தனியாருக்கு அனுமதி! இலவசத்திற்கு செக்! மின்சார திருத்த மசோதா.. எல்லா பக்கத்திலும் கிளம்பிய எதிர்ப்பு
டெல்லி: இன்று மத்திய அரசு கொண்டு வந்த மின்சார சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் மிகக் கடுமையான எதிர்ப்புகளைப் பதிவு செய்துள்ளனர்.
Recommended Video
நாடாளுமன்றத்தில் இப்போது குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. விலைவாசி உயர்வு தொடங்கி பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர்ச்சியாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்தச் சூழலில் இரு நாள் விடுமுறைக்குப் பின்னர், நாடாளுமன்றம் இன்று கூடியது. அப்போது இன்று மக்களவையில் மின்சார சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இலவசத்துக்கு நோ.. தனியாரிடம் மின்சாரம்! மத்தியஅரசின் மின்சார சட்டத்திருத்த மசோதாவில் இருப்பது என்ன?
மின்சார சட்டத் திருத்த மசோதா
இந்த சட்டத் திருத்த மசோதாவை பல்வேறு எதிர்க்கட்சிகளும் எதிர்த்து வருகின்றனர். ஏற்கனவே, மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்பட்டு வரும் நிலையில், இது மத்திய அரசுக்கே மேலும் அதிகாரத்தைக் கொடுக்கும் வகையில் உள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்த சட்டத் திருத்த மசோதாவைக் கடந்த புதன்கிழமை தான் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து இருந்தது. இதில் சர்ச்சைக்குரிய வகையிலான பல்வேறு அம்சங்கள் உள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது.
விநியோகம் நிறுத்தப்படும்
மின்சார உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு மாநில மின்வாரியங்கள் உரியக் காலத்தில் பணம் கொடுப்பதில்லை என்ற புகார் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு மின் உற்பத்தி நிலையங்களுக்கு ஆதரவாக போதுமான வங்கி உத்தரவாதத்தைக் கொடுக்காத மின் வினியோக நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்குவதை நிறுத்தவும் மத்திய அரசுக்கு இந்த மசோதா அதிகாரம் அளிக்கிறது.
தேசிய ஆணையம்
மேலும், ஒரு மாநிலத்தின் மின் உற்பத்தியை மற்ற மாநிலங்களுக்குப் பங்கிட்டுத் தர அந்த மாநிலத்தின் ஒப்புதல் தேவையில்லை என்ற ரீதியிலும் சில அம்சங்கள் இதில் இடம் பெற்று உள்ளதாகக் கூறப்படுகிறது. மின்கட்டணங்களை இனி தேசிய ஆணையமே முடிவு செய்யவும் வழிவகை செய்துள்ளது. மின் நிறுவனங்களின் நலனைப் பாதுகாக்கக் குறைந்தபட்ச விலையையும் பொதுமக்களைப் பாதுகாக்க அதிகபட்ச விலையையும் மத்திய அரசு நிர்வகிக்கும் என்று கூறப்பட்டு உள்ளது.
தனியார் நிறுவனங்கள்
மானியங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மின் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படும் நிலையில், அதைத் தடுக்க இதைக் கொண்டு வந்துள்ளதாக மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது. இருப்பினும், இது மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் இருப்பதாக மாநில அரசுகள் குற்றஞ்சாட்டுகின்றன. அனைத்தையும் விட மின் விநியோகத்தில் தனியார் நிறுவனங்களை நேரடியாக ஈடுபடவும் இது அனுமதி அளிக்கிறது.
எதிர்ப்பு
மின்சார விநியோகத்தில் தனியார் பங்களிப்பை அளிப்பதன் மூலம் போட்டியை உருவாக்க முடியும் என்றும் இதன் மூலம் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு மின்சாரம் கிடைக்கும் என்றும் இத்திட்டத்தின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இருப்பினும், இந்தத் திட்டத்தைக் கண்டித்து நாடு முழுவதும் இருக்கும் 27 லட்சம் மின்சார ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். அவர்கள் கூறும் காரணமும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
ஏன்
தனியார் நிறுவனங்கள் மின் விநியோகம் செய்யலாம் என்றாலும் கூட, அவை நாடு முழுவதும் கட்டாயம் மின் விநியோகம் செய்ய வேண்டும் என்ற கட்டாயமில்லை. எனவே, தனியார் நிறுவனங்கள் அதிக லாபம் தரும் மக்கள் நெருக்கடி அதிகம் உள்ள பகுதிகளில் மட்டுமே சேவையைத் தரும். அதேநேரம் அரசு நிறுவனங்கள் கட்டாயம் அனைத்து பகுதிகளில் மின் விநியோகத்தைத் தர வேண்டும் என்பதால் நஷ்டம் தரும் மக்கள் நெருக்கடி குறைவாக உள்ள பகுதிகளுக்கு மின் சேவையைத் தர வேண்டும்.
எதிர்ப்பு
அதாவது லாபம் தரும் பகுதிகளில் மட்டுமே தனியார் நிறுவனங்கள் மின் சேவையை வழங்கும் என்றும் நஷ்டம் தரும் பகுதிகள் எல்லாம் அரசு தலையில் கட்டப்பட்டுவிடும். இதன் மூலம் நஷ்டம் அதிகரிக்கவே செய்யும் என்பது இவர்களின் வாதம். இருப்பினும், இதையெல்லாம் தாண்டி இந்தச் சட்டம் இன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
நாடாளுமன்ற நிலைக்குழு
இதில் இலவச மின்சாரம் உட்பட மானியங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய அமைச்சர் விளக்கம் அளித்தார். இருப்பினும், அதை ஏற்க மறுத்த எதிர்க்கட்சி எம்பிக்கள் இந்தத் திட்டத்திற்குத் தொடர்ந்து கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இதனை நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வுக்கு அமைச்சர் பரிந்துரை செய்துள்ளார். அதன்படி இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழு அவைத்தலைவர் அனுப்பி வைத்தார்.