கரூரில் இறந்த சிறுவனின் தந்தை சுப்ரீம் கோர்ட்டில் வைத்த வாதம்.. பதில் கொடுத்த தமிழக அரசு!
டெல்லி: கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான வழக்கை சிபிஐ விசாரித்தால்தான் உண்மை வெளியே வரும் என கூட்ட நெரிசலில் உயிரிழந்த சிறுவர் பிரித்திக்கின் தந்தை பன்னீர்செல்வம் என்பவர் தரப்பு உச்சநீதிமன்றத்தில் வாதம் வைத்துள்ளது.
"8 ஆண்டுகளுக்கு முன்பே பன்னீர்செல்வம் எங்களை விட்டுச் சென்றுவிட்டார். 'கணவரால் கைவிடப்பட்டவர்' சான்றிதழும் என்னிடம் உள்ளது. பணத்திற்காக இந்த வழக்கு போட்டுள்ளார்" என உயிரிழந்த சிறுவன் பிரித்திக்கின் தாயார் ஷர்மிளா குற்றம்சாட்டியிருந்தார்.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி இரவு தவெக தலைவர் விஜய் பரப்புரையில், கூட்ட நெரிசல் காரணமாக 10 குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து விசாரிக்க தமிழ்நாடு அரசு, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தனிநபர் ஆணையத்தை அமைத்தது.
இருப்பினும், இந்த வழக்கில் சதி இருக்கிறது என்றும், எனவே வழக்கை சிபிஐக்கு மாற்றுமாறும், பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால் மனுதாரர் உமா ஆனந்தன் இந்த விவகாரத்திற்கு தொடர்பில்லாத நபர் என்பதால் சிபிஐ விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரில் 13 வயதான பிரித்திக் என்ற சிறுவனின் தந்தை பன்னீர்செல்வம் என்பவர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணைக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவும் இன்று விசாரிக்கப்பட்டது
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான வழக்கை சிபிஐ விசாரித்தால்தான் உண்மை வெளியே வரும் என கூட்ட நெரிசலில் உயிரிழந்த சிறுவர் பிரித்திக்கின் தந்தை பன்னீர்செல்வம் என்பவர் தரப்பு உச்சநீதிமன்றத்தில் வாதம் வைத்துள்ளது.
தமிழ்நாடு அரசு தரப்பு வாதம் வைக்கும்போது, "உயிரிழந்த சிறுவனுடைய தந்தையின் வலி எங்களுக்குப் புரிகிறது. அதே வேளையில் இந்த விவகாரத்தை பொறுத்தவரை, தமிழ்நாடு அரசு சிறப்பு விசாரணைக் குழு அதிகாரியை நியமிக்கவில்லை. மாறாக உயர் நீதிமன்றம்தான் நியமித்தது.
அஸ்ரா கார்க் என்ற மூத்த அதிகாரிதான் சிறப்பு விசாரணைக் குழுவினுடைய அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். இந்த அதிகாரி சி.பி.ஐ போன்ற மத்திய விசாரணை அமைப்புகளில் பணியாற்றியவர். சிறந்த அதிகாரியாக இருந்து கொண்டிருக்கிறார். எனவே இவருடைய விசாரணையே தொடரலாம்." என வாதம் வைத்துள்ளது.
மேலும், "தான் பாதிக்கப்பட்டுள்ளேன் என்ற இந்த ஒரு காரணத்தின் அடிப்படைக் கொண்டு மட்டும் சிபிஐ விசாரணைக்கு மாற்ற அனுமதிக்க கூடாது. ஏனெனில் கள நிலவரங்கள் அனைத்தையும் அறிந்தவர்கள் தமிழ்நாடு அதிகாரிகள். எனவே ஒரு சிறந்த அதிகாரியின் தலைமையில் அமைக்கப்பட்ட அந்த சிறப்பு விசாரணைக் குழுவில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை தொடர வேண்டும்.
இவ்வாறு பல வழக்குகளை தொடர்ச்சியாக சிபிஐ-க்கு மாற்றிக் கொண்டிருந்தால் சிபிஐ முன்பு அதிக அளவிலான வழக்குகள் குவிந்து கிடக்கும். ஆனால் சிபிஐக்கு இருப்பதோ Limited Resourceதான்." என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, பன்னீர்செல்வத்தின் மனைவி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "எனது கணவர் என்னை விட்டு பிரிந்து 8 வருடம் ஆகிவிட்டது. உச்சநீதிமன்றத்தில் எனது கணவர் வழக்கு போட்டதே தெரியாது. உயிரிழந்த மகனுக்காக அவர் ஒரு சொட்டு கண்ணீர் கூட அவர் விடவில்லை. சுடுகாட்டுக்கு வந்து எட்டிப் பார்த்துவிட்டு போய்விட்டார். அவன் என்ன படிக்கிறான், என்ன பிடிக்கும் என்பது கூட அவருக்கு தெரியாது. இந்தநிலையில் காசுக்காக சிலரின் தூண்டுதலின் பேரில் வழக்கு போட்டிருக்கலாம் என நினைக்கிறேன்" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications