"ஒருவருக்கு ஒரு பதவி தான்!" அழுத்தமாக சொன்ன ராகுல்.. கெலாட்டிற்கு இடியாப்ப சிக்கல்! சசி தரூர் ஹேப்பி
டெல்லி: காங்கிரஸ் கட்சித் தலைவரைத் தேர்வு செய்யத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இது தொடர்பாக ராகுல் காந்தி கூறியுள்ள கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி 2019 பொதுத்தேர்தலுக்குப் பொறுப்பேற்று தலைவர் பதவியில் இருந்து விலகினார். புதிய காங்கிரஸ் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.
இதையடுத்து இடைக்கால தலைவராகச் சோனியா காந்தி தேர்வானார். கடந்த சில ஆண்டுகளாகவே புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க முடியாத நிலையில், சோனியா காந்தியே இடைக்கால தலைவராகத் தொடர்ந்தார்.

காங்கிரஸ்
இதனிடையே காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற கருத்தும் காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் அதிகரித்தது. மேலும், காங்கிரஸ் தலைவரைத் தேர்வு செய்யும் தேர்தல் நியாயமாகவும் வெளிப்படையாகவும் நடத்த வேண்டும் என்றும் நிர்வாகிகள் வலியுறுத்தினர். காங்கிரஸ் தலைவர் தேர்தல் அக். 17இல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான வேட்புமனுத் தாக்கல் வரும் 24ஆம் தேதி தொடங்குகிறது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி இதில் போட்டியிடத் தாயாராக இல்லை என்பதைத் திட்டவட்டமாகக் கூறி வருகிறார். இதனால் சோனியா காந்தியின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவரும் ராஜஸ்தான் முதல்வருமான அசோக் கெலாட் தலைவர் பதவிக்குப் போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல சசி தரூரும் தலைவர் பதவிக்குப் போட்டியிட உள்ளதை அறிவித்து உள்ளார். இந்தச் சூழலில் கேரளாவில் நடைப்பயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி கூறியுள்ள கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

ஒருவருக்கு ஒரு பதவி
கேரளாவில் பாத யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், "உதய்பூர் காங்கிரஸ் அமர்வு கூட்டத்தில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற முடிவு எடுக்கப்பட்டது. தலைவர் பதவிக்குத் தேர்தல் நடக்கும்போது, இந்த விதியை பின்பற்றுவார்கள் என நம்புகிறேன். காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவி என்பது வெறும் ஒரு பதவி மட்டுமில்லை. அது ஒட்டுமொத்த இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நம்பிக்கை அமைப்பு.

திட்டவட்டம்
காங்கிரஸ் தலைவர் என்பது கருத்தியல் சார்ந்தது. காங்கிரஸ் தலைவராக யார் வந்தாலும், அவர் ஒரு நம்பிக்கை அமைப்பாகச் செயல்படுவார். இந்தியாவின் பார்வையைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என்பதை நினைவில் கொண்டு செயல்பட வேண்டும். இந்த நாட்டின் நிறுவன கட்டமைப்பைக் கைப்பற்றியவர்களுக்கு எதிராக இப்போது ஒற்றுமை பாத யாத்திரையை முன்னெடுத்துள்ளோம்.

பாத யாத்திரை
வரம்பற்ற பணமும் எம்எல்ஏக்களை வாங்கவும், அச்சுறுத்தி அழுத்தம் தரும் ஒரு இயந்திரத்துடன் நாங்கள் போராடுகிறோம். கோவாவில் இதுதான் இப்போது நடந்தது. அதற்கு எதிராகத்தான் இந்த ஒற்றுமை யாத்திரையை முன்னெடுத்துள்ளோம். இந்தியாவில் தற்போது காணப்படும் வெறுப்பு மற்றும் வன்முறை நாட்டுக்கு நல்லதல்ல என்பதை மக்களிடம் முன்வைப்பதற்காக இந்த யாத்திரை தொடங்கி உள்ளோம்.

வெறுப்பு பிரசாரம்
பணிவு என்பது எப்போதும் இந்தியாவின் ஒரு அம்சமாக இருந்து வருகிறது. ஆனால் அதை தற்போதைய பாஜக அரசு தகர்த்து வருகிறது. பாஜக ஆர்எஸ்எஸ் கூட்டணி வெறுப்பைப் பரப்புவதற்கும், குறிப்பிட்ட சிலர் செல்வத்தைக் குவிப்பதற்கும் தொடர்பு உள்ளது. இதனால் நாட்டில் வேலையின்மை விகிதம் அதிகரித்து வருகிறது. பணவீக்கமும் அதிகரிக்கிறது. இதற்குக் காரணம் வெறுப்பு பிரசாரம் தான் என்பதை மக்கள் உணர தொடங்கி உள்ளனர்" என்று அவர் தெரிவித்தார்.

அசோக் கெலாட்
முன்னதாக ஒரு நபருக்கு ஒரு பதவி குறித்து அசோக் கெலாட் கூறுகையில், "இது நியமன பதவிகளுக்கு மட்டுமே பொருந்தும்.. தலைவர் தேர்தல் என்பது வெளிப்படையானது. இதில் எம்.பி., எம்.எல்.ஏ., அமைச்சர் அல்லது முதல்வர் என 9,000 பிரதிநிதிகளில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். ஒரு மாநில அமைச்சர் போட்டியிட விரும்புகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர் அமைச்சராக இருந்து கொண்டே கட்சித் தலைவராகச் செயல்பட முடியும்" என்றார். இப்போது ராகுல் காந்தி அதற்கு எதிரான கருத்தைத் தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications