வைரசோடு வாழப் பழகுங்கள்.. மத்திய அரசு திடீரென இப்படி கூற என்ன காரணம்? மே 17க்கு பிறகு என்ன நடக்கும்?
டெல்லி: "வைரசோடு வாழ பழகிக் கொள்ளுங்கள்.." இது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திடமிருந்து வெளி வந்துள்ள வார்த்தைகள். சுகாதாரத்துறை இணைச் செயலர் லவ் அகர்வால் நேற்று மாலை அளித்த பேட்டியில் கூறிய இந்த வார்த்தை, இந்தியர்கள் மனதில் பல்வேறு கேள்விக் கணைகளை தொடுத்து வருகிறது.
Recommended Video
2 மாத லாக்டவுன் காலத்திற்கு பிறகும், கொரோனா வைரஸ் பரவல் வேகத்தை குறைக்க முடியவில்லை என்கிறது ஆய்வு முடிவுகள். இதற்கு மேலும் லாக்டவுனை நீட்டித்து பலனில்லை என்ற முடிவுக்கு இதனால்தான் மத்திய அரசு வந்திருக்க கூடும். லாவ் அகர்வால் வார்த்தைகள், அந்த ஐடியாவின் எதிரொலியாகத்தான் இருக்க கூடும்.
மே 3ம் தேதிக்கு பிறகு மே 17 வரை லாக்டவுனை 3வது முறையாக நீட்டித்தது மத்திய அரசு. ஆனால், இது வழக்கமான லாக்டவுன் போல இல்லை. சிவப்பு மண்டலத்தில் கூட வாகனங்கள் இயங்கலாம் என்று தளர்வு அறிவித்த பிறகு, இதை எப்படி முழுமையான லாக்டவுன் என கூற முடியும். அனைத்து கடைகளையும் திறக்கவும் அனுமதி உள்ளது. அதிலும், மதுபானக் கடைகளிலோ வியாபாரம் கொடி கட்டி பறக்கிறது.
அத்தியாவசிய ஊழியர்கள் சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய கனடா பிரதமர்! குறைந்தபட்ச ஊதியமே ரூ. 1.35 லட்சம்
மேலை நாடுகள்
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ரஷ்யா என உலகின் வல்லரசு நாடுகள், லாக்டவுனுக்கு மத்தியிலும், கொத்துக் கொத்தாக கொரோனாவுக்கு பலி கொடுத்து வருகின்றன. ஆனால், இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள.. பொது சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு குறைவாக உள்ள நாட்டில் லாக்டவுன் தளர்த்தப்பட்டுள்ளது பலருக்கும் கேள்விகளை ஏற்படுத்தியிருக்கிறது. சிலருக்கு அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கடைகள் காலி
லாக்டவுன் தளர்வுக்கு பிறகு கடைகள் திறந்திருந்தாலும், வாடிக்கையாளர்கள் வராமல் காற்று வாங்கி வருவதாகத்தான் சிவப்பு மண்டலத்தில் உள்ள பல கடை உரிமையாளர்கள் கூறி வருகிறார்கள். மக்கள் தெருக்களுக்கு செல்ல அச்சப்படுவதுதான் இதற்கு காரணம். ஆனால் இப்படியே இருந்தால், இந்திய பொருளாதாரம் தாங்காது என்பதை அறிந்துதான், லவ் அகர்வால் வைரசோடு வாழ பழகிக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஊரடங்கு தளர்வு
வைரசோடு பழகுவது என்றால் எப்படி? அனைத்து துறைகளும் செயல்படும். பள்ளிகள் கூட திறக்கப்படும். ஆனால், மிகுந்த முன் ஜாக்கிரதையாக மக்கள் இருக்க வேண்டும் என்பதுதான், வைரசோடு பழகுவது என்பது அர்த்தம். மே 17ம் தேதிக்கு பிறகு பல பகுதிகளிலும் முழு ஊரடங்கு தளர்வு இருக்க கூடும். பத்தாம் வகுப்பு, பணிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது, இதற்கான ஒரு கட்டியம்தான்.
வாழ்க்கை முறை மாற்றம்
வைரசோடு வாழ பழக வேண்டும் என்பதோடு நிறுத்தவில்லை.. வாழ்க்கை முறையில் மாற்றம் தேவை என்று சுகாதாரத்துறை கூறியது. எல்லோர் முகத்திலும் மாஸ்க் கட்டாயமாகும். ஒர்க் பிரம் ஹோம் தாரக மந்திரமாகும். பைகளில் சானிட்டைசர் இல்லாதது குற்றமாகும். இரண்டு நபர்கள் அருகே ஒட்டி இருத்தல் என்பது பாவச் செயலாக பார்க்கப்படும். தொட்டுப் பேசுதல் பெருங்குற்றமாகும். இதுதான் வாழ்க்கை முறை மாற்றமாகும். கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை, இதுதான் உலகம் முழுக்க ஃபாலோ செய்யப்பட உள்ள புரோட்டோக்கால்.
சவால்கள்
அதேநேரம், இந்தியாவில் இந்த வாழ்க்கை முறை மாற்றம் சாத்தியமா என்பது மில்லியன் டாலர் கேள்வி. படிக்காத, பாமர மக்கள் இந்த வாழ்க்கை முறை மாற்றத்திற்கு எளிதில் மாற மாட்டார்கள் என்பது ஒரு பக்கம், மக்கள் தொகை நெருக்கம் என்ற பிரச்சினை மறுபக்கம். மேலை நாடுகளே திணறும் இந்த விஷயத்தில் இந்தியாவால் எப்படி வெற்றி பெற்று காட்ட முடியும் என்ற கேள்வி கண்டிப்பாக மனதின் ஓரத்தில் இருக்கத்தான் செய்யும். ஆனால் என்ன செய்வது? வைரசோடு வாழ பழகிக்கொள்ளுங்கள். வேறு வழி இல்லை.