ஒன்றாக இல்லாவிட்டால் செத்துவிடுவோம்.. இஸ்லாமிய தலைவர்களை சந்தித்து அஜித் தோவல் சொன்ன வார்த்தை
டெல்லி: ''இந்தியா என்பது ஒரு கப்பல். அதில் நாம் அனைவரும் ஒன்றாக பயணிக்க வேண்டும். இல்லாவிட்டால் தண்ணீரில் மூழ்கிவிடுவோம்'' என்று இஸ்லாமிய மதத்தை சேர்ந்த 14 முக்கிய நபர்களை சந்தித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சந்திப்பின் பின்னணி? குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
நம் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருப்பவர் அஜித் தோவல். இந்நிலையில் தான் திடீரென்று இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த 14 முக்கிய தலைவர்களுடன் சந்திப்பு நடத்தி உள்ளார். டெல்லியில் சமீபத்தில் புதிதாக திறக்கப்பட்ட பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடந்தது.

இந்தகூட்டத்தில இஸ்லாமிய தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், மருத்துவர், பத்திரிகையாளர்கள் என்று பல்வேறு துறைகளை சேர்ந்த புகழ்பெற்ற நபர்கள் பங்கேற்றனர்.
பங்கேற்றது யார் யார்?
தொழிலதிபரும், கல்வியாளருமான ஜாஃபர் சரேஷ்வாலா கே.பி. குழுமத்தின் நிறுவனர் ஃபாரூக் படேல், ஜெர்மன் ஸ்டீல் சி.எம்.டி இனாமுல்ஹக் இராகி, அதன் நிர்வாக இயக்குநர் இப்ராரவுல்ஹக் இராகி, நிட்டன் வால்வ்ஸ் சிஇஓ ஜுனேத் ஷெரீஃப், ஜி.எல்.எஸ். ஸ்விட்ச்கியர் இயக்குநர் ஜாஃபர் லாரி, தாவூதி போக்ரா தலைவர் ஜமாத் அல்தாஃப் சாதிகோட், அஞ்சுமன்-இ-இஸ்லாம் தலைவர் ஜாகீர் காசி சமூக தலைவர் ஹாஜி ராய்மா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
அதேபோல் இந்திய ஹஜ் கமிட்டித் தலைவர் கவுசர் ஜஹான், , சுற்றுச்சூழல் ஆர்வலர் சஹர் பாம்லா, எய்ம்ஸ் மருத்துவர் நிஷாத் ஹுசைன், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக (அ.மு.ப.) துணைவேந்தர் நைமா கதூன், பத்திரிகையாளர் சமீனா ஷேக் ஆகியோரும் பங்கேற்றனர்.
அஜித் தோவல் என்ன சொன்னார்?
மொத்தம் ஒன்றரை மணிநேரத்துக்கு மேலாக இந்த சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் பற்றி அஜித் தோவல் பேசியுள்ளார். இந்தியாவில் ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் இந்த சந்திப்பு நடந்தது. இந்த வேளையில் அஜித் தோவல், ''இந்தியாவில் நாம் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும். பிரிவினைவாதம் கூடாது. நாட்டின் ஒற்றுமை தான் மிகவும் முக்கியம். ஒற்றுமை தான் நாட்டின் வலிமையை மேம்படுத்தும். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
ஏனென்றால் இந்தியாவில் இஸ்லாம் தனித்துவமான குறிப்பிடும்படியான இடத்தை பிடித்துள்ளது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் உலகிலேயே அதிக இஸ்லமியர்கள் வாழும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. இது தனித்துவம் மிக்கது. பெருமைக்குரியது.'' என கூறியுள்ளார். இதுதவிர சில விஷயங்களை பகிர்ந்து கவலைகளை வெளிப்படுத்தி உள்ளார்.
ஒன்றாக பயணிக்க வேண்டும்...
இந்த சந்திப்புக்கு பிறகு தொழிலதிபரும், கல்வியாளருமான ஜாஃபர் சரேஷ்வாலா, "அஜித் தோவல் எங்கள் ஒவ்வொருவரின் கருத்துகளையும் பொறுமையாக கேட்டறிந்தார். நாட்டில் மதநல்லிணக்கத்தை கொண்டு வரும் வகையில் இந்த சந்திப்பு நடந்தது. இஸ்லாமியர்களுக்கு பாகுபாடு காட்டாமல் சிறப்பு சலுகை அளிக்காமல் சரிக்கு சமமாக நடத்த வேண்டும். அதனை தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றோம்.
இந்தியா என்பது ஒரு கப்பல். நாம் அனைவரும் அதில் ஒன்றாக பயணம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் ஒன்றாக மூழ்கிவிடுவோம் என்று அஜித் தோவல் கூறினார். இந்த சந்திப்பு இந்த பேச்சுவார்த்தை தொடக்கம் தான். எதிர்காலத்திலும் இதுபோன்று நடக்கும். மத்திய அரசின் இந்த செயல் நேர்மறையான எண்ணத்தை ஏற்படுத்தி உள்ளது'' என்றார்.
அதேபோல் ஜாஃபர் சரேஷ்வாலா தனது எக்ஸ் பக்கத்தில், ''அஜித் தோவலுக்கு நன்றி. தங்களின் நேரத்தை செலவிட்டு பொறுமையாக எங்களின் கோரிக்கைகளை கேட்டு தேசத்தின் வளர்ச்சிக்கு தொலைநோக்கு வழிக்காட்டுதல்களை வழங்கியதற்கு நன்றி. இது சிறப்பான கலந்துரையாடலாக இருந்தது. இதுதான் முன்னேறுவதற்கான ஒரே வழி'' என கூறியுள்ளார்.
இஸ்லாமியர்கள் மீதான சமூக பார்வை
ஜாகீர் காசி கூறுகையில், "அரசு சிறுபான்மையினரின் கருத்துக்களை கேட்க தயாராக உள்ளது என்ற நேர்மறையான செய்தியை இந்த சந்திப்பு தந்துள்ளது. தொடர்ச்சியான உரையாடல்கள் தவறான புரிதல்களை நீக்கி இருதரப்புக்கும் இடையே பாலமாக இருக்கும். எனவே இதுபோன்ற நடைமுறைகள் தொடர வேண்டும்.
மூத்த பத்திரிகையாளர் ஷீலா பட் தனது எக்ஸ் பக்கத்தில், ''தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரில் துரந்தர். எதார்த்தமானவர். ஏப்ரல் 18 அன்று, புதிதாகக் கட்டப்பட்ட பிரதமர் அலுவலகத்தில், இந்திய முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த 14 புகழ்பெற்ற சாதனையாளர்களையும், தலைவர்களையும் அவர் அழைத்து பேசினார்.'' என்று கூறியுள்ளார்.
முஸ்லிம் பெண்ணாக...
அதேபோல் பத்திரிகையாளர் சமீனா ஷேக் தனது எக்ஸ் பக்கத்தில், ''ஒரு முஸ்லிம் பெண்ணாக ஊடகத் துறையின் ஒரு பகுதியாக நான் இருக்கிறேன். அப்படி இருக்கும்போது கல்வி மற்றும் எதிர்கால லட்சியங்கள் சார்ந்த விஷயத்தில் இந்த சமூகம் எங்களை எப்படி ஆதரிக்கிறது? என்பதை எடுத்துரைப்பது எனது முக்கிய நோக்கமாகும்.
சமூக ஊடகங்களில் பிரச்சனைகள் பெரிதுப்படுத்தப்பட்டு முஸ்லிம்கள் குறிவைக்கப்படும்போது, அது எங்களுக்கு கவலையளிக்கிறது. அதை எவ்வாறு சரிசெய்வது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. அஜித் தோவல், எங்களின் கவலைகளை கவனமாக கேட்டு கொண்டு தீர்வுகளையும் வழங்கினார்'' என்றார்.
குவியும் பாராட்டு
நம் நாட்டில் சில பகுதிகளில் இஸ்லாமியர்களுக்கு எதிராக சில விரும்பதகாத சம்பவங்கள் நடந்து வருகிறது. இப்படியான சூழலில் அஜித் தோவலின் இந்த சந்திப்பு தற்போது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இது நம் நாட்டில் தேசிய அளவில் மதநல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியின் தொடக்கமாக இருக்கலாம் என்று பலரும் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications