
பூஸ்டர் டோஸ்
ஓமிக்ரான் அச்சம் காரணமாக பல்வேறு நாடுகளிலும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதேபோல பல உலக நாடுகளில் பூஸ்டர் டோஸ் பணிகளும் தொங்கப்பட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை வரும் ஜன.10 முதல் வேக்சின் பணிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல 15 முதல் 18 வயது சிறார்கள் வேக்சின் போடும் பணிகள் ஜன.3ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.