சிகிச்சையே இல்லை.. இந்தியாவை பீதியூட்டும் ‛சிக்கிள் செல் அனீமியா’..பட்ஜெட்டில் கவனம்..ஏன் முக்கியம்?
இந்தியாவை அச்சுறுத்தும் சிக்கிள் செல் அனீமியா நோயால் மலைவாழ் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழ்நாட்டிலும் கூட பாதிப்புக்கள் உள்ளன.
டெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது 2047ம் ஆண்டுக்குள் சிக்கிள் செல் அனீமியா எனும் அரிவாள் உயிரணு ரத்தசோகை நோய் இந்தியாவில் இல்லாத நிலை உருவாக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் இன்றைய பட்ஜெட்டில் அறிவித்தார். சிகிச்சை முறை இல்லாத இந்த நோய் இந்தியாவையே அச்சுறுத்தும் நிலையில் இந்த அறிவிப்பு கவனம் பெற்றுள்ளது. இந்த அரிவாள் உயிரணு ரத்த சோகை நோய் என்பது என்ன? இதன் அறிகுறி, யாரெல்லாம் பாதிக்கப்படுவார்கள்? இந்தியாவுக்கான அச்சுறுத்தல் என்ன? என்பது பற்றிய முக்கிய விபரங்கள் வெளியாகி உள்ளன.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது அவர் தொடர்ச்சியாக தாக்கல் செய்த 5வது பட்ஜெட்டாகும். இந்த பட்ஜெட்டில் பல்வேறு புதிய அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. இதில் ஒன்று தான் அனைவரின் கவனத்தையும் பெற்றது.
அதாவது sickle cell anemia எனும் சிக்கிள் செல் அனீமியா அல்லது அரிவாள் உயிரணு ரத்தசோகை நோயை இந்தியாவில் 2047 ம் ஆண்டுக்குள் முற்றிலும் இல்லாத நிலையை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார்.
வருமான வரியில் மாற்றம்.. தங்கம், வெள்ளி & சிகரெட்டுக்கு வரி உயர்வு.. A டூ Z பட்ஜெட் அறிவிப்புகள்
சிக்கிள் செல் அனிமீயா
தற்போது இதுபற்றி பலரும் இணையதளங்களில் தேட தொடங்கி உள்ளனர். இந்த நோய் என்ன? எதற்காக மத்திய அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதற்கான காரணங்கள் வெளியாகி உள்ளன. அரிவாள் உயிரணு ரத்த சோகை என்பது ரத்த சிவப்பணுக்களை பாதிக்கும் நோயாகும். ரத்தத்தின் ஹீமோகுளோபினில் ஏற்படும் மாற்றம் தான் இந்த நோய்க்கு முக்கிய காரணமாகும். ரத்த அணுக்கள் பொதுவாக வட்ட வடிவமாக இருக்கும். ஆனால் சிக்கிள் செல் அனிமீயா பாதித்தவர்களின் ரத்து அணுக்கள் வட்டமாக இருப்பதற்கு பதில் அரிவாள் போன்று வளைந்து காணப்படும். ரத்த அணுக்களின் வடிவம் மாறுவதால் உடல் திசுக்களுக்கு போதுமான ஆக்ஸிஜனை எடுத்துச் செல்ல முடியாத நிலை உருவாகும். இதனால் மூச்சுத்திணறல், ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். இது ஒரு பரம்பரை நோயாகும்.
இந்தியாவிலும் பாதிப்பு
உலகில் ஆண்டுதோறும் 3 லட்சம் குழந்தைகள் சிக்கிள் செல் அனிமீயாவுடன் (Sickle cell Anemia)பிறக்கின்றனர். இதில் பிறந்த குழந்தைகள் முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். அரிய வகை நோயாக அறியப்படும் இந்த அரிவாள் உயிரணு நோய் குழந்தைகளை தான் அதிகம் தாக்குகிறது. மேலும் தற்போதைய சூழலில் அரிவாள் உயிரணு அனிமீயாவில் பாதிக்கப்பட்ட பாதிபேர் இந்தியா, நைஜீரியா, காங்கோ ஆகிய நாடுகளில் தான் உள்ளனர். தமிழ்நாட்டிலும் கூட சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை 2050ல் 4 லட்சமாக உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. குறிப்பாக மலையோரங்களில் வசிக்கும் பழங்குடியினர் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இதனால் இதனை கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
அறிகுறிகள் என்ன?
இந்த நோயால் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இருப்பினும் அறிகுறிகள் என்பது உடனே தெரிவது இல்லை. குழந்தைகளில் காணப்படும் உடல் சேர்வு, வலியுடன் அடிக்கடி வீங்கும் கைகள், கால்கள், மார்பு, வயிறு உள்ளிட்டற்றில் வலி ஏற்படுதல் உள்ளிட்டவை நோயின் அறிகுறிகளாக இருக்கும். ரத்த சோகை ஏற்பட்டால் இந்த நோய்க்கான வாய்ப்பு அதிகமாகும். இந்த நோய் தாக்கினால் ரத்த சிவப்பணுக்கள் 10 முதல் 20 நாட்களில் இறந்துவிடுகின்றன. இது ரத்த சிவப்பணுக்களின் பற்றாக்குறையை உடலில் ஏற்படுத்தி உடல் சோர்வை வழங்கும். மேலும் இந்த நோய் உடலில் உள்ள மண்ணீரலையும் செயலிழக்க வைக்கலாம்.
தனி சிகிச்சை கிடையாது
சிக்கிள் செல் அனிமீயாவை குணப்படுத்தும் வகையில் தனியாக எந்த சிகிச்சை முறையும் இல்லை என கூறப்படுகிறது. இருப்பினும் ஸ்டெம் செல் (Stem Cell) அல்லது எலும்பு மஜ்ஜை (Bone Marrow)மாற்று அறுவை சிகிச்சைகள் இந்த நோயை குணப்படுத்தலாம். இருப்பினும் இதில் சில சிக்கல்கள் உள்ளன. இதனால் தான் தற்போது மத்திய அரசு சிக்கிள் செல் அனீமியா நோய் விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பட்ஜெட்டில் அறிவித்தது என்ன?
இந்நிலையில் தான் சிக்கிள் செல் அமினீயா நோய் குறித்த 7 கோடி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவும், உலகம் முழுவதும் இதுபற்றிய அம்சங்களை எடுத்து கூறவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மத்திய அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளின் கூட்டு முயற்சிகள் மூலம் இதுதொடர்பாக ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.