திடீரென எரிந்த "சிவப்பு லைட்!" நடுவானில் எமர்ஜென்சி கதவை திறக்க முயன்ற பயணி!இண்டிகோ விமானத்தில் பரபர
நடுவானில் பயணி ஒருவர் திடீரென அவசர கதவை திறக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி: இண்டிகோ விமானம் நடுவனில் பறந்து கொண்டிருந்த போது, பயணி ஒருவர் எமர்ஜென்சி கதவைத் திறக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய விமான துறைக்கு இது போதாத காலம் போல.. தொடர்ச்சியா பல்வேறு விமானங்களிலும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் ஏர் இந்தியாவில் பெண் பயணி மீது சக ஆண் பயணி சிறுநீர் கழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஏர் இந்தியாவுக்குப் பெரிய அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மீண்டும் அதேபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது.
தேசிய அளவில் வெடித்த விவகாரம்! இண்டிகோ விமான எமர்ஜென்சி கதவை திறந்தது யார்? விசாரணைக்கு உத்தரவு
இண்டிகோ விமானம்
இதனிடையே இப்போது இண்டிகோ விமானத்தில் மீண்டும் அதேபோன்ற ஒரு சர்ச்சை சம்பவம் நடந்துள்ளது. இன்று நாக்பூரிலிருந்து மும்பை செல்லும் விமானத்தில் பயணி ஒருவர், விமானம் நடுவானில் இருக்கும் போதே எம்ர்ஜென்சி கதவைத் திறக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. விமானம் தரையிறங்கத் தயாரான போது, அந்த நபர் திடீரென அவசரக் கால கதவைத் திறந்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால் அங்கு திடீரென பரபரப்பு ஏற்பட்டது.
வழக்குப்பதிவு
இதையடுத்து விமானப் பணியாளர்கள் உடனடியாக இது குறித்து கேப்டனிடம் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், அனைத்து பயணிகளிடமும் இது தொடர்பாக முறையாக அறிவிக்கப்பட்டதாக இண்டிகோ தரப்பில் கூறப்பட்டுள்ளது. விமானத்தின் பாதுகாப்பான செயல்பாட்டில் எந்த சமரசமும் செய்து கொள்ள முடியாது என்று கூறியுள்ள இண்டிகோ, தேவையில்லாமல் அவசரக்கால கதவைத் திறக்க முயன்ற பயணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தனர்.
என்ன நடந்தது
இண்டிகோ 6E-5274 விமானத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஜனவரி 24 ஆம் தேதி பகல் 11.05 மணியளவில் நாக்பூர் விமான நிலையத்திலிருந்து மும்பைக்கு இண்டிகோ விமானம் வழக்கம் போலப் புறப்பட்டுள்ளது. மதியம் 12.35 மணியளவில் விமானம் மும்பையில் தரையிறங்கிய தயாராகி, மெல்லக் கீழே வரத் தொடங்கியுள்ளது. அப்போது யாரோ அவசர கதவைத் திறக்க முயல்வதை இண்டிக்கேட்டர் காட்டியுள்ளது.
பத்திரமாகத் தரையிறங்கியது
இதையடுத்து விமான குழு உடனடியாக எமர்ஜென்சி கதவை நோக்கி விரைந்துள்ளனர். அப்போது எமர்ஜென்சி கதவின் கைப்பிடியின் கவரை பயணி அகற்றியதை அவர்கள் கவனித்தார்.. அதன் பிறகு கேபின் குழுவினர் கேப்டனுக்கு இது குறித்துத் தெரிவித்தனர்.. இருப்பினும், விமானத்தின் எமர்ஜென்சி கதவு முழுமையாகத் திறக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து விமானம் பத்திரமாக மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.
போலீசில் புகார்
இது தொடர்பாக கேபின் குழுவினர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இப்படி திடீரென எமர்ஜென்சி கதவை திறந்த பயணியின் பெயர் உள்ளிட்ட தகவல்களை போலீசாரிடம் இண்டிகோ தரப்பு வழங்கியுள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு ஊழியர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.