தெலுங்கானா எம்பி கைது.. மோடி முதல் நட்டா வரை பதறும் பாஜக பெரிய தலைவர்கள்.. பின்னணி என்ன?
டெல்லி: தெலுங்கானாவில் மாநில அரசை கண்டித்து பாஜக எம்பி பண்டி சஞ்சய் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கொரோனா விதிகளை மீறியதாக அவர் கைது செய்யப்பட்டதற்கு பிரதமர் மோடி முதல் பாஜக தேசிய தலைவர் நட்டா வரை கண்டனம் தெரிவிக்கிறார்கள். இப்படி டெல்லியே பதறும் அளவுக்கு பின்னணியில் என்ன இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது.
119 சட்டசபை தொகுதிகளை கொண்ட தெலுங்கானா சட்டசபை க்கு கடந்த 2018 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இதில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி 103 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் கட்சி 6 இடங்களிலும் பாஜக 3 இடங்களிலும் வென்றது.
3 நாளுக்கு மேல் காய்ச்சலா? டாக்டரை பார்த்தேயாகனும்! ஓமிக்ரான்னு மெத்தனம் கூடாது! நிபுணர் எச்சரிக்கை
இந்த நிலையில் தெலுங்கானா மாநில பாஜக தலைவரும் எம்பியுமான பண்டி சஞ்சய், மாநிலத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இடமாற்ற உத்தரவை கண்டித்து ஒரு போராட்டத்தை டிசம்பர் மாதம் நடத்தினார். கொரோனா விதிகளை மீறி கூட்டத்தை சேர்த்ததாக இவர் மீது புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த 2ஆம் தேதி பண்டி சஞ்சய் தெலுங்கானா மாநில போலீஸாரால் கரீம்நகரில் கட்சி அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
உத்தரப்பிரதேச மாநிலம்
இவருக்கு கடந்த 5 ஆம் தேதி ஜாமீன் கிடைத்து வெளியே வந்துவிட்டார். எனினும் இவரது கைதிற்கு டெல்லியே கண்டனம் தெரிவித்துள்ளது. இதே போன்று உத்தரப்பிரதேச மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி தலைவர் அஜய் குமார் லல்லு கொரோனா விதிகளை மீறியதற்காக பாஜக ஆளும் உ.பி மாநில போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அப்போது காங்கிரஸ் கண்டனம் தெரிவித்த போது பாஜக, விதிகளை மீறியதால் கைது செய்தோம் என்றது. ஆனால் தற்போது பண்டியின் விஷயத்தில் பாஜக ஏன் முரண்பட்டிருக்கிறது என்பது வினோதமாக இருக்கிறது.
கேசிஆர்
ஜாமீனில் வெளியே வந்த பிறகு எம்பி பண்டி சஞ்சயை போனில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி கே சந்திரசேகர் ராவின் அரசை கண்டித்து போராட்டத்தை தொடருமாறு சஞ்சயிடம் கேட்டுக் கொண்டார். ஜனவரி 5 ஆம் தேதி பண்டி சஞ்சய் விடுதலையாவதற்கு முன்பே தேசிய பாஜக தலைவர் ஜே பி நட்டா ஒரு பேரணி நடத்த திட்டமிட்டிருந்தார். ஆனால் தெலுங்கானா போலீஸார் அதற்கு அனுமதிக்கவில்லை. இதையடுத்து தெலுங்கானா இடைத்தேர்தலில் பாஜக வென்றதை கேசிஆரால் பொருத்து கொள்ள முடியவில்லை. அதனால்தான் ஜனநாயகத்தை படுகொலை செய்யும் முயற்சியில் ஈடுபடுகிறார் என காரசாரமாக நட்டா பேசியிருந்தார்.
பலத்த வரவேற்பு
பண்டி சஞ்சய் விடுதலையான போது மத்திய இணையமைச்சர் பகவந்த் கூபா வரவேற்கிறார். பின்னர் சில நாட்களில் கேசிஆரை கண்டித்து ம.பி. முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த் பிஸ்வா சர்மா சர்மா, சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் ரமான் சிங், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் உள்ளிட்டோர் தெலுங்கானாவுக்கே வந்து குரல் கொடுத்தனர்.
கொரோனா விதிகள்
பாஜக ஆளும் மாநிலத்தில் கொரோனா விதிகள் மீறினால் கைது செய்கிறது. ஆனால் மற்ற மாநிலத்தில் கைது செய்தால் எதிர்க்கிறது, ஏன் இந்த நிலைப்பாடு என்பது குறித்து அரசியல் நிபுணர்கள் சில கருத்துகளை வெளியிட்டுள்ளார்கள். அதாவது தெலுங்கானாவில் தங்கள் இருப்பை காட்டி கொள்ள பாஜக முயல்கிறது. இதனால்தான் பிரதமர் மோடி முதல் நட்டா வரை பண்டி விஷயத்தில் தலையிடுகிறார்கள்.
இருப்பை காட்டும் பாஜக
தெலுங்கானாவில் பண்டியின் கைதை கண்டிப்பதன் மூலம் தனது இருப்பை அதிகரிக்க பாஜக முயல்கிறது. இதன் மூலம் அரசியல் ஆதாயம் கிடைக்கும். மேலும் காங்கிரஸ் கட்சியையும் அக்கட்சிக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி மீதான கவனத்தை திசை திருப்பும் முயற்சியாகவும் இருக்கலாம் என சொல்லப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க தெலுங்கானா மாநில இடைத்தேர்தலில் ஹூஸூராபாத் தொகுதியில் பாஜகவின் ஈட்டேலா ராஜேந்திரன் வென்றது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
டிஆர்எஸ் கட்சிக்கு பின்னடைவு
இவர் கேசிஆரின் டிஆர்எஸ் கட்சியிலிருந்து விலகி கடந்த ஜூன் மாதம் பாஜகவில் இணைந்தார். அது போல் துப்பாக்கா இடைத்தேர்தலிலும் பாஜகவிடம் தெலுங்கானா ராஷ்ட்ரீய கட்சி தோல்வி அடைந்துளளது. கிரேட்டர் ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலிலும் டிஆர்எஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவே ஏற்பட்டது.
டிஆர்எஸ்
இந்த வெற்றியெல்லாம் பாஜகவால் ஏற்பட்டதல்ல என்றும் டிஆர்எஸ் கட்சியிலிருந்து விலகிய தனிநபர்களால் ஏற்பட்டது என்பதை கேஆர்எஸ் நன்கு அறிந்ததாகவும் சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸுக்கு பதிலாக பாஜக மாறி வருவதையும் கேசிஆரின் மனதை சிதறடித்தது. எனவே ஈட்டேலா ராஜேந்திரன் மீதான கவனத்தை திசை திருப்ப எம்பி பண்டி சஞ்சயுடன் நேருக்கு நேர் கேசிஆர் மோதியதாகவே பார்க்கப்படுகிறது. ஆக மொத்தம் 2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தெலுங்கானா சட்டசபை தேர்தலுக்காக இப்போதே அடி போட பாஜக தொடங்கிவிட்டது. இது மட்டும் நடக்கவே கூடாது என்ற முனைப்பில் முதல்வர் சந்திரசேகர ராவ் தன்பாணி அரசியலை கையிலெடுக்கிறார்.