இன்று ராஜ்யசபாவில் நடந்தது துரதிர்ஷ்டவசமானது.. வெட்கக்கேடானது....ராஜ்நாத்சிங்
டெல்லி: இன்று ராஜ்யசபாவில் நடந்தது கவலைக்குரியது, துரதிர்ஷ்டவசமானது, வெட்கக்கேடானது என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். வேளாண் மசோதா குறித்து பேசிய அமைச்சர், குறைந்தபட்ச ஆதரவு விலை, வேளாண் உற்பத்தி சந்தைக் குழு ஆகியவை ஒரு போதும் நிறுத்தப்படாது என்று உறுதி அளித்தார்.
லோக்சபாவில் நிறைவேறிய வேளான் மசோதாக்கள் மீது இன்று ராஜ்யசபாவில் விவாதம் நடந்தது. எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. விவாதம் அனல் பறந்தது. இந்நிலையில் நாளையும் விவாதித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் மாலையில் கோரின. இதை மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் ஏற்கவில்லை.
இதனால் ஹரிவன்சின் இருக்கையை எதிர்க்கட்சி எம்பிக்கள் முற்றுகையிட்டு, கோஷமிட்டனர். அத்துடன் பேரவை விதிகள் அடங்கிய ஆவணப் புத்தகத்தையும் கிழித்து எறிந்தனர். இதனால் அவையில் பெரும் கூச்சல் குழப்பம் நிலவியது.

வேளாண் மசோதாக்கள்
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ராஜ்யசபாவில் வேளாண் சீர்திருத்தம் தொடர்பான மசோதக்கள் நிறைவேறியது, இதனால் மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளனர். இதன் மீது ராஜ்யசபா தலைவரான குடியரசுத் துணை தலைவர் வெங்கய்யா நாயுடு நாளை முடிவெடுப்பார்.

வெட்கக்கேடானது
இந்நிலையில் நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று இரவு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், "இன்று ராஜ்யசபாவில் நடந்தது கவலைக்குரியது, துரதிர்ஷ்டவசமானது, வெட்கக்கேடானது. சபையில் விவாதம் நடத்துவது ஆளும் கட்சியின் பொறுப்பாகும். சபையில் நடக்கும் விவாதத்தில் பங்கேற்பது எதிர்க்கட்சிகளின் கடமையாகும்.

தவறாக வழிநடத்த முயற்சி
எனக்குத் தெரிந்தவரை, இது ராஜ்யசபா அல்லது லோக்சபா வரலாற்றில் இன்று நடந்து போன்ற ஒரு சம்பவம் ஒருபோதும் நடந்ததில்லை. அதிலும் ராஜ்யசபாவில் இப்படி நடந்திருப்பது மிகப்பெரிய விஷயம். வதந்திகளின் அடிப்படையில் விவசாயிகளை தவறாக வழிநடத்தும் முயற்சிகள் எதிர்க்கட்சிகளால் மேற்கொள்ளப்படுகிறது. இன்று நடந்தது சபையின் கண்ணியத்திற்கு எதிரானது. ராஜ்யசபா துணை தலைவருக்கு எதிராக நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. ராஜ்யசபா தலைவரே இந்த விஷயத்தில் முடிவை எடுப்பார். நான் அரசியல் ரீதியாக இதில் எதுவும் சொல்ல விரும்பவில்லை" என்றார்.

அமைச்சர் ராஜினாமா
மத்திய அமைச்சரவையில் இருந்து ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா செய்வது குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில். இதுபோன்ற ஒவ்வொரு முடிவுக்கும் பின்னால் சில அரசியல் காரணங்கள் உள்ளன. அவர் ஏன் இந்த முடிவை எடுத்தார் என்பது குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றார்.

ராஜ்நாத் சிங் உறுதி
கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள வேளாண் மசோதாக்கள் குறித்து பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், "நானும் ஒரு விவசாயி, எம்.எஸ்.பி (குறைந்தபட்ச ஆதரவு விலை) மற்றும் ஏ.பி.எம்.சி (வேளாண் உற்பத்தி சந்தைக் குழு) அமைப்புகள் ஒருபோதும் நிறுத்தப்படாது று நாட்டின் விவசாயிகளுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன்: மத்திய அரசின் வேளாண் மசோதாக்களால் விவசாயிகளின் வருமானம் இரு மடங்காகும். நாட்டின் எந்தப் பகுதிக்கும் சென்று விவசாயிகள் விலை பொருட்களை விற்க முடியும்" என்றார்.












Click it and Unblock the Notifications