அர்பன் நக்சல்களை ஒழிப்பதே வேலை.. உபா சட்டத்தில் மாற்றம் கொண்டு வந்த அமித் ஷா.. அதிரடி பேச்சு!
அர்பன் நக்சல்கள் மீது இரக்கம் காட்ட கூடாது, புதிய உபா சட்ட திருத்த மசோதா மூலம் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
டெல்லி: அர்பன் நக்சல்கள் மீது இரக்கம் காட்ட கூடாது, புதிய உபா சட்ட திருத்த மசோதா மூலம் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் (UAPA - உபா சட்டம்) மத்திய அரசு மாற்றம் கொண்டு வருவதற்காக தாக்கல் செய்திருக்கும் சட்டத்திருத்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஒருவரை தீவிரவாதி அல்லது தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர் என்று இந்த சட்டம் மூலம் கைது செய்து விசாரிக்கலாம்.
இந்த சட்ட திருத்தம் மூலம் என்ஐஏ இனி வரும் காலங்களில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் நிலத்தை, சொத்தை பறிமுதல் செய்யலாம். அதேபோல் என்ஐஏ அமைப்பிற்கு இந்த புதிய சட்ட திருத்தம் அளப்பரிய பலத்தை வழங்குகிறது என்று புகார் எழுந்துள்ளது.
என்ன விளக்கம்
இந்த நிலையில் இந்த சட்ட திருத்த மசோதா குறித்து தற்போது உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார். அதில், காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போதுதான் இந்த உபா சட்டம் கொண்டு வரப்பட்டது. அப்போதே இதில் மூன்று முக்கியமான சட்ட திருத்தங்களை காங்கிரஸ் கொண்டு வந்தது. நீங்கள் இந்த சட்டத்தை கேள்வி கேட்பீர்கள் என்றால், நீங்கள் காங்கிரஸ் கட்சியை கேள்வி கேட்கிறீர்கள் என்று அர்த்தம்.
ஏன்
நீங்கள் எல்லாம் இந்த சட்டத்தை யார் கொண்டு வந்தார்கள் என்பதையே மறந்துவிட்டீர்கள் என்று அர்த்தம். காங்கிரஸ் கட்சி இதில் சட்ட திருத்தம் கொண்டு வந்தால் அது சரியானது. அதுவே நாங்கள் கொண்டு வந்தால் தவறா? நீங்கள் எதிர்க்கட்சி என்பதற்காக எல்லாத்தையும் எதிர்க்க வேண்டிய அவசியம் கிடையாது.
கடுமை
தீவிரவாதிகளின் மனதிலேயே மக்களுக்கு எதிரான கருத்துக்கள் இருக்கும். வன்முறைதான் அவர்களின் மனதில் இருக்கும். எத்தனை தீவிரவாத இயக்கங்களை வேண்டுமானாலும் தடை செய்யலாம். ஆனால் இவர்கள் மட்டும் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து கொண்டே இருப்பார்கள். தீவிரவாதிகளை அழித்தால்தான் தீவிரவாதம் ஒழியும். இந்த சட்ட திருத்தம் மூலம் என்ஐஏவிற்கு பலம் கூடும்.
தீவிரவாதம்
தீவிரவாதத்திற்கு எதிராக கட்சிகளை கடந்து நாம் ஒன்றாக சேர வேண்டும். மக்களுக்காக போராடும் நபர்களை நாங்கள் எதுவும் செய்ய மாட்டோம். ஆனால் நாங்கள் அர்பன் மாவோயிஸ்டுகளை விட மாட்டோம். அவர்கள் மீது கொஞ்சமும் இரக்கம் காட்ட மாட்டோம். அவர்களை ஒடுக்குவதே, அழிப்பதே பாஜக கட்சியின் நோக்கம் என்று அமித் ஷா குறிப்பிட்டு இருக்கிறார்.