"இட ஒதுக்கீடு விவகாரம்.." பாஜகவின் நிலைப்பாடு இதுதான்.. வெளிப்படையாக பேசிய அமித் ஷா.. என்ன சொன்னார்
டெல்லி: பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் ஓபிசி இட ஒதுக்கீட்டை பாஜக என்றும் ஆதரித்தே வந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் நடந்து வரும் சூழலில் கடந்த சில நாட்களாக இட ஒதுக்கீடு குறித்து அமித் ஷா பேசுவது போன்ற போலி வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. அதில் இட ஒதுக்கீடு அரசியலமைப்பிற்கு எதிரானது என்று அமித் ஷா கூறுவது போல இருக்கிறது.

விளக்கம்: இதற்கிடையே அசாம் மாநிலம் கவுஹாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமித் ஷா இது குறித்து விளக்கமளித்துள்ளார்.. பாஜக என்றும் பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் ஓபிசி இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாகவே இருந்துள்ளதாக அமித் ஷா தெரிவித்தார். காங்கிரஸ் தன்னை குறித்து போலி வீடியோவை திட்டமிட்டுப் பரப்பி வருவதாகக் குறிப்பிட்ட அவர், பாஜக தான் இட ஒதுக்கீட்டின் பாதுகாவலனாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், "400 சீட்களுக்கு மேல் வென்றால் பாஜக இட ஒதுக்கீட்டை நீக்கிவிடும் என்ற தவறான தகவலைக் காங்கிரஸ் பரப்புகிறது. இதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை. இதில் அடிப்படையில் உண்மையும் இல்லை. எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசிக்களுக்கான இட ஒதுக்கீட்டை பாஜக எப்போதும் ஆதரிக்கும் என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இட ஒதுக்கீட்டை எப்போதும் பாஜக தான் பாதுகாத்து வந்துள்ளது" என்றார்.
அமித் ஷா: சமீபத்தில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் எடிட் செய்யப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது. அதில் அவர் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசிகளுக்கான இட ஒதுக்கீட்டை நிறுத்துவோம் என்று கூறுவது போல இருந்தது. அந்த வீடியோவை பகிர்ந்தே பாஜக இட ஒதுக்கீட்டை நிறுத்த உள்ளதாகப் பலரும், குறிப்பாகக் காங்கிரஸ் கட்சியினர் சாடினர்.
அமித் ஷா மேலும் கூறுகையில், "அவர்களின் [காங்கிரஸ்] விரக்தி, என்னைப் பற்றி போலி வீடியோக்களை பரப்பும் அளவிற்குச் சென்றுள்ளது. காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர்கள், மாநிலத் தலைவர், நிர்வாகிகள் எனப் பலரும் இந்த போலி வீடியோவை பரப்பி வருகிறார்கள். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கையும் எடுக்கப்படும். இது அவர்களின் விரக்தியையும் ஏமாற்றத்தையும் காட்டுகிறது..
மோசமான அரசியல்: ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவரானது முதலே அவர் மிக மோசமான அரசியலைச் செய்து வருகிறார். போலியான வீடியோக்களைப் பரப்பி மக்களின் ஆதரவைப் பெற முயல்வது கண்டிக்கத்தக்கது. இந்தியாவில் யாரும் இது போலச் செய்யக்கூடாது" என்றார்.
என்ன வீடியோ: இருப்பினும், அது போலியான வீடியோவாகும். அதை எதிர்த்து பாஜக அளித்த புகாரில் சிலர் கைதும் செய்யப்பட்டுள்ளனர். பாஜகவும் இந்த வீடியோ குறித்து விளக்கமளித்துள்ளது. அதாவது இது அமித் ஷா கடந்த 2023இல் தெலுங்கானாவில் பேசியதன் ஒரு பகுதியாகும். அவர் தெலுங்கானாவில் முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் 4 சதவீத இட ஒதுக்கீடு தான் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது எனக் கூறியிருந்தார். அதைத் தான் இப்போது திரித்து சிலர் வீடியோவாக வெளியிடுவதாக பாஜக கூறியுள்ளது.
தொடர்ந்து ராகுல் காந்தி குறித்துப் பேசிய அவர், "அவர்கள் (ராகுல், பிரியங்கா) உபியில் போட்டியிடுவார்களா இல்லையா என்று தெரியவில்லை.. ஆனால் அவர்கள் மிகப் பெரிய குழப்பத்தில் இருக்கிறார்கள் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. அவர்களுக்குத் தன்னம்பிக்கை இல்லை என்பதையே இது காட்டுகிறது. உத்திர பிரதேசத்தில் அவர்கள் பரம்பரை பரம்பரையாகப் போட்டியிடும் இடங்களில் கூட இப்போது அவர்கள் போட்டியிடவில்லை" என்றும் சாடினார்.












Click it and Unblock the Notifications