டெல்லி மந்தையில் சந்தி சிரித்த ஈபிஎஸ்- ஓபிஎஸ் கோஷ்டி சண்டை.. மத்திய அமைச்சர் பதவி அம்போ!
Recommended Video
டெல்லி: மத்திய அமைச்சர் பதவி யாருக்கு என்பது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கோஷ்டிகளுக்கு இடையே சண்டை டெல்லியிலும் வெடித்தது. இதனால் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் அதிமுகவுக்கு வாய்ப்பு தரப்படவில்லை.
ஜெயலலிதா காலத்தில் அதிமுகவின் ஐவரணி அமைச்சர்களில் வலிமை வாய்ந்தவராக வலம் வந்தவர் வைத்திலிங்கம். 2016 சட்டசபை தேர்தலில் சசிகலா குடும்பத்தினர் வைத்திலிங்கத்தை தோற்கடித்தனர்.
இதை எதிர்பார்க்காத ஜெயலலிதா, வைத்திலிங்கத்தை ராஜ்யசபா எம்.பி.யாக்கினார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக பிளவுபட்ட போது முதல்வர் எடப்பாடி அணியில் நின்று சசிகலா உள்ளிட்டோருக்கு எதிராக பேசிவந்தார் வைத்திலிங்கம்.
காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் இணைந்து ஒரே கட்சியாகிறதா.? திடீரென சரத் பவாரை சந்தித்த ராகுல்
ரவீந்தரநாத் வெற்றி
பின்னர் அதிமுக அணிகள் இணைந்து லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது. இதில் துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்தரநாத் குமார் மட்டுமே சர்ச்சைக்குரிய வகையில் தேனி லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து மகனை எப்படியும் மத்திய அமைச்சராக்குவது என தீவிர முயற்சிகளில் இறங்கினார் ஓபிஎஸ்.
சீனியர் வைத்திலிங்கம்
அதே நேரத்தில் அதிமுகவில் சீனியர் எம்.பி.யான தமக்கே அமைச்சர் பதவி தரப்பட வேண்டும் என முதல்வர் எடப்பாடியை நேரில் சந்தித்து வலியுறுத்தினார் வைத்திலிங்கம். இதனால் மத்திய அமைச்சர் பதவி சீனியர் வைத்திலிங்கத்துக்கா? ஜூனியர் ரவீந்தரநாத்துக்காக? என்கிற சூழ்நிலை எழுந்தது. இது அப்படியே வெல்லப் போவது ஈபிஎஸ்ஸா? ஓபிஎஸ்ஸா? என டெல்லியில் விஸ்வரூபம் எடுத்தது.
பரபரப்பு காட்சிகள்
டெல்லியில் அதிமுக அணிகள் கடந்த சில நாட்களாக முகாமிட்டிருந்தன. மத்திய அமைச்சர்களாக பதவி ஏற்பவர்களுக்கு நேற்று பிரதமர் அலுவலகத்தில் இருந்து தொலைபேசி அழைப்புகள் சென்று கொண்டிருந்தன. அப்போது தமக்கும் தொலைபேசி அழைப்பு வந்துவிட்டது என ஊடகங்களுக்கு ரவீந்தரநாத் தரப்பில் தகவல் பரப்பப்பட்டது. ஆனால் பிரதமர் அலுவலக அதிகாரிகள் இதை மறுத்தனர். இது தொடர்பாக ரவீந்தரநாத்திடம் செய்தியாளர்கள் கேட்ட போது, பிரதமர் அலுவலக தொலைபேசி அழைப்புக்காக காத்திருக்கிறேன் என பல்டி அடித்துவிட்டார்.
வைத்திலிங்கம் விரக்தி
இதேபோல் அமைச்சர் பதவிக்காக காத்திருந்த வைத்திலிங்கத்திடமும் செய்தியாளர்கள் கேட்டிருந்தனர், அவரும் தமக்கு எந்த அழைப்பும் வரவில்லை. எந்த போனுக்காகவும் நானும் காத்திருக்கவில்லை என விரக்தியில் கூறிவிட்டார். முதல்வர் எடப்பாடி தரப்பில், அதிமுகவுக்கு அமைச்சர் பதவி கொடுப்பதாக இருந்தால் வைத்திலிங்கத்துக்கு கொடுக்க வேண்டும்; இல்லை எனில் கட்சியில் தேவையற்ற குழப்பங்கள் உருவாகும் என்கிற தகவலை பாஜக மேலிடத்துக்கு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். அதேபோல் ஓபிஎஸ் தரப்பு, லோக்சபா தேர்தலில் வென்ற ஒரே எம்.பி. ரவீந்தரநாத் குமார்தான். அதனால் அவருக்கு கட்டாயம் அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும்; அவருடன் சேர்த்து மற்றவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்தாலும் எங்களுக்கு பிரச்சனை இல்லை என தெரிவித்துவிட்டது.
கை கழுவிய பாஜக
அதிமுகவின் இந்த அக்கப்போர் டெல்லி மந்தையில் சந்தி சிரித்தது. பிரதமர் மோடி பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறும் வரையில் ரவீந்தரநாத் குமார்தான் மத்திய அமைச்சர் என ஊடகங்கள் தொடர்ந்து கூறின. ஆனால் கடைசியில் அதிமுகவில் யாருக்குமே அமைச்சர் பதவி இல்லை என கைவிரித்துவிட்டது பாஜக.
தர்ம யுத்தத்துக்கு அடிக்கல்
20 ஆண்டுகளுக்குப் பின்னர் மத்திய அமைச்சரவையில் இடம்பெறும் வாய்ப்பு அதிமுகவை தேடி வந்தது. ஆனால் டெல்லி வீதியில் அதிகாரப் பசிக்காக அடித்துக் கொண்டு கிடைத்த வாய்ப்பை கோட்டை விட்டு வெறுங்கையுடன் வீடு திரும்புகிறது அதிமுக. இந்த உச்சகட்ட கோஷ்டி மோதல் ஓயப்போவதில்லை. அதிமுகவில் புதிய தர்மத்துக்கான 'அடிக்கல்' நாட்டுவிழாவாகத்தான் இருக்கப் போகிறது என்பது மட்டும் யதார்த்தம்.