எல்லை மோதல்- உளவுத்துறை தோல்வி அடைந்துவிட்டதா? அனைத்து கட்சி கூட்டத்தில் சோனியா சரமாரி கேள்வி
டெல்லி: கால்வன் (கல்வான், கல்வான்) பள்ளத்தாக்கு விவகாரத்தில் உளவுத்துறை தோல்வி அடைந்துவிட்டதா? என்று பிரதமர் மோடி நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி சரமாரி கேள்விகளை எழுப்பினார்.
லடாக்கின் கிழக்கில் கால்வன் பள்ளத்தாக்கை உரிமை கோரி ஆக்கிரமிக்க சீனா முயன்றது. சீனாவின் இந்த அத்துமீறலை இந்திய ராணுவ வீரர்கள் தீரமுடன் முறியடித்தனர்.
இம்மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இச்சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையே பெரும் கொந்தளிப்புக்குள்ளாக்கியிருக்கிறது. இந்த மோதல் தொடர்பாக பிரதமர் மோடி இன்று அனைத்து கட்சித் தலைவர்களுடனான ஆலோசனை கூட்டத்தை வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் நடத்தினார்.
பிரதமர் மோடியை ஆதரிப்பதில் எந்த தயக்கமும் இல்லை... அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஸ்டாலின் திட்டவட்டம்
ஆக்கிரமிப்பு எப்போது தெரியும்?
இந்த கூட்டத்தில் 20 இந்திய ராணுவ வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்து காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி பேசியதாவது: லடாக்கில் எந்த தேதியில் சீனா ராணுவம் நமது பகுதிக்குள் ஊடுருவியது? நமது பகுதிக்குள் சீனா ஆக்கிரமித்திருக்கிறது என்பதை எப்போது மத்திய அரசுக்கு தெரியவந்தது?
புலனாய்வு அமைப்புகள் என்ன செய்தன?
மே 5-ந் தேதி சீனா ஊடுருவியதாக செய்திகள் வெளியாகின. சீனா அதற்கு முன்னரே ஊடுருவி விட்டதா? நமது நாட்டின் எல்லை பாதுகாப்பு தொடர்பாக தினந்தோறும் சேட்டிலைட் படங்களை மத்திய அரசு பெறுவது இல்லையா? எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் வழக்கத்துக்கு மாறான நடமாட்டங்கள் தொடர்பாக நமது வெளி புலனாய்வு அமைப்புகள் எந்த அறிக்கையுமே கொடுக்கவில்லையா?
புலனாய்வின் தோல்வியா?
எல்லையில் சீனாவின் ஊடுருவல் குறித்தோ அல்லது எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதிகளில் இருதரப்பும் ராணுவட்த்தை குவிப்பது குறித்தோ ராணுவ புலனாய்வு அமைப்புகள் மத்திய அரசுக்கு தகவல்களை தெரிவிக்கவில்லையா? இந்த விவகாரத்தில் புலனாய்வுத் துறை தோல்வி அடைந்துவிட்டதாக்க மத்திய அரசு கருதவில்லையா? மோதலுக்கு முந்தைய நிலைமை இப்போது திரும்பிவிட்டது என்கிற உறுதியை மத்திய அரசு நாட்டு மக்களுக்கு தர வேண்டும். தற்போது லடாக்கில் என்ன நிலைமை என்பது எதிர்க்கட்சிகளுக்கு தொடர்ந்து அரசு தகவல் தர வேண்டும். இவ்வாறு சோனியா பேசினார்.
சீனா தோற்று ஓடும்
மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி பேசுகையில், சீனா ஒரு ஜனநாயக நாடு அல்ல. அது ஒரு சர்வாதிகார தேசம். அவர்கள் என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறார்களோ அதை செய்வார்கள். நாம் ஒருங்கிணைந்து செயல்பட்டால் இந்தியா வெல்லும்- சீனா தோற்று ஓடும். ஒருமித்த குரலில் பேசுவோம்- ஒருங்கிணைந்து செயல்படுவோம். அரசுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்போம் என்றார்.
சீனாவை உள்ளே விட கூடாது
மேலும், அனைத்து கட்சிக் கூட்டமானது தேசத்துக்கு நல்ல செய்தியை தெரிவித்திருக்கிறது. நாம் அனைவரும் நமது ராணுவத்தினரின் பின்னால் இணைந்து நிற்கிறோம் என்கிற தகவலை சொல்கிறது இந்த அனைத்து கட்சி கூட்டம். இந்த பிரச்சனையில் மத்திய அரசை திரிணாமுல் காங்கிரஸ் உறுதியுடன் ஆதரிக்கிறது. நாட்டின் ரயில்வே, தொலைத்தொடர்பு என எந்த துறையிலும் சீனாவை ஒருபோதும் அனுமதிக்கவே கூடாது. நமக்குள்ளே பிரச்சனைகள் இருக்கலாம். ஆனால் சீனாவை ஒருபோதும் அனுமதிக்க கூட்டாது என்றும் மமதா பானர்ஜி பேசினார்.