ஜம்மு காஷ்மீர் அரசியல் தலைவர்கள் விடாப்பிடி.. மோடியுடன் நடந்த 3 மணி நேர சந்திப்பில் என்ன நடந்தது?
டெல்லி: ஜம்மு-காஷ்மீரின் முக்கிய அரசியல் தலைவர்களுடன் இன்று பிரதமர் நரேந்திர மோடி தனது டெல்லி இல்லத்தில் 3 மணி நேரத்திற்கும் மேல் ஆலோசனை நடத்தினார்.
2019 ஆம் ஆண்டில் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட பிறகு, பிரதமருடன் அந்த பிராந்தியத்தின் முக்கிய தலைவர்கள் சந்தித்த முதல் கூட்டம் இது என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது பதிந்த வழக்குகள் வாபஸ்.. மு.க. ஸ்டாலின் அதிரடி
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
சிறப்பு அந்தஸ்து
முன்னாள் முதலமைச்சர்கள் ஃபாரூக் அப்துல்லா மற்றும் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஒமர் அப்துல்லா ஆகியோர் கடந்த ஆகஸ்ட் 1, 2019 அன்று பிரதமர் மோடியை சந்தித்தனர். மூன்று நாட்களுக்குப் பிறகு ஆகஸ்ட் 4 ஆம் தேதி அவர்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர். பிறகு, காஷ்மீருக்கு 370 வது பிரிவில் வழங்கிய சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து அறிவித்தது மத்திய அரசு.
ஜம்மு காஷ்மீர் தேர்தல்
ஜம்மு-காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்ட பின்னர் சட்டமன்றத் தேர்தலுக்கான முதல் படியாக தொகுதிகள் வரையறுத்தல் அல்லது மறுசீரமைப்பு ஆகியவை செய்யப்பட தேவையுள்ளது. இது குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து
மெகபூபா முப்தி மற்றும் பாரூக் அப்துல்லா தலைமையிலான ஏழு கட்சிகளின் குழுவான குப்கர் கூட்டணி, இந்த கூட்டத்தில், காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து தரவும், சிறப்பு அந்தஸ்தை மீண்டும் வழங்கவும் மோடியிடம் வலியுறுத்தின. காங்கிரஸ் சார்பில் பங்கேற்ற குலாம் நபி ஆசாத்தும் இதே கோரிக்கையை எதிரொலித்தார்.
மோடி உறுதி
டிசம்பரில், ஜம்மு-காஷ்மீரில் உள்ளாட்சி அமைப்பு தேர்தல்கள் நடைபெற்றன, இதில் குப்கர் கூட்டணி 100 க்கும் மேற்பட்ட இடங்களை வென்றது மற்றும் பாஜக 74 இடங்களை வெற்றி பெற்றது. இதை சுட்டிக் காட்டிய மோடி, மக்கள் பாஜக அரசின் முடிவுக்கு ஆதரவு தெரிவிப்பதை தேர்தல் முடிவுகளே காட்டிவிட்டன. எனவே சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தது செய்ததுதான் எனக் கூறியுள்ளார். ஆனால் பெரும்பாலான காஷ்மீர் மாநில அரசியல் தலைவர்கள் அதை ஏற்கவில்லை. எனவே ஆலோசனை 3 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.
தலைவர் பேட்டி
கூட்டத்திற்கு பிறகு, ஜே & கே அப்னி கட்சியின் அல்தாஃப் புகாரி நிருபர்களிடம் பேசுகையில், பேச்சுவார்த்தை இன்று நல்ல சூழ்நிலையில் நடைபெற்றது. அனைத்து தலைவர்களின் பிரச்சினைகளையும் பிரதமர் கேட்டறிந்தார். தொகுதி சீரமைப்பு முடிந்ததும் தேர்தல் செயல்முறை தொடங்கும் என்று பிரதமர் கூறினார் என்றார்.