ஜூன் 1ல் ஜோராகத் தொடங்கப்போகும் தென்மேற்குப் பருவமழை... அனுபவிக்கத் தயாராகுங்கள் மக்களே!
தென்மேற்குப் பருவமழை இந்த ஆண்டு ஜூன் 1 முதல் ஆரம்பிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டெல்லி: நடப்பாண்டு தென்மேற்குப் பருவமழை இந்த ஆண்டு ஜூன் 1 முதல் ஆரம்பிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த பருவமழை தற்போது இலங்கை மற்றும் கேரளாவை நோக்கி முன்னேறுவதாக கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தென்மேற்கு பருவமழை காலத்தில் தான் தென் மாநிலங்கள் மட்டுமின்றி வடமாநிலங்களிலும் அதிக மழை பெய்யும். அந்தமான் தீவுகளில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறி தென்படும். இந்திய வானிலை ஆய்வு மையம் இதனை கணித்து தென்மேற்கு பருவமழை தொடங்குவதை அறிவிக்கும்.
இலங்கையில் அதிக மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு 3 மடங்கு கட்டணத்தை உயர்த்த திட்டம்
ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்தில் தொடங்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அந்தமான் தீவுகளில் பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் முன்கூட்டியே தெரிந்தன.
இதையடுத்து வருகிற 27ந் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
தென்மேற்குப் பருவமழை
அடுத்த 48 மணி நேரத்தில் தென் அரேபியக் கடலின் சில பகுதிகள், மாலத்தீவுகள், லட்சத்தீவு மற்றும் கொமோரின் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை முன்னேறுவதற்கு சாதகமான சூழ்நிலைகள் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் தென்மேற்குப் பருவமழை வியாழன் அன்று தென் இலங்கையை உள்ளடக்கிய கேரளாவின் சில பகுதிகளை நோக்கி நீடிக்கத் தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.
கேரளாவில் பருவமழை
இது குறித்த அறிக்கைகளின்படி, கேரளாவின் சில பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது. மேலும் அடுத்த இரண்டு நாட்களில் தென் மாநிலம் மற்றும் லட்சத்தீவுகளில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. கேரளாவில் பருவமழையின் முன்னேற்றம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 1 மழை தொடங்க வாய்ப்பு
இதற்கிடையில் கேரளாவில் தென்மேற்குப் பருவமழை மே 27ம் தேதி தொடங்கும் என்று வானிலை மையம் முன்பு தெரிவித்திருந்தது. ஆனால் இப்போது தென்மேற்குப் பருவமழை கேரளாவில் ஜூன் 1 முதல் துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தியாவின் வடமேற்கு பகுதிகள் வறண்டு கடுமையான வெப்ப அலைகளின் பிடியில் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தென் இந்தியாவில் மழை அளவு
அதே வேளையில் தென் தீபகற்பத்தில் அதிக மழை பெய்து வருவதால் மார்ச் 1 முதல் இந்தியாவில் 3 சதவீதம் அதிக மழை பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் மார்ச் 1 முதல் வடமேற்கு இந்தியாவில் 65 சதவீதமும், மத்திய இந்தியாவில் 39 சதவீதமும் மழைப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதே போல கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் 27 சதவீதம் அதிக மழையும், தென் தீபகற்பத்தில் 76 சதவீதம் அதிக மழையும் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அருவிகளில் பெருக்கெடுக்கும் வெள்ளம்
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டால் தமிழகத்தின் தென்மாவட்டங்களிலும் அதிக மழை பெய்யும். மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழையால் குற்றாலம் அருவிகளிலும் வெள்ளமென கொட்டும். சீசனை அனுபவிக்க பல்லாயிரக்கணக்கான பயணிகள் குற்றாலத்திற்கு படையெடுப்பார்கள்.