பக்காமூவ்.. மோடி, அமித்ஷாவின் நம்பிக்கை.. கர்நாடகா பொறுப்பாளராக தர்மேந்திர பிரதான்..காரணமே இதுதான்
டெல்லி: கர்நாடகா சட்டசபை தேர்தலையொட்டி பாஜகவின் தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பிரதமர் மோடி, அமித்ஷாவின் நம்பிக்கையை பெற்ற இவர் தான் உத்தர பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சியை மலர செய்தார். இந்நிலையில் தான் தற்போது அவர் கர்நாடகா தேர்தல் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளது. பாஜகவில் பல மூத்த தலைவர்கள் உள்ள நிலையில் தர்மேந்திர பிரதானின் இந்த நியமனத்தின் பின்னணியில் உள்ள முக்கியமான விஷயங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
கர்நாடகாவில் கடந்த 2018 ல் சட்டசபை தேர்தல் நடந்தது. மொத்தம் 224 தொகுதிகள் உள்ள நிலையில் பாஜக 104 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆட்சியமைக்க 113 இடங்கள் தேவை என்ற நிலையில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும் தனிப்பெரும் கட்சியாக உருமாறியது.
இதற்கிடையே தான் 80 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ், 37 இடங்களில் வென்ற ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றின. இந்த ஆட்சி ஓராண்டுகள் மட்டுமே நடந்த நிலையில் கவிழ்ந்தது. 15க்கும் அதிகமான எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்.
பாஜக ‛குட்புக்’கில் அண்ணாமலை.. பரிசாக கிடைத்த கர்நாடகா தேர்தல் இணை பொறுப்பாளர் பதவி! என்ன காரணம்?
150 தொகுதிகளுக்கு பாஜக இலக்கு
இதையடுத்து மீண்டும் பாஜக அரியனை ஏறியது. எடியூரப்பா முதல்வரானார். சமீபத்தில் வயது முதிர்வால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்த எடியூரப்பாவின் சீடராக அறியப்படும் பசவராஜ் பொம்மை முதல்வராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் கர்நாடகா சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆட்சியை தக்க வைக்க பாஜக முயன்று வருகிறது. மொத்தம் 150 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்து பாஜக வியூகம் வகுத்து வருகிறது.
பாஜக வெற்றி சுலபமல்ல
இருப்பினும் பாஜக அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டு, எடியூரப்பாவின் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறும் முடிவு, பாஜகவுக்கு எப்போதும் பிளஸ் பாயிண்டாக இருக்கும் லிங்காயத் சமுதாயத்தின் தற்போதைய அதிருப்தி உள்ளிட்டவை வரும் தேர்தலில் தாமரை கட்சிக்கு அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் கூட எப்படியாவது வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் பிடிக்கும் முனைப்பில் பாஜக உள்ளது. பாஜகவுக்கு பிரதான எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கடும் போட்டியை கொடுக்கின்றன. இதுதவிர புதிய வரவாக ஆம்ஆத்மியும் இந்த தேர்தலில் அனைத்து தொகுதியிலும் களமிறங்க உள்ளது. இதனால் நான்குமுனை போட்டி நிலவும் நிலையில் பாஜக வெற்றி பெறுவது என்பது அவ்வளவு சுலபமானதாக இருக்காது என சர்வேக்களும், அரசியல் விமர்சகர்களும் கணித்துள்ளனர்.
தர்மேந்திர பிரதான் நியமனம்
இந்நிலையில் தான் கர்நாடகா மாநில தேர்தல் பொறுப்பாளராக மத்திய திறன்மேம்பாட்டுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானையும், இணை பொறுப்பாளராக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையையும் பாஜக நியமனம் செய்துள்ளது. கடந்த 2018 கர்நாடக தேர்தலில் முன்னாள் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கர்நாடகா மாநில தேர்தல் பொறுப்பாளராக இருந்த நிலையில் தற்பாது தர்மேந்திர பிரதான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் தர்மேந்திர பிரதான் நியமனத்தின் பின்னணியில் உள்ள முக்கிய விஷயம் வெளியாகி உள்ளது.
பொறுப்பாளர் பதவியில் அனுபவம்
பாஜகவில் தற்போது உள்ள தலைவர்களில் மிகவும் பொறுமையான, அதேநேரத்தில் சாமர்த்தியமான தலைவர்களில் ஒருவராக தர்மேந்திர பிரதான் அறியப்படுகிறார். ஒடிசாவை சேர்ந்தவர். ஓபிசி வகுப்பை சேர்ந்த இவர் தேர்தல் பொறுப்பாளர் என்ற பதவியில் மிகவும் அனுபவம் கொண்டவர். இதற்கு முன்பு கடந்தாண்டு நடந்த உத்தர பிரதேச தேர்தலில் இவர் தான் பொறுப்பாளராக செயல்பட்டு யோகி ஆதித்யநாத்தின் தலைமையில் மீண்டும் பாஜகவை அரியனை ஏற வைத்தார்.
உத்தர பிரதேசத்தில் வெற்றி
இதுதவிர பீகார், உத்தரகாண்ட், ஜார்கண்ட், மத்திய பிரதேச மாநில தேர்தல்களில் பொறுப்பாளர்களாகவும் செயல்பட்டு உள்ளார். இவர் பொறுப்பாளர்களாக செயல்பட்ட மாநிலங்களில் ஜார்க்ண்டை தவிர பிற மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. பீகாரில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சியுடன் பாஜக கூட்டணி ஆட்சி அமைந்த நிலையில் சமீபத்தில் கலைந்தது. அங்கு தற்போது பாஜக எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது. பீகாரில் தர்மேந்திர பிரதான் பொறுப்பாளராக இருந்த வரை கூட்டணி நன்றாகவே இருந்தது. அதன்பிறகு பூபேந்திர யாதவ் பொறுப்பாளரான நிலையில் பாஜக, ஐக்கிய ஜனதாதளம் கட்சியினர் இடையே விரிசல் ஏற்பட்டு கூட்டணி ஆட்சி கலைந்தது என்பது நினைவில் கொள்ளக்கூடியது.
பக்குவம் கொண்ட பிரதான்
மேலும் தர்மேந்திர பிரதான் எதிர்க்கட்சி உள்பட அனைத்து தலைவர்களுடன் கனிவோடு பழகக்கூடியவர். இதனால் பாஜகவுக்கு அப்பாற்பட்டு பிற கட்சி தலைவர்களும் அவருடன் நட்பு பாராட்டி வருகின்றனர். குறிப்பாக பீகார் முதல்வர் நிதிஷ் குமாரே, தர்மேந்திர பிரதானுடன் நெருக்கமாக இருந்தார். மேலும் தேர்தல் சமயத்தில் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டு விடாமல் தடுக்கும் வகையில் அனைத்து சமுதாய தலைவர்களையும் அரவணைத்து செல்வதும், கட்சி மேலிடம் மற்றும் மாநில தலைவர்கள் இடையே சிறந்த பாலமாக இருக்கும் பக்குவம் என்பது தர்மேந்திர பிரதானின் தனி ஸ்டைலாகும். இது தான் முந்தைய தேர்தல்களில் அவருக்கு உதவியது.
சவாலான நேரத்தில் பொறுப்பு
தற்போதைய சூழலில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் தென்மாநிலங்களில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டியது அவசியமாகும். ஆனால் கர்நாடகாவில் மட்டுமே பாஜக ஆட்சியில் உள்ளது. இதனால் கர்நாடகா தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க வேண்டிய கட்டாய சூழல் பாஜகவுக்கு உள்ளது. இதற்கு தலைவர்களை ஒருங்கிணைப்பது அவசியமாகும். கர்நாடகாவில் பாஜகவின் அடையாளமாக முன்னாள் முதல்வர் எடியூரப்பா இருந்த நிலையில் தற்போது அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். வரும் தேர்தலில் போட்டியிடவில்லை. இருப்பினும் கட்சி வளர்ச்சிக்கு பாடுபடுவதாக அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் எடியூரப்பாவின் இந்த அறிவிப்பு பாஜகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதனால் கர்நாடகா தேர்தலில் வெற்றி பெறுவது என்பது பாஜகவுக்கு சாதாரணமாக இருக்காது என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இத்தகைய சூழலில் தான் அனைத்து தலைவர்களையும் அனுசரித்து அதேநேரத்தில் கட்சி பணிகளை பொறுப்பாளராக சிறப்பாக மேற்கொள்ளும் தர்மேந்திர பிரதான் கர்நாடகா மாநில தேர்தல் பொறுப்பாளராக பாஜக நியமனம் செய்துள்ளது.
எடியூரப்பாவுடன் நெருக்கம்
முன்னதாக கர்நாடகாவில் முதல் முறையாக பாஜக ஆட்சிக்கு வந்து எடியூரப்பா முதல்வராக இருந்தபோது கட்சியின் மேலிட பொறுப்பாளராக 2011 முதல் 2013 வரை செயல்பட்டவர் தான் தர்மேந்திர பிரதான். எடியூரப்பா மீதான ஊழல் புகாரை தொடரை அவர் பதவியை இழந்த நிலையில் உட்கட்சி பூசல் ஏற்பட்டாலும் கூட ஆட்சியை பிற முதல்வர்கள் மூலம் ஆட்சியை முழுமையாக நிறைவு செய்ததில் தர்மேந்திர பிரதானின் பங்கு முக்கியமானது. மேலும் அன்று முதல் எடியூரப்பாவுடன் தர்மேந்திர பிரதான் நல்ல உறவை தொடர்ந்து வருகிறார். இது தற்போதைய கர்நாடகா தேர்தலுக்கு உதவும் என பாஜக மேலிடம் நம்புகிறது. மேலும் சமீபத்தில் எடியூரப்பா முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் கர்நாடகா அரசியல் கண்காணிப்பாளராக தர்மேந்திர பிரதான் செயல்பட்டார். எடியூரப்பாவுடனான நெருக்கம், கர்நாடகா அரசியலில் முன்அனுபவம் உள்ளிட்டவை ஆகியவற்றால் தர்மேந்திர பிரதான் தேர்தல் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மோடி, அமித்ஷாவின் நம்பிக்கை
மேலும் தர்மேந்திர பிரதான் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஆகியோரின் அதீத நம்பிக்கையை பெற்றவர். பல மாநில தேர்தல்களில் பொறுப்பாளர்களாக செயல்பட்டு தர்மேந்திர பிரதான் திறமையை நிரூபித்த நிலையில் தற்போது அவரையே கட்சி மேலிடம் கர்நாடகாவுக்கு பொறுப்பாளராக அனுப்பி உள்ளது என கட்சியினர் தெரிவித்துள்ளனர்.