துணை ராணுவ படையில்.. அக்னிபாத் வீரர்கள் இணைவதில் உள்ள பெரிய சிக்கல்! வார்ன் செய்யும் வல்லுநர்கள்
டெல்லி: மத்திய அரசு சமீபத்தில் அக்னிபாத் திட்டத்திற்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வந்தாலும் கூட, அதை அமல்படுத்த சவாலாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video
மத்திய அரசு சமீபத்தில் அக்னிபாத் என்ற புதிய ராணுவ ஆள்சேர்ப்பு திட்டத்தை அறிவித்து இருந்தது. இத்திட்டத்தின் கீழ் இணையும் அக்னி வீரர்கள் 4 ஆண்டுகள் வரை பணியில் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர், அக்னி வீரர்களில் இருந்து 25% மட்டுமே ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். மற்ற 75% பேர் பாதுகாப்புப் படையில் இருந்து விடுவிக்கப்படுவார்கள்.

சலுகை
மத்திய அரசின் இந்தத் திட்டத்திற்கு எதிராகப் பல மாநிலங்களில் போராட்டம் நடைபெறுகிறது. இதையடுத்து முதலில் 21ஆக இருந்த அதிகபட்ச வயது வரம்பு, ஓராண்டு மட்டும் 23ஆக அதிகரிக்கப்பட்டது. மேலும், அக்னிபத் திட்டத்தில் சேர்பவர்களுக்குத் துணை ராணுவம் மற்றும் அசாம் ரைப்பில்ஸ் பிரிவில் 10% ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இவை எல்லாம் எப்படி நடக்கும் என்பது புரியாத புதிகாவே உள்ளது.

குழப்பம்
'அக்னி வீரர்களுக்கு' முன்னுரிமை என்ற அறிவிப்பு வெளியாகி இரு நாட்கள் ஆன பின்னரும் கூட இது தொடர்பான தெளிவான வழிகாட்டுதல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இப்போது எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை , இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படை, சாஸ்த்ரா சீமா பால் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு ஆகிய ஐந்து துணை ராணுவப் பிரிவுகளில் 73,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. அதேபோல அசாம் ரைபிள்ஸ் பிரிவிலும் பல ஆயிரம் வீரர்களுக்கான பணியிடங்கள் காலியாக உள்ளது

மீண்டும் பயிற்சி
தவிர, யூனியன் பிரதேசங்களில் உள்ள போலீஸ் படைகளிலும் 18,124 பணியிடங்கள் காலியாக உள்ளன. மத்திய அரசின் அறிவிப்பு குறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "அக்னி வீரர்கள் எந்த விதியின் கீழ் பணியமர்த்தப்படுவார்களா என்பது குறித்த தெளிவான விளக்கம் இல்லை. தற்போதுள்ள விதிகளின்படி, முன்னாள் ராணுவ வீரர்களுக்குத் துணை ராணுவப் படைகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது. இருப்பினும், அவர்கள் மீண்டும் ஒருமுறை பயிற்சி எடுக்க வேண்டும். ஏனென்றால் துணை ராணுவப் படைக்கான தேவைகள் வேறானவை" என்றார்.

காரணம்
துணை ராணுவப் படையில் உள்ள வீரர்களுக்கு எல்லை ரோந்து, போதைப்பொருள் கடத்தல், கால்நடைகள் மற்றும் ஆயுதங்கள் கடத்தல், தேர்தல் பணிகள், போராட்டங்களின் போது சட்டம் ஒழுங்கை நிர்வகித்தல், விஐபி பாதுகாப்பு, பெருநகரங்கள் மற்றும் விமான நிலையங்களில் பயணிகளைச் சோதனை செய்தல் போன்ற பல்வேறு பணிகள் உள்ளன. இதன் காரணமாகவே அவர்களுக்குத் தனிப் பயிற்சி தேவை

சிக்கல்
இது தொடர்பாக மற்றொரு அதிகாரி கூறுகையில், "அக்னிபாத் திட்டத்தில் சேர ஊக்குவிப்பது சவாலாக இருக்கும். ஏனெனில் ராணுவத்தில் 4 ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு, வேறு வழியின்றி வேலைக்காக அவர்கள் துணை ராணுவப் படையில் சேர வேண்டிய கட்டாயம் ஏற்படும். இது உளவியல் ரீதியாகவும் கூட அவர்களைப் பாதிக்க வாய்ப்பு உள்ளது" என்றார்,

பைலட் திட்டம்
அக்னிபாத் திட்டம் போன்ற பெரிய திட்டங்கள் தொடங்கப்படும் போது, வழக்கமாகச் சிறிய அளவிலான பைலட் திட்டங்கள் முன்னெடுக்கப்படும். இதன் மூலம் திட்டத்தில் ஏற்படும் பிரச்சினைகளை எளிதாகக் கண்டறியலாம். ஆனால், அதுபோன்ற பைலட் திட்டங்கள் எதுவுமின்றி இந்த திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது ஆச்சியம் தருவதாகவே வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

உள்துறை அமைச்சகம்
10 லட்சம் பேர் கொண்ட துணை ராணுவப் படை, உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள மிகப்பெரிய வேலைவாய்ப்பு உருவாக்கும் நிறுவனங்களில் ஒன்றாகும். இதற்கிடையில், துணை ராணுவப் படைகளில் பணியமர்த்துபவர்களின் சராசரி வயதைக் குறைக்க 'அக்னிபத்' திட்டம் உதவும் என்று உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது, அதில் இணைபவர்களில் சராசரி வயது சுமார் 28-35 ஆகும். அக்னிபாத்தில் இருந்து வரும் இளைஞர்கள் வயது குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications