பாலத்தில் பிரதமர் மோடி வாகனம் சிக்கியபோது ரொம்ப நெருங்கிப்போய் தொண்டர்கள் கோஷம்! வெளியான பரபர வீடியோ
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் பஞ்சாப் மாநிலத்தில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்தார். மோசமான வானிலை காரணமாக பிரதமர் ஹெலிகாப்டரில் செல்லாமல் சாலை மார்க்கமாக சென்றார்.
பதிண்டா என்ற இடத்தில் விவசாயிகள் மறியலில் ஈடுபட்டதால் பிரதமர் வாகனம் மேற்கொண்டு செல்ல முடியவில்லை. பதிண்டா மேம்பாலத்தில் பிரதமர் மோடியின் காண்வாய் சுமார் 20 நிமிடங்கள் வரை நின்றது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பாதுகாப்பு குளறுபடி
இந்த பாதுகாப்பு குளறுபடி காரணமாக பிரதமர் மோடி தான் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்தார். பிரதமர் சாலை வழியாக பயணிக்கும்போது பஞ்சாப் அரசு கூடுதல் பாதுகாப்பை ஏற்படுத்த தவறி விட்டது என்று மத்திய உள்துறை அமைச்சகம் குற்றம்சாட்டியது. இது தொடர்பான விசாரணையையும் தொடங்கி விட்டது.

விவசாயிகள் போராட்டம்
இந்த விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலர் பஞ்சாப் அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். பிரதமர் வான்வெளி வழியாக வருவதாகத்தான் கூறப்பட்டது. அவர் சாலை வழியாக வருவது குறித்து தங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும் விவசாயிகள் அமைதியாகத்தான் போராடினார்கள் என்று பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தெரிவித்தார்.

பயங்கரவாத அமைப்புகளுக்கு தொடர்பு
இது தொடர்பாக பஞ்சாப் அரசும் குழு அமைத்து விசாரணை நடத்தி வரும் நிலையில் விவகாரம் உச்சநீதிமன்றம் வரை சென்றது. பஞ்சாப்பில் தடை செய்யப்பட்ட நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பு பிரதமருக்கு எதிராக அழைப்பு விடுத்திருந்தது. இதில் சர்வதேச பயங்கரவாத அமைப்புகளின் தொடர்பு உள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு குற்றம்சாட்டியது.

வெளியான இரண்டு வீடியோக்கள்
இந்த நிலையில் பதிண்டா மேம்பாலத்தில் பிரதமர் மோடியின் காண்வாய் சுமார் 20 நிமிடங்கள் வரை நின்ற நிலையில் அங்கு என்ன நடந்தது? என்பது தொடர்பான இரண்டு வீடியோக்கள் வெளியாகி உள்ளது. அதாவது காண்வாயில் பிரதமர் அமர்ந்து இருந்தபோது ஏராளமான பாஜக தொண்டர்கள் பிரதமர் காண்வாய் அருகே மிக அருகில் நெருங்கி நின்று கோஷங்கள் எழுப்புவது வீடியோவில் தெளிவாக பதிவாகி உள்ளது.

'BJP ஜிந்தாபாத்' 'மோடிஜி ஜிந்தாபாத்'
கைகளில் பாஜக கொடி வைத்திருக்கும் தொண்டர்கள் ''BJP ஜிந்தாபாத்'' ''மோடிஜி ஜிந்தாபாத்'' என்று கோஷங்கள் எழுப்புவதும் தெளிவாக கேட்கிறது. இதேபோல் இரண்டாவது வீடியோவில் மோடி அமர்ந்திருக்கும் காண்வாயில் இருந்து தொலைவில் விவசாயிகள் தரையில் அமர்ந்து அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதும் தெளிவாகி உள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications